மனித உரிமைகளும் மானிடநீதியும் மடிந்து விட்டன தமிழ் இன அழிப்பும் நில அபகரிப்பும் தொடர்கிறது

* யாழ்.மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி. சிறில்
தற்போது வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளையும் அதன் பின்புலங்களையும் பார்க்கும் போது நாட்டின் ஜனநாயகமும் மனித உரிமைகளும் மானிட நீதியும் முற்று முழுதாக செத்துவிட்டன என்றே தோன்றுகிறது.

அரசின் முப்படைகளும் தரை, கடல், ஆகாய மார்க்கமாக தமிழ் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் பாடசாலை,வைத்தியசாலை, பொது இடங்கள் மீதும் இரவு பகல் பாராது மிகவும் முர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொள்கின்றன. தமிழ் இன ஒழிப்பும் நில அபகரிப்பும் தொடர்கின்றன.

இதனால் அப்பாவிப் பொது மக்களும் பச்சிளங்குழந்தைகளும் மாணவர்களும் கூட்டம் கூட்டமாக துடிதுடிக்க கொல்லப்படுகின்றனர். இக் கொடூர தாக்குதல்களை விடுதலை புலிகள் மீதும் அவர்களின் படை முகாம்கள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களென அரச படையினரும் அரச ஊடகப்பேச்சாளர்களும் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சொலமன் சூ. சிறில் தெரிவித்தார்.

இம் மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்;

இலங்கைத்தீவின் பூர்வீக குடிகளான தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டி கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சிங்களத்தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட அந்த கசப்பான வரலாறு பற்றி நான் இங்கு பேசுவதற்கு விரும்பவில்லை.

நிரந்தர தீர்வின்றி நிம்மதியான வாழ்வின்றி அழிவுகளையும் அனார்த்தங்களையும் இடர்பாடுகளையும் இடப்பெயர்வுகளையும் உணவு மருந்து மற்றும் போக்குவரத்து தடைகளினால் தினம் பசியையும் பட்டினியையும் சந்தித்து, தொடர்கின்ற யுத்தத்தின் கொடுமையால் ஏதிலிகளாக, அகதிகளாக மரணத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் இன்றைய நிலைமைகள் பற்றியும் இவற்றுக்கு காரணமான பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் என்று சொல்லப்படுகின்ற இந்த அவசரகால சட்ட. நீடிப்பு பிரேரணையில் பேசவிரும்புகிறேன்.

வன்னியில் இடம்பெற்ற அரச ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த்தாக்குதல்களில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினர் சிவநேசனும் அருட்பணிய?ளர்கள் பாக்கியறஞ்சித் , எம். எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் உட்பட அரச உத்தியோகஸ்தர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

அண்மையில் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார், கிளிநொச்சி அரசாங்க அதிபர் செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சாந்தலிங்கம் விமலகுமார் ஆகியோரும் அரச படைகளின் கிளைமோர்த் தாக்குதலினால் ஸ்தலத்திலேயே பலியானார்கள்

இவர்களுக்கும் புலிமுத்திரை குத்தப்போகின்றீர்களா ?

இவைகளை அரசு வரவேற்குமானால் இந்த நாடு வெகுவிரைவில் மரணங்கள் மலிந்த பூமியாகவும், புதைகுழிகளின் புகலிடமாகவும் மாறும் என்பது உறுதி.

வடக்கின் வன்னிப் பெரு நிலப்பரப்பில் பெரும் எடுப்பில் மும்முனைத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதும் இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் ,மக்கள் குடியிருப்புக்களும் இலக்குவைக்கப்படுவது பெரும் பரிதாபத்திற்குரியது. இதனால் பாரிய இடப்பெயர்வுக்கு மக்கள் ஆளாகி தங்குமிட வசதியின்றி வீதிகளிலும்,மரங்களின் நிழல்களிலும் அடிப்படை வசதி இன்றி அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இந்த மக்களுக்கான உணவு ,மருந்து, குழந்தைகளுக்கான பால்மா, குடிநீர், எரிபொருள் போன்ற அவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது அரசாங்க அதிபர்கள் திண்டாடுகிறார்கள்.

இவர்களுக்கான போதிய நிவாரண உதவிகளின்றி குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் , நோயாளர்கள்,வயோதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.

இதேவேளை வடபகுதிகளின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் மற்றும் பாவனைப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவேளை உணவை உண்டு உயிர் வாழும் நிலைமையேற்பட்டுள்ளது.

வடபகுதிகளின் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறையும் மருந்துகள், வைத்திய உபகரணங்கள் தட்டுப்பாடும் அதிஉச்சநிலையிலுள்ளது. இதே போன்று அனைத்து அரச திணைக்களங்களிலும் ஆளனி மற்றும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றது.போர்க் கால சூழலில் மக்களுக்கு சீரான சேவையாற்ற அரச அலுவலகங்களால் முடியவில்லை. தொழிலும் தொழில் வளங்களும் விளை நிலங்களும், கடல் வளங்களும் மனித உழைப்புக்களும் போரினாலும் போக்குவரத்து தடைகளினாலும் வீணடிக்கப்படுகின்றன. எம்மினம் நிவாரணங்களை நம்பிவாழ வேண்டிய துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்த ஆணைக்குழுக்களும்,விசாரணை கமிஷன்களும் ஆக்கபூர்வமாக செயற்படவேண்டும். மனித உரிமை மீறல்கள் மூடிமறைக்கப்படுவதை அரசு உடன் நிறுத்த வேண்டும். மக்கள் ஆட்சியில் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கவேண்டும்.தவறும் பட்சத்தில் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம் பெற்று உலக அரங்கிலிருந்து வெகுவிரைவில் தனிமைப்படுத்தப்படும் என்பதை இச் சபையிலே கூறிவைக்க விரும்புகிறேன்.

மாதாமாதம் இந்த அவசரகாலச் சட்டத்தை இச் சபையிலே நிறைவேற்றி அரசு எதனையும் சாதிக்கப்போவதில்லை. மாறாக இந்தக் கொடிய போருக்கு முடிவு கட்டி இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை பேச்சுவார்த்தையின் ஊடாக மேற்கொள்ள வேண்டுமென உலக நாடுகள் விருப்பம் கொண்டுள்ளபோதும் தமிழ் மக்களால் 20 வருடங்களுக்கு முன்பு நிராகரிக்கப்பட்டு செத்துப்போன 13 வது திருத்தச் சட்ட மூலத்தை அரசு தூக்கிப்பிடித்து சர்வகட்சி மாநாடு என்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரநிதிநிகள் அழைக்கப்படாத அர்த்தமற்ற மாநாட்டை காரணங்காட்டி காலத்தை கடத்துகிறது.

தமிழர் பிரச்சினை இன்று சர்வதேசப்பிரச்சினையாகியுள்ளது. ஆனால் அரசு அதை உள்நாட்டு பிரச்சினையாக தரம் இறக்கி வேடிக்கை பார்ப்பதும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் மட்டும் பேசுவதற்கும் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயார் என்றும். அரச தலைவர்கள் கூறிவருவது நடைமுறையில் சாத்தியமானதல்ல. விடுதலைப்புலிகள் ஏன் ஆயுதங்களை ஏந்தினார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ஜே. ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு கூறிய வார்த்தையை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்

"ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது' என்றார்.

இந்த வாக்கை அரசும் இந்த சபையில் உள்ளோரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக புத்ததர்மத்தை போதிக்க வேண்டிய சாதுக்களும் புரிந்து கொண்டால் இன்றைய அவல நிலை ஏற்பட்டிருக்காது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு நாம் அவசர அழைப்பை விடுக்கிறோம். தமிழர் தரப்பு முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை திட்டத்தின் அடிப்படையில் நிபந்தனையற்ற பேச்சுக்களை உடன் ஆரம்பிக்கும்படி வேண்டுகோள் விடுகின்றோம்.

எமது வேண்டுகோளை நிராகரித்து காலத்தை இழுத்தடித்து எமது மக்களின் துயரவாழ்வு நீடித்துச் செல்ல அரசு முற்படுமானால் எமது சுகந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து செல்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதையும் இதை உலக நாடுகளும் புரிந்து கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.


Comments