மடுமாதா சொரூபத்தைக் கடத்திய கத்தோலிக்க பாதிரிமார்

சீடன்: நாட்டில் திருட்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. யார், எதைத் திருடுவது என்ற கணக்கே இல்லாது போய்விட்டது.

குரு: கடந்த திங்கள்கிழமை மாலை (21 யூலை 2008) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில்; 7 இலட்சம் பணத்தையும் தங்க நகைகளையும் கொள்ளையடித்தது தொடர்பாக அரசின் கூலிப்படையான பிள்ளையான் குழுவைச் சேர்ந்த அய்ந்து ஆசாமிகளை காவல்துறை கைது செய்ததைச் சொல்கிறாயா?

சீடன்: சேச் சே! அதெல்லாம் சின்னக் கொள்ளை. கொள்ளை அடிப்பதற்காகவே திருடர்கள் அநதக் குழுவில் சேர்கிறார்கள். கல்முனைப் பகுதியிலும் இதே குழுவைச் சேர்ந்த கந்தசாமி புஷ்பராசா ஒரு கோடிக்கு மேல் கொள்ளை அடித்துள்ளாராம். ஆனால் காவல்துறை அவரைக் கைது செய்யாது சும்மா விட்டு வைத்திருக்கிறது. கொள்ளையில் அவர்களுக்கும் பங்குபோல் தெரிகிறது. அது போகட்டும். நான் சொல்ல வந்தது சிலை கடத்தல்……..

குரு: பொறு… பொறு…. கோயில் சிலைகள் கடத்துவது சர்வ சாதாரணம். அது நல்ல வருவாயுள்ள தொழில். தமிழகத்தில் நெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்த சாமி சிலை கடத்தலை முழுநேரத்தொழிலாகக் கொண்டுள்ள குடிமக்களே இருக்கிறார்கள். சில பல சமயங்களில் கோயில் குருக்கள்மாரும் இந்தத் தொழிலைச் செய்வதுண்டு. தங்கத்தில் செய்த சிலைகளை கொஞ்சம் கொஞ்கமாகச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். அய்ம்பொன்னால் செய்த சிலையைக் களவாடி விட்டு அதற்குப் பதில் செப்பினால் செய்த சாதாரண சிலையை வைத்துவிடுவார்கள்.

சீடன்: நான் சொல்ல வந்தது வேறு செய்தி. பாவமன்னிப்பு……

குரு: அந்தச் செய்தியும் எனக்குத் தெரியும். இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட முருகப் பெருமானின் சிலை தமிழக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக அண்மையில் தமிழோசையில் சொன்னதைத்தானே சொல்ல வருகிறாய்……அந்தச் சிலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் வெருக்கலம்பதி முருகன் கோயிலில் இருந்து, 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற சண்டையின் போது காணாமல் போன சிலை என மூதூர் வெருகல் கோயில் அறங்காவல் அவையின் தலைவர் சிதம்பரப்பிள்ளை தமிழோசையிடம் தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் ஒரு தனி ஆளிடம் இருந்து அந்தச் சிலையை காவல்துறை கைப்பற்றியிருக்கிறது. இந்தச் சிலையின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கையில் இது தோராயமாக 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலை என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அய்ம்பொன்னால் வடிக்கப்பட்ட இந்தச்; சிலையின் பழமை காரணமாகவும் கலைநேர்த்தி காரணமாகவும் அதன் அனைத்துலக் சந்தைவிலை 50 இலட்சத்தையும் (இலங்கை நாணயத்தில் ஒரு கோடி) தாண்டும் என்று தமிழக அரசின் சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் காவல்துறை துணை அதிகாரி ஆறுமுகம் தமிழோசைக்குக் கொடுத்த செவ்வியில் தெரிவித்தார். பாவம் முருகப் பெருமான்! இரண்டு மனைவிகளோடு ஒவ்வொரு நாளும் ஆறுகாலப் பூசையின் போது புக்கை, மோதகம், வடை, சுண்டல், முறுக்கு, வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், பால், தயிர் என்று வயிறாரச் சாட்பிட்டவர் இப்போது அநாதரவாகப் பட்டினியால் வாடுவதை நினைத்தால் பாவமாக இருக்கிறது!

சீடன்: என்னைக் கொஞ்சம் பேசவிடுங்கள் குருவே! நான் சொல்ல வந்தது முற்றிலும் வேறான செய்தி. மனிதர்கள் பாவம் செய்தால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கும் பாதிரிமாரே இந்தப் பாவத்தைச் செய்திருக்கிறார்கள்!

குரு: இதென்ன புதுக்கதை?

சீடன்: புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் மன்னாரில் சண்டை மும்மரமாக நடந்த காலத்தில் மடுமாதா சொரூபத்தை பாதிரிமார் அங்கிருந்து தேவன்பிட்டி என்ற ஊருக்குப் பத்திரமாக எடுத்துச் சென்றார்கள் அல்லவா?

இப்போது அந்த மடுமாதா சொடூபத்தைத்தான் கத்தோலிக்க பாதிரிமார்கள் யாருக்கும் தெரியாமல் கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள்!

குரு: பாதிரிமார்கள் மடுமாதாவைக் கடத்தினார்களா? எப்படிக் கடத்தினார்கள்? என்னால் நம்ப முடியவில்லையே?

சீடன்: என்னாலும் நம்பமுடியவில்லை குருவே! ஒரு நோய்காவி வண்டியில் வைத்து களவாக ஓமந்தை வழியாக கடத்திப் போய்விட்டார்கள்!

நோய்காவி வண்டி, பயணம் செய்தவர்கள் பாதிரிகள் என்பதால் அதனைப் புலிகள் சோதனை செய்யாது விட்டுவிட்டார்கள்!

செய்தி அறிந்த மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்!

குரு: பாவ மன்னிப்புக் கொடுப்பவர்களே பாவத்தை செய்கிறார்கள் என்று சொல்! “இரண்டு தரப்பினரும் மடுமாதா தேவாலய வளவைவிட்டு இரண்டு கிலோமீற்றர் தொலைவிற்குச் செல்ல வேண்டும் - அந்தப் பகுதி புனித பகுதியாக அறிவிக்க வேண்டும் - அப்படிச் செய்தால் மாத்திரமே மடு அன்னையின் சொரூபம் மீண்டும் எடுத்துவரப்படும்” என்று ஆயர் யோசேப் இராயப்பு சொன்னாரே?

சீடன்: சொன்னார் சுரக்காய்க்கு உப்பில்லை என்று! வி. புலிகள் மடுமாதா தேவாலயத்தை விட்டு எப்போதோ போய்விட்டார்கள். ஆனால் சிங்கள இராணுவம் மடுமாதா தேவாலயத்தை திருத்திக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் திருவிழாவாம்!

குரு: பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம் அனுப்பியிருந்தாரே?

அவரா இப்படி?

அக்கடிதத்தில் “இலங்கையின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை எரியூட்டிவிட்டு வந்திருகிறேன். உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.

பேசாலையில் உள்ள 7 ஆயிரம் மக்கள் தங்களை இந்தியாவுக்கோ அல்லது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கோ அனுமதிக்குமாறு கெஞ்சுகின்றனர்” என்றெல்லாம் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்!

சீடன் - “எல்லாம் ஊருக்குச் சொன்னேனடி கண்ணே உனக்கல்லடி பெண்ணே” என்று சொன்ன குருவின் கதைதான்

-நக்கீரன் (கனடா)


Comments