தமிழர் தேசிய சிதைப்புக்கு மறுபெயர் மனிதாபிமானமா?

ஈழத் தமிழர் தாயகம் மீது கொடூர யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்ட முன்னைய சந்திரிகா அரசு, அந்தப் போர் குறித்து விநோதமான விபரீதமான கோட்பாடு ஒன்றையும் வியாக்கியானம் செய்து முன்வைத்தது.

"சமாதானம்' என்ற உன்னத இலட்சியத்தை அடை வதற்கு போர் என்ற "அழிவு' நடவடிக்கை அவசியமா கின்றது என்ற அடிப்படையில் "சமாதானத்திற்கான போர்' என்ற விபரீதக் கோட்பாட்டை சந்திரிகா முன் வைத்தபோது அந்தக் கருத்தியல் வித்தையை சர்வதேச நாடுகள் அப்படியே அப்போது விழுங்கிக் கொண்டன.

அதேபோன்ற பிறிதொரு "கயிறை' இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் திரிக்கின்றார். அதையும் சர்வதேசம் விழுங்கிக் கொள்ளுமா என்பதே இன்றைய கேள்வி.

கொடூரப் பேரழிவையும், போரழிவையும் தரும் மோசமான யுத்தம் ஒன்றைத் தமிழர் தாயகம் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் அவர், இது யுத்தமே அல்ல என்று அடித்துக் கூறுகின்றார். "பயங்கரவாதிகளின்' பிடியிலிருந்து வடக்கு மக்களை விடுவிக்கும் "மனிதாபிமான நடவடிக்கைதானாம் இது.

' பல்லாயிரக் கணக்கான துருப்புகள், டாங்கிகள், "மல்றிபரல்கள்', பீரங்கிகள், பல டசின் குண்டு வீச்சு விமானங்கள் ஆகியவற்றுடன் கடற்படை, விமானப்படை, இராணு வம், பொலிஸ், ஊர்காவல் படை மற்றும் துணைப்படைக் குழுக்கள் என எல்லாப் பாதுகாப்புப் பலத்தை யும் ஒருங்கு சேர தமிழர் தாயகம் மீது பாய விடுத்துக் கொண்டு வெகு "ஸிம்பிளாக' இது யுத்தமேயில்லை என்று பிரகடனப் படுத்துகின்றார் நாட்டின் தலைவர்.

அவர் ஏவி விட்டிருக்கும் கொடூர குரூரமான கோர யுத்தத்தின் பேரழிவிலிருந்து அப்பாவி மக்களை மீட்பதற்கான காப்பாற்றுவதற்கான மனித நேயப் பணிகள் குறித்து அவசரமாகவும், அவசியமாகவும் சிந்திக்க வேண்டிய இத்தருணத்தில் அப்படித் தமிழர் தாயகம் மீது தாம் தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்தையே "சமுதாயத்தை மீட்பதற்கான மனித நேயப் பணியாக' சித்திரிக்க முயலும் நாட்டின் தலைவர் குறித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் விசனப்படுகின்றார்கள் தமிழர்கள்.

ஓர் அந்நிய எதிரிக்கு எதிரான யுத்தத்தை, அந்நிய தேசத்தில் கட்டவிழ்த்து விட்டிருப்பது போல, தமிழர் தாயகம் மீது இலங்கை அரசு போர் தொடுத்திருக்கின்றது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழர் தாயகம் மீது கண்மூடித்தனமாக ஷெல், பீரங் கித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. வீடு வாசல்கள் மீது இலக்கின்றி விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல்கள் கொடூரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

ஆழ ஊடுருவும் அணிகளால் நடத்தப்படும் கிளைமோர்த் தாக்கு தல்களில் அப்பாவிகள் உயிரிழக்கின்றனர். இந்நடவடிக்கைகளினால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.

உடல் சிதறிப் பலியாகின்றனர். அவர்களின் வீடு வாசல்கள், உடைமைகள் நாசமாக்கப் படுகின்றன. லட்சக்கணக்கில் தமிழர்கள் ஏதிலிகளாக இடம்பெயர்கின்றனர்.

அவர்களின் அன்றாட ஜீவனோபாய முயற்சிகளோ நாசமாக்கப்படுகின்றன. வயிற்றுப் பிழைப்புக்கும் வழியின்றி வீடு வாசல்களையும், உடைமைகளையும், சொந்த பந்தங்களையும் துறந்து மர நிழல்களிலும், வெயிலிலும், மழையிலும், குளிரிலும் அல்லாடும் பரிதாப நிலைமை அவர்களுக்கு.

உணவு, உடை, சுகாதார நலன் போன்ற அடிப்படை வசதிகள் கூடக் கிட்டாத மனிதப் பேரவலத்துக்குள் தமிழ் மக்கள் இன்று ஆழ்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களை விளக்கமாகவும், விவரமாகவும், புள்ளி விவர அடிப்படைகளுடனும் நாடாளுமன்றில் சம்பந்தர் எம்.பி. வெளிப்படுத்தியிருந்தார்.

இத்தகைய கொடூர மனிதப் பேரவலத்துக்குள் தமிழர்களை ஆழ்த்தும் யுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தமிழர் தாயகம் மீது ஏவி விட்ட படியே, அந்தப் பேரவலத்தை ஏற்படுத்தும் கொடூரத்தை "மனித நேயப் பணி' என்று அர்த்தப்படுத்தி சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்றுகின்றார் நாட்டின் தலைவர்.

தமிழர்கள் ஒரு தேசிய இனக்கட்டமைப்பாக வாழ்வதற்கான அடிப்படைக் கட்டுமானங்களைத் தகர்த் தெறிந்து, சிதைத்தழிக்கும் கைங்கரியத்தையே தென்னிலங்கைப் படைகள் இப்போது தமிழர் தாயகம் எங்கும் மேற்கொண்டு வருகின்றன என்பது கண்கூடு.

புலிகளின் "பயங்கரவாதிகளின்' பிடியிலிருந்து கிழக்கை மீட்டதாக மார்தட்டும் கொழும்பு அரசு, அந்தத் தமிழர் தாயகப் பூமியை சிங்கள மயப்படுத்தும் நாசகார வேலையை எப்படிக்கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பது இன்று தமிழர் தேசம் கண்டு விக்கித்துப் போயிருக்கும் விடயம்.

அப்படித் தமிழர் தேசியத்தின் அடிப்படைகளை சின்னாபின்னப்படுத்தும் தனது பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புத் திட்டத்துக்கே மஹிந்தரின் அரசு இன்று "மனிதாபிமான நடவடிக்கை' என்று விநோதப் பெயர் சூட்டிமகிழ்கின்றது.

அதுவே, வன்னியை இலக்கு வைத்த இந்த யுத்த நடவடிக்கையினதும் மைய இலக்கு என்பது இலகுவாக ஊகிக்கத் தக்கதே.

இந்தப் பின்புலத்தில் "மனிதநேயப் பணி' என்ற பெயரில் மஹிந்தர் முன்னெடுக்கும் யுத்தத்தின் சூட்சுமத்தை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளுமா?


Comments