இந்தியாவே! இந்தக் கொடுமை ஏனோ?

"குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' பொறுப்பற்ற போக்கில் இந்தியா செயற்படுகின்றது என்று விசனப்படு கிறார்கள் ஈழத் தமிழர்கள். இப்படி ஐந்து வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் எழுதியிருந்தோம்.

அதை உறுதிப்படுத்துவது போல நடந்து கொள்கின்றது பாரத தேசம்.

இந்தியா தனது உயர்மட்ட அதிகாரிகள் மூவரைக் கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் திடுதிப்பென சத்தம் சந்தடியின்றி விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பிய போது, அதை அறிந்து ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மன தில் மகிழ்ந்துதான் போனார்கள்.

தென்னிலங்கைச் சிங்களத்தின் பேரினவாதப் பிடியில் சிக்கிப் பெரும் கோரயுத்த அழிவை எதிர்கெண்டு நிற்கும் ஈழத் தமிழினத்துக்காகக் குரல் எழுப்பும் நன்னோக்கோடு, இந்தியா காய் நகர்த்துகின்றது; கடைசியாகப் புதுடில்லி ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நீதிக்கண் ணோடு நோக்கத் தயாராகி விட்டது, என்றெல்லாம் ஈழத் தமிழர்கள் புளகாங்கிதம் கொண்டனர்.

ஆனால், "சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை' என் பது இப்போதுதான் அம்பலத்துக்கு வந்திருக்கின்றது. அதை உணர்ந்து, ஈழத் தமிழர்கள் வெறுப்பும், விசனமும், எரிச்சலும், ஆத்திரமும் அடைந்திருக்கின்றார்கள்.

நியாயமான வாழ்வுக்கும் நீதியோடு கூடிய உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பிய ஈழத் தமிழர்களை ஆயுதப் போராட்டத்தின்பால் திசை திருப்பிவிட்டு, அவர்களுக்கு அரைகுறை ஆயுதப் பயிற்சிகளை வழங்கி, பல விடுதலை இயக்கங்களை ஒரே சமயத்தில் ஒன்றுக்கொன்று போட்டியோடும் உள் முரண்பாடுகளோடும் உருவாக்கி உலவ விட்டதிலிருந்து

அரைகுறை அவியலாக இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாண சபை என்ற மாய மானைத் தோற்றுவித்து, அதைக் காட்டி, அந்தத் திட்டத்தைத் தமிழர்கள் மீது வல் வந்தமாகத் திணித்தமை முதல்கொண்டு

இப்போது உயர்மட்டக் குழுவைக் கொழும்புக்கு அனுப்பி தற்போதைய இலங்கை அரசுத் தலைமைக்கு "செமடோஸ்' கொடுத்ததாகக் காட்டிக் கொண்டமை வரை யில்
இலங்கை விவகாரத்தில் புதுடில்லி செய்தவை எல்லாமே பித்தலாட்டம்.

தன்னுடைய பூகோள அரசியல் நலன்களை எட்டுவதற்காகவும், அவற்றை நிலைப்படுத்தி ஸ்திரப் படுத்துவதற்காகவும் அருகில் இருந்த சிறிய தேசத்திலும், அதில் வசிக்கும் சிறுபான்மையினர் உட்பட தேசிய இனங்கள் மீதும் மிளகாய் அரைத்த வேலையையே இந்தியா செய்திருக்கின்றது; தொடர்ந்தும் செய்தும் வருகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஆயுதத் தளபாடக் கொள்வனவுக்கு இலங்கை அரசு சீனாவினதும் பாகிஸ்தானினதும் பக்கம் சாய்வதாகக் கூறி அதனைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் பண்ணிய இந்தியா, அந்த விடயத்தை வைத்துக்கொண்டே, இதுவரை சீனாவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்த மன்னார் எண்ணெய் வள ஆய்வை மெல்லப் பிடுங்கிச் "சுவாஹா' செய்துகொண்டு விட்டது.

கொழும்புக்கு வந்த இந்திய உயர்மட்டக்குழு ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து அவர்களின் நலன் குறித்து கொழும்புடன் ஆர்வம் காட்டிப் பேசுவதாக வெளியே நடிப்புக் காட்டிக்கொண்டு, தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டுள்ளது.

எண்ணெய் வள ஆய்வு மற்றும் அகழ் வுப் பணிக்கான உரிமையைப் பிடுங்கிக்கொண்டு, தமிழர் தாயகப் பிரதேசத்தின் வளத்தைச் சுரண்டி, சூறையாடி, ஏப்பம் விடும் திட்டத்தைக் கனகச்சிதமாக முன்னெடுக்கின்றது.

இலங்கையில் இனப்போர் உக்கிரமாக நீடித்துக் கொண் டிருக்கின்றது. சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்களின் தாயகம் மீதான உரிமைக்கான நியாயத்தை யுத்த களத்தில் மோதி உரசிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சமயத்தில் பெரும் கொடூரப் போரின் ஆக்கிரமிப்புக்கும் அதனால் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் நலிவு களுக்கும் முகம் கொடுத்து, அடிமைத்தளையில் சிக்குண்டு அல்லற்பட்டு அவலப்பட்டபடி அந்தரிக்கின்றது ஒரு சிறு பான்மை இனம்.

அவர்களது தாயக பூமியிலிருந்து அவர்கள் வல்வந்தமாக விரட்டியடிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உள்ளூர் வளங்களைச் சூறையாடும் விதத்தில் சுரண்டல் நோக்கோடு அந்நிய சக்திகள் இதற்குள் தலையை நீட்டுவது மோசமான இழி செயலாகும். ஈன நட வடிக்கையாகும்.

"எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம்' என்ற கணக்கில் அமைந்த கொடூரமாகும்.


மன்னாரில் எண்ணெய் அகழ்வு என்ற பெயரிலும், சம் பூரில் அனல் மின் நிலையத் திட்டம் என்ற நாமத்திலும்,

புல்மோட்டையில் இல்மனைட் கனிவள அகழ்வு என்ற வடிவிலும் இக்கட்டுச் சமயத்தில் ஈழத் தமிழர்களின் மூல வளங்களைச் சூறையாடுவதும்

ஈழத் தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் பௌத்த சிங்கள ஆட்சிப் பீடத்துடன் பேரம் பேசி, ஈழத் தமிழரின் தாயக மூலவளத்தை அபகரிப்பதும்

அதுவும் தமது தாயகத்தைக் காப்பதற்கான வாழ்வா, சாவாப் போராட்டத்தில் ஈழத் தமிழினம் அழுந்திக் கொண் டிருக்கையில் அந்தச் சுரண்டலை மேற்கொள்வதும்

நாம் முன்னர் கூறியபடி, தவிச்ச முயலடிக்கும் நடவடிக்கைதான்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் ஈனத் தனம்தான். எரிந்த வீட்டில் பிடுங்கும் அபகரிப் புத்தான். கொள்ளையிட்ட பொருளை கொள்ளைக்கார னோடு ஒப்பந்தம் செய்து கொள்வனவு செய்யும் அபத்தம் தான்.

இந்தியாவே!

நொந்து போயிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்யவேண்டிய நீதியை மறந்து,

அவர்களது தாயக வளத்தை

அவர்களது சம்மதமோ, இணக்கமோ, உடன்பாடோ இன்றி அவர்களின் இந்த நலிவு சமயத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புத் தரப்புடன் சேர்ந்து அபகரிக்கும் கொடுமை ஏனோ உனக்கு?


வர்த்தக ஒப்பந்தம், கூட்டு வியாபார முயற்சி என்ற பெயர்களில் கொழும்புடன் புதுடில்லி செய்யும் இந்த உடன்பாடும் அதைத் தொடரும் நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் பல விபரீதங்களுக்கு வித்திடும் மற்றொரு வரலாற்றுத் தவறின் ஆரம்பமாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Comments