கிழக்குப் பிரசாரங்களும் தொடரும் தாக்குதல்களும்

இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை தனது ஆழுமையின் சின்னமாக உறுதிப்படுத்த இந்தியா முயன்று வருகின்றது. முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பயணத்தை தவிர்ப்பது வழமை. ஆனால் இந்திய தரப்பின் நடவடிக்கை அந்த வழமையை மாற்றும் தன்மையைக் கொண்டது.

இந்திய பிரதமரின் பாதுகாப்புக்கு என 3,000 சிறப்பு படையினரை தரையிறக்குவதுடன், வான் பாதுகாப்பு ராடர்கள், தாக்குதல் வாகனங்கள், கண்காணிப்பு விமானங்கள், போர்க் கப்பல் கள் போன்றவற்றையும் இலங்கைக்கு நகர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இரு இலக்குகள் தெளிவானவை. ஒன்று இலங்கையின் எதிர்ப்புகளையும் மீறி தனது படைகளை தரையிறக்கும் வல்லமை உண்டு என்பதையும், இந்து சமுத்திர பிராந்தியம் தனது கையைவிட்டு செல்லவில்லை என்பதையும் இந்தியா நிரூபிக்க முயன்று வருகின்றது. இரண்டாவதாக சார்க் மாநாட்டை நடத்துவதன் மூலம் இலங்கை தொடர்பான மேற்குலகின் பிரசாரங்களை முறியடித்து அதன் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா முயல்கின்றது.

இந்த இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் 10 மில்லியன் டொலர் நிதி உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட அறுகம்குடா பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்த தினத்தில் கிழக்கின் பாதுகாப்பு தொடர்பான அரசின் பிரசாரங்கள் கடுமையான பின்னடைவுகளை சந்தித்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் அறுகம்குடா மிகவும் அதிகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் பகுதியாகும். பொத்துவில் அறுகம்குடா பனாமா ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்த பாலம் அதற்கு வலுச்சேர்க்கும் உத்திகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வருமானத்தில் கணிசமான அளவு வருமானத்தை ஈட்டித்தருவதுண்டு. அங்கு நடத்தப்படும் விழாக்கள் கிழக்கு மாகாணத்தை நோக்கி அனைத்துலகத்தின் கவனங்களை திசைதிருப்பக் கூடியவை.

கிழக்கு மாகாணசபை தேர்தலிற்குப் பின்னர் ஏறத்தாள 1500 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதிக்கான முதலீடு கிழக்கு மாகாணத்திற்கு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிழக்கில் உக்கிரம் பெற்றுவரும் மோதல்கள் இத்தகைய முதலீட்டை ஊக்குவிக்குமா என்பது சந்தேகமே.

சார்க் மாநாடு ஆரம்பிப்பதற்கு ஏறத்தாள ஒரு மாதம் உள்ள நிலையில் கிழக்கில் ஒரு இயல்புநிலை ஏற்பட்டது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது பொருளாதார ரீதியில் அரசுக்கு பல சாதகங்களை ஏற்படுத்தலாம்.

அரசியல் சாயம் பூசப்படும் விழாக்களும், படை நடவடிக்கைகளும் தென்னிலங்கையிலும், அனைத்துலக மட்டத்திலும் பெரும் பிரசார அனுகூலங்களை ஏற்படுத்துவதுண்டு. வாகரை படைநடவடிக்கையின் பின்னர் ஜனாதிபதி அங்கு சென்றதும், திருமலையில் பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டியது, கடற்படையின் ஆழ்கடல் நடவடிக்கை கப்பல்களை வரவேற்பதற்கு திருமலை சென்றார் என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது நோக்கத்தக்கது, மட்டக்களப்பு நகர் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நிலைகொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் வடபகுதி எல்லைக் கிராமங்களை நோக்கி நகர்த்தப்பட்டதும், திருமலையில் இருந்து இராணுவத்தினர் நகர்த்தப்பட்டதும் அந்த பகுதியின் பாதுகாப்புக்கள் வான்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நகர்வுகள் கிழக்கிலங்கையின் பாதுகாப்பு தொடர்பாக அரசு கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தது.

எனினும் “ஒரு கெரில்லா தாக்குதல் ஆயிரம் மேடை பேச்சுக்களைவிட மிக சிறந்த பிரசாரம்’ என முன்னாள் போராளியும் கியூபாவின் அரசியல் தலைவருமான பிடல் கஸ்ரோவின் வாசகங்களின் தனித்துவம் மீண்டும் கிழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் இருந்து விடுதலைப்புலிகளின் கணிசமான தொகையினர் வட பகுதி நோக்கி நகர்ந்த பின்னர், கடல்வழியாக விடுதலைப்புலிகள் மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு செல்லாதவாறான வியூகங்களை கடற்படையினர் வகுத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்து வந்தது.

எனினும் கடந்த மார்ச் மாதம் கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் எல்லையாக அமைந்துள்ள நாயாறு கடற்பகுதியில் டோறா படகு மீது நடைபெற்ற தாக்குதல், அதனை தொடர்ந்து கடற்படையினர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பன கடற்படையினரின் தகவல்கள் தொடர்பான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக் கியிருந்தது.

விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியின் இரு கொம்பனிகளை சேர்ந்த 300 விடுதலைப்புலிகள் மட்டக்களப்பு அம்பாறை காட்டுப்பகுதிக்குள் உள்நுளைந்துள்ளதாக படை புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை காலை அறுகம்குடாவில் அமெரிக்க அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட பாலத்தை திறந்துவைக்கும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். கிழக்கில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஜனாதிபதி கலந்து கொள்வது அதன் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கைகளை தென்னிலங்கை மக்களிடமும், அனைத்துலக மட்டத்திலும் வலுவாக ஏற்படுத்த வல்லது.

ஆனால் அன்று நடைபெற்ற நிகழ்வு கிழக்கின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. ஜனாதிபதி பயணித்த உலங்குவானுõர்திகளில் ஒன்று விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிக்கியது கிழக்கு பாதுகாப்பு குறித்து இருந்துவந்த நிலைப்பாட்டை கணிசமானளவு தகர்த்து விட்டது. அனைத்துலக மட்டத்தில் அறுகம்குடா பாலம் திறப்பு விழா செய்திகள் எட்டிய வேகத்தை விட உலங்குவானூர்தி மீதான தாக்குதல் செய்தி விரைவாக பரவிவிட்டது.

கஞ்சிகுடிச்சாறு காட்டு பகுதியில் உள்ள சன்மன்கந்த பகுதியில் இருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உலங்குவானூர்தி அனர்த்தத்தில் இருந்து தப்பிய போதும், அது சேதமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

அறுகம்குடா பால திறப்பு விழவில் பங்குபற்றும் நோக்கத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூத்த அமைச்சர்கள் அமெரிக்கா தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் செவ்வாய்கிழமை காலை இரண்டு பெல்412 மற்றும் ஒரு பெல்212 ரக உலங்குவானூர்திகளில் கொழும்பில் இருந்து புறப்பட்டனர். அவர்களின் பயணத்திற்கான பாதுகாப்பை வானில் எம்ஐ24 ரக தாக்குதல் உலங்குவானுõர்திகள் இரண்டு வழங்கியிருந்தன.

பொத்துவிலில் காலை 11 மணியளவில் தரையறங்கிய உலங்குவானூர்திகள் அதிகாரிகளை இறக்கிய பின்னர் அம்பாறை மாவட்டத்தின் உகண வான்படை தளத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக சென்றிருந்தன. அங்கிருந்து மதியம் 2 மணியளவில் மீண்டும் அறுகம்குடா பகுதியை நோக்கி திரும்பியிருந்தன. அப்போது பெல்412 ரக உலங்குவானுõர்தி ஒன்றின் எரிபொருளின் அளவு சடுதியாக குறைந்து செல்வதை அதன் விமானி அவதானித்துள்ளார்.

சடுதியாக குறைந்த எரிபொருளின் அளவு ஆபத்தான கட்டத்தை அடைந்ததை அவதானித்த விமானி உலங்குவானுõர்தியை பொத்துவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அவசரமாக தரையிறக்கியிருந்தார். தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியை சோதனையிட்ட வான்படை அதிகாரிகளுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது படையினர் எதிர்பார்த்தது போல தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எரிபொருள் சிந்தவில்லை. வானுõர்தியின் எரிபொருள் தாங்கியை 7.62 மி.மீ துப்பாக்கி சன்னம் சேதமாக்கியிருந்தது. படையினரின் தகவல்களின் படி நான்கு துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்திருந்ததுடன், ஒரு சன்னம் எரிபொருள் தாங்கியை சேதமாக்கியிருந்தது. இதனை தொடர்ந்து கொழும்பு வான்படை தலைமையகத்தை உசார் நிலைக்கு கொண்டு வந்த படையினர், ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்கும் தகவல் அனுப்பியிருந்தனர்.

எனினும் இந்த தாக்குதல் நடைபெற்றது தொடர்பாக முன்னரே படைத்தரப்பிற்கு எது வும் தெரியாது போனது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப்புலிகள் சத்தமின்றி உலங்குவானூர்தியை தாக்கியதாக படைத்துறை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளதும் இங்கு நோக்கத்தக்கது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஜனாதிபதியும் முக்கிய பிரமுகர்களும் வேறு பாதைகளால் கொழும்பு திரும்பியிருந்தனர்.

விடுதலைப்புலிகள் கனரக சினைப்பர் தாக்குதலை உலங்குவானூர்தி மீது நடத்தியிருக்கலாம் என படைத்தரப்பு நம்புகின்றது. துப்பாக்கி சன்னங்கள் எரிபொருள் தாங்கியையும் அதனைச் சுற்றியும் பாய்ந்திருந்தது அதனை வலுப்படுத்தி உள்ளது. அண்மைக்காலமாக நடைபெறும் தாக்குதல்களில் விடுதலைப்புலிகள் நவீன உத்திகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவற்றில் பதுங்கி சுடுதல் எனப்படும் சினைப்பர் தாக்குதல் முக்கியமானது.

சினைப்பர் தாக்குதலை பொறுத்தவரையில் சிறிய கைத்துப்பாக்கியில் இருந்து கனரக 0.50 கலிபர் துப்பாக்கி வரையிலும் தாக்குதலுக்காக பயன்படுத்த முடியும். உதாரணமாக Barrett 0.50 model 82A1 கலிபர் கனரக சினைப்பர் துப்பாக்கி, 0.50 கலிபர் துப்பாக்கியின் சினைப்பர் துப்பாக்கி வடிவமாகும்.

2000 மீ தூரவீச்சு கொண்ட இந்த துப்பாக்கியில் உள்ள தொலைநோக்கியின் ஊடாக 100 மீ தொடக்கம் 1500 மீ தூரம் வரையிலான இடத்தில் உள்ள இலக்குகளை இலகுவாக குறிவைக்க முடியும். அமெரிக்க அரசின் சிறப்பு படையினர் பயன்படுத்தும் இந்த துப்பாக்கியை அமெரிக்க அரசு தனியாருக்கு விற்பனை செய்வதில்லை. 10 சன்னங்களைக் கொண்ட ரவைக்கூடு, மற்றும் இலகுவாக சிறிய பகுதிகளாக பிரித்து எடுத்து செல்லப்படும் தன்மை என்பன இந்த 12.7 மி.மீ கனரக துப்பாக்கியின் சிறப்பம்சங்களாகும். இது துருப்பு எதிர்ப்பு, கவச வாகன எதிர்ப்பு மற்றும் வான் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதுண்டு.

எனினும் விடுதலைப்புலிகள் இந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் பொது நோக்கு இலகு இயந்திர துப்பாக்கியை ஒத்த கனரக ஆயுதத்தை பயன்படுத்தி உள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். விமானத்தின் சேதமடைந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சன்னங்கள் மற்றும் ஏற்பட்ட சேதம் என்பவற்றை கருத்தில் கொண்டு படையினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

எனினும் விடுதலைப்புலிகள் தம்மிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் சினைப்பர் தாக்குதலாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி, ஒலிஅமுக்கி, சுவாலை நீக்கி, தொலைநோக்கி என்பவற்றை பொருத்துவதன் மூலம் இலகுவாக அதனை வடிவமைத்து விடலாம். 1500 மீ தூரவீச்சு கொண்ட ஜி.பி.எம்.ஜி. ரக துப்பாக்கி வான் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 850 தொடக்கம் 1000 மீ தாக்குதிறன் கொண்டது.

1000 மீ உயரத்திலும் குறைவான உயரத்தில் பறந்த பெல்412 ரக உலங்குவானூர்தி விடுதலைப்புலிகளின் ஜி.பி.எம்.ஜி. சினைப்பர் தாக்குதலில் சிக்கியிருக்கலாம் என்பது படைத்தரப்பின் வாதம்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து சென்கமுவா பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாம் மீது 81 மி.மீ எறிகணை தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளன. ஏழு எறிகணைகள் முகாமினுள் வீழந்து வெடித்ததாகவும், அவை கஞ்சி குடிச்சாறு பகுதியில் இருந்தே ஏவப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக படைத்தரப்பு எதுவும் தெரிவிக்காத போதும் படையினருக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 27 திகதி அரசு அனைத்துலக இராஜதந்திரிகளை மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றிருந்தது. அன்று இவர்களது பாதுகாப்புக்கு குந்தகமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பேரனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைக் கொண்ட 34 பேர் அடங்கிய குழு மட்டக்களப்பிற்கு பயணமானது. அவர்களின் வானூர்திகள் மட்டக்களப்பு விமானப்படைத் தளத்தில் இறங்கியபோது தளத்தின் மேற்குப்புறமுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுணதீவில் இருந்து ஏவப்பட்ட 120 மி.மீ எறிகணைகள் விமான ஓடுபாதையில் வீழ்ந்து வெடித்தது பெரும் அதிர்ச்சிகளை அன்று ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பு அதனை பாதுகாக்க தேவையான படைபலம் என்பன தொடர்பாக கூடிய விளக்கங்கள் இருந்திருந்தால் இராஜதந்திரிகள் இந்த அவலத்தை அன்று தவிர்த்திருக்க முடியும்.

அன்றும் இன்றும் அனைத்துலக ஊடகங்கள் எல்லாம் மட்டக்களப்பு தாக்குதலை தமது செய்தி அறிக்கைகளில் முதன்மைப்படுத்தியிருந்தன. அதாவது இலங்கை அரசின் ஒட்டுமொத்த பிரசாரங்களை முறியடிக்கும் வல்லமை புலிகளின் தாக்குதல்களுக்கு உண்டு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

இதனிடையே விடுதலைப்புலிகளை வெற்றி கொள்வதற்கு புதிதாக ஒரு காலக்கெடுவை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா முன்வைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் வலிமையை முற்றாக முறியடித்து விட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆட்சியிலிருந்த அரசுகளை பொறுத்த வரையில், 1970 களில் புலிகள் தோற்றம் பெற்றதில் இருந்து இன்றுவரை புலிகளை வடக்கில் இருந்து வெளியேற்றுகிறோம், கிழக்கில் இருந்து வெளியேற்றுகிறோம் என அவ்வப்போது காலக்கெடுக்கள் விதிக்கப்படுவதுண்டு. ஆனால் விடுதலைப்புலிகளை வெளியேற்றியதாக கூறப்பட்டு வந்த எந்த பகுதிகளிலும் தாக்குதல்கள் ஓய்ந்ததில்லை. மாறாக தலைநகர் தாக்குதல்கள் விரிவடைந்ததும், போர் தீவிரம் பெற்றதும் தான் உண்மை.

விடுதலைப் புலிகள் இரண்டு பரிமாணங்களை கொண்டிருப்பதே இதற்கான காரணம், ஒன்று விசேட நடவடிக்கை படையணிகள், இரண்டாவது மரபுவழிப் படையணிகள். இந்த இரு பரிணாமங்களும் களத்தின் நிலைமைக்கு ஏற்ப மாற்றமடைவதுடன், இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தும் இருப்பதுண்டு. வடக்கு கிழக்கு போர்முனைகளில் அரசின் பிரசாரங்களும், காலக்கெடுக்களும் அடிக்கடி தடம்புரள்வதற்கான காரணங்களும் இவை தான்.

வேல்ஸிலிருந்து அருஷ்

Comments