யுத்தம்- மதிப்பீடும், ஒப்பீடும்

இராணுவம் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகின்றது வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பெருமளவு நிலப்பரப்பைக் கைப்பற்றிவிட்டோம்; விரைவில் கிளிநொச்சி மீதும், முல்லைத்தீவு மீதும் தாக்குதலை நடத்தவுள்ளோம்;. அப்பகுதிகளும் விரைவில் மீட்டெடுக்கப்படும் என்பவை இன்று சிறிலங்கா ஆட்சியாளர்களினதும், படைத்துறைத் தரப்பினரதும் முக்கிய பிரச்சாரமாகவுள்ளது.

இவற்றிற்குச் சிறிலங்காவில் இருந்து வெளிவரும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஒருபுறத்தில் முக்கியத்துவம் கொடுக்குமாறு அரச தரப்பால் வற்புறுத்தப்பட்டும் வருகின்றது. இதே சமயம், ஓரளவிற்கு உண்மை நிலையை வெளிப்படுத்த முனையும் ஊடகங்களும் சிறிது குழம்பிப்போயுள்ளன. அன்றித் தடுமாறுகின்றன எனக் கூறுவதும் தவறாகமாட்டாது.

இவற்றிற்குச் சிறிலங்கா அரசு யுத்தம் குறித்துச் செய்துவரும் பிரச்சாரமும், ஊடகங்கள் மீது பிரயோகிக்கும் அழுத்தங்களும் கூட ஒருவகையில் காரணமாகின்றன. இந்த நிலையில் யுத்தம் குறித்ததான ஒரு மதிப்பீடும், ஒப்பீடும் செய்தல் என்பது ஒருவகையில் அவசியமானதே. இம் மதிப்பீடும், ஒப்பீடும் யுத்தத்தின் யதார்த்த நிலைகுறித்தும் - அதன் எதிர்காலம் குறித்தும் விளங்கிக்கொள்வதற்கும் அவசியமானதாக இருத்தல் கூடும்.

சிறிலங்காப் படைத்துறைத் தரப்பு கூறிக்கொள்வதில் ஒருசில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக இராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி - துணுக்காய்ப் பிரதேசங்களுக்கு அண்மை வரையிலும், இலுப்பைக்கடவையைத் தாண்டியும் முன்னேறியுள்ளது என்பது உண்மையே. அத்தோடு, சுமார் 15 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்நகர்வு முயற்சியில் குறிப்பிட்டளவில் விடுதலைப் புலிகளுக்கும் உயிரழிப்புக்கள் ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மையே.

ஆனால், இவற்றைச் சிறிலங்காப் படைத் தரப்பிற்கு ஏற்பட்ட வெற்றி என்றோ, சிறிலங்காப் படைத்தரப்பு விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நிலை எட்டிவிட்டதென்றோ, முல்லைத்தீவும், கிளிநொச்சியும் சிறிலங்காத் தரைப்படையின் கைகளில் எட்டும் நிலைக்கு வந்து விட்டதென்றோ கொள்ளுதல் அபத்தமானதாகும்.

அத்தோடு கடந்த 15 மாதகால யுத்தத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு அடைந்துள்ள அனுகூலங்கள், யுத்தம் குறித்த அதன் மதிப்பீட்டுடன் எந்தளவிற்கு உடன்பாடான தன்மை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்தே இதுவரையான யுத்தத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு பெற்றுக்கொண்டுள்ள அனுகூலங்கள் யுத்தத்தில் அதற்கு ஏற்பட்ட பெருவெற்றியா?, இராணுவம் யுத்தத்தில் பெரும் வெற்றியீட்டும் நிலையில் உள்ளதா? என்பதனையும் மதிப்பீடு செய்ய முடியும்.

வடக்கில் யுத்தத்தை ஆரம்பிக்கும்போது அதாவது 2007 மார்ச்சில் இராணுவம் தாக்குதலைத் தொடங்கியபோது நடைபெறப் போகும் யுத்தம் குறித்த சிறிலங்காப் படைத்தரப்பு சில மதிப்பீடுகளைக் கொண்டிருந்தது. இதற்கேற்ற வகையில் படைத்தரப்பையும் ஆளணி மற்றும் ஆயுத தளவாடங்களையும் தயார்ப்படுத்தி வைத்திருந்ததோடு, தமது யுத்தத் தந்திரோபாயத்தையும், யுத்தத்திற்கான கால எல்லையையும் அது வகுத்துக்கொண்டிருந்தது.

இதன் பிரகாரம், 2007 ஆம் ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பரில் குறைந்தபட்சம் ஏ-32 பாதையை (மன்னார் - பூநகரி) இராணுவம் கைப்பற்றுவதோடு, ஆனையிறவையும் இராணுவம் கைப்பற்றியிருத்தல் வேண்டும். இதே சமயம் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் ஆளணி இழப்பையும் ஏற்படுத்தி விடுதலைப் புலிகளை மரபுவழி இராணுவமாகச் செயற்பட முடியாத அளவிற்குப் பலவீனப்படுத்தியிருத்தல் வேண்டும்.

இத்தகைய இலக்குகளை அடைய முடியும் என்ற மதிப்பீட்டுடனேயே யுத்தம் குறித்த சிறிலங்கா அரசினதும் படைத்துறை தலைமைகளினதும் செயற்பாடுகள் இருந்தன. படை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், யுத்தம் 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்களின் இலக்கு எட்டப்படவில்லை. அதாவது அவர்களினால் தமது மதிப்பீட்டின் அடிப்படையில் செயற்பட முடியவில்லை.

இதன் விளைவானது தமது மதிப்பீடுகளை, அவர்கள் மாற்றிக்கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் வேண்டியதாயிற்று. யுத்தம் குறித்த சில யதார்த்தத்தையும் வெளிப்படுத்த வேண்டியதாயிற்று- இந்த வகையில் முதலில் சிறிலங்காப் படைத்துறைத் தலைமையினால் யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கானஃ முடிவிற்குக் கொண்டுவருவதற்கான கால நிர்ணயம் ஒரு வகையில் கைவிடப்பட்டதொன்றாகியுள்ளது.

எடுத்துக்காட்டாக யுத்தம் கடந்த ஆண்டு இறுதிக்குள் முடிவிற்கு வந்துவிடும் எனக்கூறி வந்த இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, தற்பொழுது யுத்தம் முடிவிற்கு வருவது குறித்த கால எல்லை குறித்துப் பேசுவதில் குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஓரிடத்தில் இன்னும் ஓராண்டிற்குள் யுத்தம் முடிவிற்கு வந்துவிடும் எனத்தெரிவிக்கும் சரத் பொன்சேகா இன்னொரு சந்தர்ப்பத்தில் யுத்தம் இரு வருடங்கள் நீடிக்கும் என்கிறார். இது யுத்தம் குறித்து சரத் பொன்சேகாவின் மதிப்பீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினதும் குழப்பத்தினதும் வெளிப்பாடாகும்.

அடுத்ததாக, விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை குறித்த அவரது மதிப்பீடும் பெரும் குழப்பகரமானதாகவே உள்ளது. வன்னி மீது தாக்குதலை ஆரம்பித்த போது 4000 தொடக்கம் 6000 வரையிலான புலிகளே இருப்பதாக மதிப்பீடு செய்த சரத்பொன்சேகா 15 மாத யுத்தத்தில் 7000இற்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றுவிட்டதாகப் பின்பும்- இது சிறிலங்காப் படைத்துறை வட்டாரத் தகவல்- விடுதலைப் புலிகளில் 5000 வரையிலான புலிகள் இருப்பதாகக் கூறுகின்றார்.

அதாவது, புலிகளின் எண்ணிக்கை குறித்த அவரது மதிப்பீடானது காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே வருகின்றது. இது புலிகள் குறித்த அவரது மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டதான தவறின் வெளிப்பாடாகவே கொள்ளத்தக்கதாகும்.

இவற்றிற்கு அடுத்ததாக, மன்னாரில் இருந்து சிறிலங்காப் படைத்தரப்பு படைநகர்வை ஆரம்பித்தபோது- படை நடவடிக்கைக்கான பெயர், படை நடவடிக்கைகளின் இலக்கு என்பன பற்றி உத்தியோகபூர்வமான தகவல் எதனையும் இராணுவத் தரப்பு வெளியிடவில்லை. ஆனால் இப்படை நடவடிக்கையானது மடுவைக் கைப்பற்றிய பின்னர் ஏ-32 தரைவழிப்பாதை ஊடாக பூநகரியைச் சென்றடைதல் என்பது பொதுவாகக் கூறப்பட்டதும், பேசப்பட்டதுமான விடயமாக இருந்தது. அத்தோடு, முகமாலை ஊடாக ஆனையிறவு நோக்கி முன்னேறுவதாகும். சூழ்நிலை ஏற்புடையதாயின் ஏற்படின் கிளிநொச்சி சென்றடைவதும் ஆகும்.

ஆனால் தற்பொழுது 15 மாத படை நடவடிக்கையின் பின் மல்லாவி துணுக்காயைக் கைப்பற்றுதல் குறித்தும் ஏ-9 பாதை குறித்தும் பேசப்படும் ஒன்றாக நிலைமை மாறியுள்ளது. அதாவது சிறிலங்காப் படைத்தரப்பு ஆரம்பத்திட்டத்திற்கேற்ற வகையிலான படை நடவடிக்கை என்றில்லாது வாய்ப்பிற்கேற்ற வகையிலான படை நடவடிக்கையில் இறங்கியுள்ளதானதொரு நிலையே இன்று காணப்படுகிறது.

இந்த வகையில் தமது மதிப்பீட்டின் அடிப்படையில் இலக்குகளை அடையமுடியாது போனது மட்டுமல்ல, யுத்தத்தில் ஏற்பட்டுள்ள இழப்பானது மற்றுமொரு புதிய மதிப்பீட்டிற்கு அதனை இட்டுச் சென்றுள்ளது. இதன் வெளிப்பாடே விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க- யுத்தத்தில் வெற்றிபெற இன்னமும், 10,000 துருப்புக்கள் தேவை என்ற அறிவிப்பாகும்.

சிறிலங்காப் படைத்தரப்பு யுத்தத்தில் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை எவ்வளவுதான் மறைத்திருப்பினும் ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதையும், படைத்தரப்பில் இருந்து தப்பி ஓடுவோர் அதிகரித்து வருவதையும், அவர்களின் அறிவிப்புக்களே வெளிப்படுத்து வதாயுள்ளது.

இதேபோன்றே சிறிலங்கா அரசு மேலதிக ஆயுத தளவாடக்கொள்வனவில் ஈடுபட்டிருப்பதும் - அதன் மதிப்பீடுகளை மீறியதாக யுத்தம் விரிவடைந்து சென்றுகொண்டிருப்பதையுமே வெளிப்படுத்தி நிற்கின்றது.

இவ்வாறாகத் தமது மதிப்பீடுகள் யாவும் தவறாகிப் போயுள்ள நிலையில்- குறிப்பாக யுத்தத்தை முடிவிற்குக்கொண்டு வரும் காலம்; இராணுவ நடவடிக்கையின் இலக்கு; மதிப்பீட்டிற்கு மீறியதாக மேலும் தேவைப்படும் ஆளணி மற்றும் ஆயுத தளவாடங்கள்- என நிலைமை இருக்கையில்; யுத்தத்தில் பெரும் வெற்றி பெற்றுவிட்டதாகவும், விரைவில் யுத்தத்தில் இறுதி வெற்றி கிடைத்துவிடும் எனக் கூறுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்.

இதற்கும் அப்பால் ஜெயசிக்குறு நடவடிக்கை ஈட்டியதான அனுகூலங்களைக் கூட இப்படை நடவடிக்கை ஈட்டியதாகக் கொள்ள முடியாது. மக்களை வாழ்விடங்களில் இருந்து விரட்டி, அவர்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்ததைத் தவிர இப்படை நடவடிக்கை இதுவரையிலான பெரும் இராணுவ அனுகூலங்கள் எதனையும் பெற்றுக்கொண்டதாகவும் இல்லை.

இந்த வகையில், சிறிலங்காப் படைத் தரப்பின் மதிப்பீடுகள் தவறாகப்போயுள்ள நிலையிலும் - சிறிலங்காப் படைத்தரப்பு யுத்தத்தில் பெருவெற்றி பெற்று வருவதாகப் பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டு வருவதினால், கடந்த கால யுத்தங்களுடன் செய்யப்படும் ஒரு ஒப்பீடு - சிறிலங்கா இராணுவத்தரப்பு யுத்தத்தில் வெற்றிகரமாக முன்னேறியுள்ளதா என்பதை அளவிடுவதற்கு உதவத்தக்கதாக இருக்கும்!

தற்பொழுது சிறிலங்காப் படைத்துறைத் தரப்பு வன்னிப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி யில் மேற்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படை நடவடிக்கையானது ஏறக்குறைய ஜெயசிக்குறு படை நடவடிக்கையின் கால அளவை எட்டிவிட்டது என்றே கூறமுடியும்.

அதாவது ஜெயசிக்குறு படை நடவடிக்கை என இங்கு குறிப்பிடப்படுவது ரணகோச, வோட்டர்செட் நடவடிக்கைகள் உள்ளடங்கலாக 18 மாதகாலங்கள் நீடித்த நடவடிக்கைகளை யாகும். இந் நடவடிக்கையின் பிரதான மையம் ஏ-9 பாதையாக இருப்பினும் நடவடிக்கையின் பெரும்பகுதி வன்னிப் பெருநிலப்பரப்பின் மேற்குப்புறமாக அதாவது முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களையும், இறுதியில் ரணகோச - மேற்குப் புறமாக மன்னார் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாகவும் இருந்தது.

இப்படை நடவடிக்கைகளின் மூலம் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதிக்கு தெற்காகவுள்ள பகுதியும், மன்னார் மாவட்டத்தில் பெரியமடு, மடு உள்ளடங்கலான அதன் வடபகுதிகளும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

இதனைத் தற்போதைய நிலையுடன் ஒப்பீடு செய்கையில் ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் சிறிலங்காப் படைத்தரப்பு ஆக்கிரமித்துக் கொண்டதான பிரதேசங்களைவிடத் தற்பொழுது ஆக்கிரமிப்புச் செய்துகொண்ட பிரதேசம் குறைந்த அளவிலான பிரதேசமாகும்.

இந்தவகையில் பார்க்கையில் ஜெயசிக்குறு நடவடிக்கை கொடுத்த அழுத்தத்தை இந்நடவடிக்கை கொடுப்பதற்கு இல்லை என்றே கொள்ளமுடியும். இத்தகையதொரு ஒப்பீடு செய்வதன் மூலம், சிறிலங்கா இராணுவம் யுத்தத்தில் சிறிதேனும் முன்னேற்றம் காணவில்லை என இங்கு கூறவரவில்லை.

ஆனால், சிறிலங்காப் படைத்தரப்போ, அன்றி அரசியற் தரப்போ கூறிக்கொள்வது போல் அவர்கள் பெரு வெற்றிகளை ஈட்டிவிட்டதாகவோ, கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களைக் கைப்பற்றும் நிலையை அடைந்துவிட்டதாகவோ அன்றி விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுவிட்டதாகவோ கொள்வதற்கு எதுவுமே இல்லை.

அதாவது அவ்வாறு எதுவும் பெற்றிருப்பதாக இருப்பின் ஒன்று வடபகுதியின் மேற்குக் கரையோரத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருத்தல் வேண்டும்.

அன்றி யாழ். குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையைத் திறந்திருத்தல் வேண்டும். அன்றி ஆனையிறவையாவது கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

ஆனால் அவ்வாறு எதுவும் இதுவரை நடந்ததாக இல்லை.

அதாவது சிறிலங்கா அரசாங்கமும், படைத்தரப்பும் மேற்கொள்ளும் பிரச்சாரங்களானது அது பெற்றுக்கொண்ட இராணுவ அனுகூலங்களை மிகைப்படுத்தி சர்வதேசத்தையும், சிங்கள மக்களையும் ஏமாற்றுவதாகவும், தமிழ் மக்களைக் குழப்பத்திற்கும் உள்ளாக்கும் நோக்கில் ஆனது மட்டுமே.

ஆனால், யுத்தம் குறித்த சரியான மதிப்பீடும், ஒப்பீடும் செய்யப்படும் நிலையில் அரைக் கிணறும் தாண்டமுடியாத நிலையிலேயே சிறிலங்காப் படைத்தரப்பு உள்ளதென்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் தரப்பு இதுவரையில் குறிப்பிடத் தக்கதானதொரு வலிந்து தாக்குதல்களை மேற்கொள்ளாத நிலையில்- யுத்தத்தின் போக்கை எவருமே மதிப்பீடு செய்துவிடவும் முடியாது.

சுருக்கமாகக் கூறப்போனால் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் குறித்த சரியான மதிப்பீட்டை செய்யக்கூடிய எவரும் சிறிலங்கா இராணுவம் தற்பொழுது பெற்றுக் கொண்டிருக்கும் அனுகூலங்களை முன்னேற்றகரமானவை எனக் கொள்ளமாட்டார்கள்.

ஏனெனில் வரலாற்றின் போக்கையே தீர்மானிக்கத்தக்கதான இராணுவ நகர்வுகளைத் தம்மால் செய்யமுடியும் என்பதை அவர் ஏற்கெனவே பலமுறை நிரூபித்துக்காட்டியுள்ளார்.

- ஜெயராஜ் -

வெள்ளிநாதம் (01.08.08)

Comments