சுவிஸ் பொங்குதமிழில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் பங்கேற்பு

சுவிற்சர்லாந்தில் இன்று மாலை இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம், விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தி 4,000இற்கும் மேற்பட்ட மக்கள் பேரெழுச்சி கொண்டனர்.


பேர்ணிலுள்ள வங்டோர்ப் மைதானத்திலுள்ள ஊர்தி தரிப்பிடத்தில் இருந்து தமிழ் அணியிசையுடன் பேரணியாகப் புறப்பட்ட மக்கள் மைதானத்தில் ஒன்று திரண்டனர்.

தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அணியிசையுடன், பறை, தவில் வாத்தியங்கள் முழங்க, புலியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் என்பவற்றுடன் மக்கள் பேரணியாக நகர்ந்து சென்றனர்.


கலந்துகொண்ட மக்கள் தமிழீழ தேசியத் தலைவரது படத்தையும், தமிழீழ வரைபடத்தையும், தேசியக்கொடியையும், தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்ட பலூன்களையும் தமது கைகளில் ஏந்தியிருந்தனர்.


பேரணி மைதானத்தைச் சென்றடைந்ததும், பொதுச்சுடரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் குலம் ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரங்க நிகழ்வுகளில் எழுச்சிப் பாடல்கள், நடனங்கள் மத்தியில் உரைகளும் இடம்பெற்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்த யோசெப் அடிகளார், தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலர் கிருபாகரன் போன்றோர் உரையாற்றியிருந்தனர்.

பிற்பகல் 3:00 மணிமுதல் மாலை 7:00 மணிவரை இந்த எழுச்சி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

Comments