வன்னியில் உணவு, மருந்தின்றி வாடும் அகதிகளுக்கு 61/2 கோடி தமிழர், 40 தமிழ் எம்.பி.க்கள் இருந்தும் எதுவும் செய்யவில்லை

*இலட்சிய தி.மு.க.வின் விஜய டி. ராஜேந்தர் கவலை

சென்னை: ஆறரைக் கோடி தமிழர்கள் இருந்தும், மத்தியில் 40 தமிழக எம்.பி.க்கள் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக எதனையுமே செய்ய முடியவில்லையென இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இலட்சிய தி.மு.க. இளைஞர் அணி சார்பில், கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் டி.ராஜேந்தர் பேசுகையில் கூறியதாவது;

இலட்சிய தி.மு.க. தொடங்கி, 5 ஆவது ஆண்டில் அஞ்சாமல் நடைபோடுகிறோம். இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தி.மு.க.வில் இணைந்தேன். தமிழன் என்ற உணர்வு என்னிடம் உள்ளதால் இதை நான் செய்தேன்.

கன்னடர்களுக்கு இருக்கும் இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை. குசேலன் படத்தை கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்றால், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டால்தான் விடுவோம் என்று கூறினார்கள்.

அதனால், அவர் மன்னிப்பு கேட்டு, படத்தை அங்கு வெளியிட்டுள்ளார். ஒகேனக்கல் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட நடிகர்கள் உண்ணாவிரதத்தில், ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தியது தமிழர்களின் குற்றம்.

இலங்கையின் வட பகுதி விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள இலட்சக்கணக்கான மக்களில் 2 இலட்சம் பேர் அகதிகள். அவர்களுக்கு சாப்பாடு, மருந்து எதுவும் இல்லை. செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மருந்தையும் அங்கு கொண்டு போக முடியவில்லை.

மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை.

மற்ற மாநிலத்தினர் இலங்கையில் இருந்து, அவர்கள் தாக்கப்பட்டால் சும்மா விடுவார்களா? ஆறரைக் கோடி தமிழர்களால், ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க உணர்வில்லை.

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நாளைய முதல்வர் நாங்கள் தான் என்கிறார்கள். நான் 25 வருடங்களாக அரசியலில் உள்ளேன். நாங்கள் தேர்தலில் நிற்கும்போது யாரையும் வாக்குப் போடுங்கள் என்று கேட்கமாட்டோம். பிடித்திருந்தால் போடுங்கள் என்றுதான் சொல்வோம்.


Comments