களத்தில் உள்ள ஆயுதங்களுக்கு சமபலமாக புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழ்: இளந்திரையன்

களத்தில் தமிழர்களின் பலம் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக, மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டுகொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

முழங்காவில் ஜெயபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிதுள்ளதாவது:

ஜெயபுரம் மண்ணில் தமிழ் மக்கள் பற்றும் உறுதியும் திடமுமாக மகிழ்ச்சியான ஒன்றுகூடலில் பொழுதினை கழித்துக்கொண்ருக்கின்றனர்.

தமிழ் மக்கள் திடமான நிலையில் உறுதியுடன் எழுச்சிகொள்வதையும் இவ்வாறு நிகழ்வுகளை நடத்துவதையும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இவ்வாறான நிகழ்வுகள் மக்களின் ஏகோபித்த கருத்து நிலைக்கும் மாறாத உறுதிக்கும் நடைமுறைச் சான்றாக அமைந்திருக்கின்றது என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

கொடுமையான எதிரியிடம் இருந்து போரை தமிழ் மண் எதிர்நோக்கி இருக்கின்றது. உலகில் உள்ள அடக்குமுறையாளர்களில் மிகக்கொடூரமான அடக்குமுறையாளர்களாக சிறிலங்காப் படையினர் காணப்படுகின்றனர்.

போரை கொண்டுசெல்வதற்கான பண்புகளில் இருந்தும் வல்வளைப்புச் செய்வதற்கான வரலாற்று நிகழ்வுகளில் இருந்தும் விடுபட்டவர்களாக- ஒழுங்கீனமான- கண்ணியமற்ற- முறையற்ற போரை மக்கள் மீது திணிக்கின்ற சிறிலங்கா அரசுடனும் அதன் படைகளுடனும் எதிர்நின்று போரிட்டுக்கொண்டிருக்கின்றோம்.

தொடக்க காலத்தில் சங்குல போர், துவண்ட போர் என்கின்ற முறைமைகளுக்கு அமைவாக போர் நடைபெற்றது.

அது ஒர் போர்முறைமைக்கு அமைவான போராக காணப்பட்டது. இன்று அவற்றை எல்லாம் தாண்டி சிறிலங்கா அரசு ஆயுதங்கள் அற்ற அப்பாவி மக்கள் மீது மிக மோசமாக போரை திணித்துக்கொண்டிருகக்கிறது. இதனை உலக வரலாறு பார்த்துக்கொண்டிருக்கின்றது.

நேர்மையான போரை எடுத்துச்செல்ல முடியாத சிறிலங்கா அரசு, மக்கள் மீது பல்வேறு வழிகளில் போரைத் திணிக்கின்றனர்.

ஆழ ஊடுருவும் படையினரால் மக்கள் தாக்கப்படுகின்றனர். எறிகணைத்தாக்குதல் மூலம் மக்கள் இடம்பெயர்த்தப்படுகின்றனர். மக்களுக்கான மருந்து இன்றியமையாப் பொருட்கள் மறிக்கப்படுகின்றன.

இவ்வாறு பல்வேறு வழிகளில் சிறிலங்காப் படைகள் மக்கள் மீது போரைப் புரிவதன் வெளிப்படையான அடையாளமாக இவை காணப்படுகின்றன.

இறைமையுள்ள அரசு என்று கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசு மக்கள் மீதுதான் போரைத் தொடுத்து இருக்கின்றது.

தற்போது தமிழர்களின் பலம் களங்களில் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களை சிறிலங்கா அரசின் கொடுமைகள் தீண்டினாலும் கூட, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தாண்ட முடியாதபடி பன்னாட்டு தமிழ் மக்களின் உணர்வுகளும் தமிழீழ மக்களின் உணர்வுகளும் அமைந்திருக்கின்றன.

தமிழ் மக்களின் மனங்களில் உள்ள விடுதலைத்தீயை அணைக்கமுடியாது எதிரியின் எவ்வாறான இறுக்கமான சூழ்நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அனைவரும் விடாப்பிடியாக ஒன்றுபட்ட உளச்சக்தியுடன் நின்று இறுக்கமாக எதிரி மீது தமது பலத்தினை செலுத்துகின்ற போது விடுதலையைப் பெறமுடியும் என்றார் அவர்.


Comments