ஈழத் தமிழர் விவகாரத்தில் பாரதீய ஜனதாவின் ஈடுபாடு

இந்திய அரசியலில் இன்று முக்கியமான நாள்.

மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவை இழந்துள்ள அல்லது தனது செயற்பாடு மூலம் அந்த ஆதரவை உதறித் தள்ளியுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, ஏனைய உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைத் தக்கவைத்து, அதை நாடாளுமன்றத்தில் நிரூபித்து, ஆட்சியைத் தொடருமா?

அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அந்த அரசு கவிழுமா?

அப்படி அரசு கவிழ்ந்தால் உடனடியாக மாற்று அரசு ஒன்று பதவி ஏற்குமா?

அல்லது பொதுத் தேர்தல் ஒன்றுக்கு உடன் அறிவிப்பு விடுக்கப்படுமா?

இவை குறித்தெல்லாம் இன்று மாலைக்குள் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய கண்டத்தில் காங்கிரஸ் அரசு தப்பிப் பிழைத்தாலும், பல்வேறு உதிரிக் கட்சிகளின் தயவில் ஆட்சியைக் கொண்டிழுக்க வேண்டிய அந்த அரசுக்கு அதன் பின்னர் நிலைமை நித்திய கண்டம் என்ற கணக்குத்தான்.

அப்படி நித்திய கண்டத்தில் பூரண ஆயுளைக் கொண்டு இழுத்தாலும் அடுத்த ஏப்ரலுடன் தற்போதைய அரசின் ஆட்சிக் காலம் தானாகவே நிறைவு பெற்றுவிடும்.

எனவே, எப்படிப் பார்த்தாலும் விரைவில் இந்தியாவில் பொதுத் தேர்தல் என்பது தவிர்க்கப்பட முடியாத யதார்த்தமாகும்.

அடுத்த அரசு அமைப்பதற்கான காற்று அலை பாரதீய ஜனதாக் கட்சிக்கு சார்பாக வீசுவதாக அவதானிகள் கூறுகின்றனர். கருத்துக் கணிப்புகள் வெளியிடும் ஆரூடமும் அதுதான்.

இந்தப் பின்னணியிலேயே, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் இல. கணேசன், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இப்போது தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.

தற்போதைய காங்கிரஸ் அரசுக்கு முன்னரும் ஐந்து ஆண்டுகள் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது இலங்கைப் பிரச்சினையில் எதுவுமே "வெட்டிப் பிளக்காத' அந்தக் கட்சியின் அரசு, இன்னொரு தடவை ஆட்சிக்கு வந்து மட்டும் என்ன செய்து கிழித்து விடப் போகின்றது என்ற கேள்வி இக்கட்டத்தில் எழுவதும் தவிர்க்க முடியாததே.

ஆனால் அங்குதான் விடயமே இருக்கின்றது. கடந்த தடவை பாரதீய ஜனதா அரசு ஆட்சியில் இருந்தபோது இலங்கை விவகாரத்தை ஒட்டிய கொள்கை விடயங்களைத் தீர்மானிப்பதில் சோ. ராமசாமி போன்ற தரப்பினரின் செல்வாக்கு அதிகம் இருந்தது.

அதனால் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான பரிவான போக்கைக் கடைப்பிடிக்க முடியாத கட்டாயத்தில் அந்த அரசு அப்போது இருந்தது.

ஆனால் இப்போது நிலைமை முற்றாக மாறிவிட்டது என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

அடுத்த ஆட்சியைத் தாங்களே அமைக்கப் போகின்ற உறுதிப்பாட்டுடன் இப்போதே அதற்கான பூர்வாங்கக் கட்டமைப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வரும் பாரதீய ஜனதாக் கட்சி, அயல்நாடான இலங்கையின் விவகாரத்தைக் கையாள்வதற்கான உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து இப்போதே செயற்படத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

அந்தக் குழுவில் சோ.ராமசாமி போன்ற ஈழத் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தரப்புகளுக்கு எதிரான ஆட்கள் இடம்பெறவே இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்கால பாரதீய ஜனதாக் கட்சி அரசில் இலங்கை விவகாரத்தைக் கையாளும் உயர்மட்டக் குழுவுக்கு, கொழும்புக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நாகேந்திர நாத் ஜா பொறுப்பாக இருக்கின்றார்.

இல. கணேசன் போன்ற ஈழத் தமிழர்களுக்குப் பரிவான போக்குக்கொண்ட பலருமே அக்குழுவில் இடம்பெறுகின்றார்கள் என்றும் தெரிகின்றது.

இக்குழு ஏற்கனவே கூடி பல தீர்மானங்களை எடுத்துவிட்டது என்றும்
இலங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டி உறுதிப்படுத்துவதற்காகத் தீர்க்கமான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இக்குழு தீர்மானித்து, உத்தேச நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்திருப்பதாகத் தெரிகின்றது.

இந்தப் பின்னணியிலேயே ""எதிர்காலத்தில் ஆட்சிப்பீடமேறும் பாரதீய ஜனதாக் கட்சி அரசு ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும்'' என்று இல. கணேசன் உறுதிபடக் கூறும் கருத்தை நாம் நோக்கவேண்டியிருக்கின்றது.

இந்துத்துவப் பின்னணியைக் கொண்டுள்ள பாரதீய ஜனதாக் கட்சி, இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவது பௌத்த சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்பும், அடக்குமுறையுமே என்ற கோணத்தில் இலங்கை விவகாரத்தை இப்போது தெளிவான பார்வையுடன் நோக்க முற்பட்டிருப்பதாகவும்

இவ்விடயங்களை இலங்கையில் இந்தியாவுக்கான தூதுவராகப் பணியாற்றி நேரடியாக விவரமாக விளக்கமாக அறிந்து கொண்டவரான என்.என்.ஜாவே, இனி உத்தேச புதிய பாரதீய ஜனதா அரசில் இந்த அம்சத்தைக் கையாள்வார் என்பதால் இந்த பௌத்த மத ஆக்கிரமிப்பும் மேலாண்மையும் அத்தகைய விதத்தில் சரிவரக் கையாளப்படும் எனவும்
புதுடில்லித் தரப்புகள் கருத்து வெளியிடுகின்றன.

ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை "யார் குற்றியாவது நெல்லாக வேண்டும்' என்ற அவசரமும் அவசியமும்தான் அவர்களுக்கு. யாரது பங்களிப்போடாவது அவர்களுக்கு நியாயம் கிடைத்தால் நீதி நிலைநாட்டப்பட்டால் சரி !


Comments