சர்வதேசத்திடம் அம்பலமாகும் தெற்கின் திருகுதாளங்கள்

தெற்காசியாவுடனான உறவுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட சமயம் தான் வெளியிட்ட அறிக்கையிலும்; செய்தியாளர் மாநாட்டிலும் இலங்கை அரசுக்கு சூடாகவே கொடுத்திருக்கின்றது.

* மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அர சின் போக்குக்குக்கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டி ருக்கின்றது.

* மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச கவலைகள் குறித்து இலங்கை அதிகம் சிரத்தை எடுத்து, அவற்றுக்குப் பரிகாரம் காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேசப் பட்டயங்கள் தொடர்பான தனது கடப்பபாடு களை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்த ஆவன செய்யாவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிக் குரிய ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை இலங்கை இழக்க வேண்டிவரும்.

* அரசுத் தரப்புடன் சேர்ந்து இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் (கருணா குழுவின்) ஆயுதங்களைக் களைவதற்கான கால அட்டவணை அறிவிக்கப்படாதமை குறித்து ஆட்சேபம் தெரிவிக் கப்பட்டிருக்கின்றது.

* அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படாததால் அப்பிரதிநிதிகள் குழு முழுமை பெற்றதல்ல என்ற கருத்து தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இவ்விடயங்களைப் பிரதிபலித்த ஐரோப்பிய விசேட குழு, உண்மையில் இங்கு தான் தங்கியிருந்த ஐந்து நாள்களுக்குள் இங்குள்ள நிலைமைகளை செவ்வனே உள்வாங்கிக் கொண்டுவிட்டது என்பது தெளிவு. தனது விஜயத்தின் முடிவில் அது வெளியிட்ட அறிக்கையும், கருத்துகளும் இதனை நிரூபிக்கின்றன.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு என்பது சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தந்திரோபாய நடவடிக்கையே என்பது சர்வதேச சமூகத்துக்கு இப்போது நன்கு புரியத் தொடங்கிவிட்டது. அதைத்தான் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு வும் தற்சமயம் பிரதிபலித்திருக்கின்றது.

இன்றைய நிலையில் இலங்கையின் நாடாளுமன்றத் தில் வடக்கு,கிழக்குத் தமிழர்களைப் பிரிதிநிதித்துவம் செய்யும் இருபத்தி மூன்று எம்.பிக்கள் உள்ளனர். இவர் களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் தவிர எஞ்சிய இருபத்திரண்டு பேரும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் எல்லோரையும் ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டுத்தான் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்து அதற்கு "அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு' என்று நாமமும் சூட்டி நாடகமாடினார் ஜனாதிபதி மஹிந்தர்.

ஆரம்பத்தில், இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுக்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ""இனப்பிரச்சினைக்குத் தென்னிலங்கையின் கருத் தொருமைப்பாட்டுடன் கூடிய தீர்வு யோசனையைத் தயாரிப்பதற்கான அமைப்பே இது. எனவே இது வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரதித்துவம் அவசியம் இல்லை'' என்று விளக்கமளித்தார் நாட்டின் தலைவர்.

ஆனால் சற்றுக் காலம் செல்ல, தெற்கின் இணக்கப் பாட்டுடனான திட்டமே தீர்வு என்று வரையறை செய்து கொண்டு, தமிழர் தரப்பை ஒதுக்கி, விலத்தித் தாம் அமைத்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழவின் திட்டம் என்ற பெயரில் உப்புச் சார்பற்ற உருப்படியற்ற ஒரு யோசனையைத் தீர்வு வடிவமாக காட்ட முயன்றார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் தாமே எதிர்த்த அப்போதே பயனற்றது என்று தூக்கிக் கடாசப்பட்டஅரசமைப் பின் 13ஆவது திருத்தத்தின் கீழான அம்சங்களை தோண்டி எடுத்து தூசு தட்டித் தீர்வுக்கான நடவடிக்கை என முன்வைத்தார்.

இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், அந்தத் திட்டத்தை ""அனைத்துக் கட்சிப் பிரதிகள் குழுவின் யோசனை'' என்ற பெயரில் முன்வைக்கப்பட்டு, உலகின் காதில் பூவைக்க எடுக்கப்பட்ட முயற்சிதான்.

இந்த அனைத்துக் கட்சி பிரதிகள் குழுவில் இப்போது பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க.இல்லை; ஜே.வி.பியும் இல்லை; தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சேர்க்கப்படவில்லை.

இப்படியிருக்க, ஆளும் கட்சித் தரப்பிலுள்ள அணி யையும் எதிரணியில் உள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிர சையும் மட்டும் சேர்த்துவைத்துக் கொண்டு, தான் விரும் பிய "உளுத்தல் திட்டம்' ஒன்றை இலங்கையின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளினதும் திட்டம் என்ற பெயரில் வெளிப்படுத்தி மஹிந்த தரப்பு ஆடிய நாடகத்தின் சாயம் இப்போது சர்வதே சமூகத்தின் முன் நன்கு வெளுத்து விட்டது. அதனையே ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் கருத்தும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

விடுதலைப்புலிகளின் விடுதலைப் போராட்டத்தை அடங்குவதற்கு அரசு கையில் எடுத்திருக்கும் "அரச பயங்கரவாதமே' இலங்கைத் தீவில் மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களாகக் கட்டவிழ்கின்றன என்ற உண்மையும் இந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுக்கு நன்கு விளங்கத் தொடங்கியிருப்பதும் முக் கிய விடயமாகும்.

ஈழத் தமிழர்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவதற்கு அரசு என்றை கட்டமைப்பை வைத்துக் கொண்டு தென்னிலங்கை செய்யும் திருகுதாளங்கள் இப்போது சர்வதேச மட்டத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கிவிட்டன.


Comments