கிளிநொச்சி சிறிலங்கா இராணுவத்தின் கனவு

'சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தள நகரமாகவுமுள்ள கிளிநொச்சியை நான்கு மாதத்திற்குள் கைப்பற்றிவிடுவர் எனத்தான் முழுமையாக நம்புகிறேன்" சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் இந்நம்பிக்கையானது அவரின் தனிப்பட்ட மதிப்பீடாகவோ அன்றி ஊகமாகவோ கொள்வதற்கில்லை. சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தின் மதிப்பீடும் அது என்றே கொள்ளமுடியும். அண்மையில் இதனைச் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

அண்மையில் அவர் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில் 'விடுதலைப் புலிகள் அடுத்த மாவீரர் தினத்தைப் பதுங்கு குழிகளிலேயே கொண்டாடுவர்" என்றார். இதற்கு அவர் தெரிவித்துள்ள காரணமானது வன்னியில் புலிகளுக்கென பிரதேசம் எதுவும் அப்பொழுது, இருக்கப்போவதில்லை என்பதாகும்.

சிறிலங்காப் படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வரும் இக்கருத்துக்கள் - சிறிலங்காவில் பெரும்பான்மையோர் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டதாகவும் மாற்றம் கண்டுள்ளது. அதாவது, சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சியை விரைவில் கைப்பற்றிவிடும் என்ற உணர்வை ஏற்படுத்துமளவிற்குச் சென்றுள்ளது.

இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். ஒருபுறத்தில் சிறிலங்கா இராணுவம் வடக்கில் மேற்கு கரையோரமாக வெள்ளாங்குளத்திற்கு வடக்காகவும் உட்புறமாக மல்லாவியின் தெற்கு வரையிலும் முன்னேறியிருப்பது காரணமாகியிருக்கலாம்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வலிந்து தாக்குதல்கள் மேற்கொள்ளாததோடு-படிப்படியாகப் பின்வாங்கிச் சென்றமையும், மற்றொரு காரணமாக இருக்கலாம்.

அதாவது, புலிகள் வலிந்து தாக்குதல்களைச் செய்யும் பலத்தை இழந்துவிட்டதாக இராணுவத்தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் மீதான நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.

இத்தகையதொரு நிலையில் நான்கு மாதத்திற்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற பிரச்சாரம் நம்பப்படுவதற்கும் பேசப்படுவதற்கும் ஏற்றதொன்றாக மாறியிருப்பதென்பது ஆச்சரியத்திற்குரிய தொன்றல்லத்தான்.

சிறிலங்கா ஆட்சியாளர்களைப் பொறுத்து ஆனையிறவு, கிளிநொச்சி மட்டுமல்ல, முல்லைத்தீவு குறித்தும் சில எதிர்பார்ப்;புக்கள் உண்டு. இராணுவ ரீதியில் மோதி விடுதலைப் புலிகள் வெற்றிகொண்ட அதாவது, சிறிலங்கா இராணுவத்தைத் துரத்தியடித்த பகுதிகள் இவையாகும்.

சிறிலங்கா இராணுவத்தினருக்கு அழிக்க முடியாத வடுவை ஏற்படுத்திய தோல்விகள் இங்கு ஏற்பட்டிருந்தன.

இம்மோதல்கள் நிகழ்ந்த காலப்பகுதியில் சிறிலங்காவின் தற்போதைய இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத்பொன்சேகாவும் வடக்கில் சேவையிலேயே இருந்தார்.

இந்நிலையில் சிறிலங்கா அரசியல் - இராணுவத் தலைவர்களின் கனவுகளில் ஒன்றாக மேற்கூறப்பட்ட பகுதிகளை மீளக் கைப்பற்றுதல் என்பது இருந்து வருகிறது.

அதாவது கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பன அவர்களின் கனவு நகரங்களாகவே இருந்து வருகின்றன.

இதற்கென போர் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஆனையிறவு, கிளிநொச்சி, முல்லைத்தீவு குறித்து சிறிலங்காத் தரப்பால் அதிகம் பேசப்பட்டதும் உண்டு.

இதில் ஆனையிறவு ஊடாகக் கிளிநொச்சி என்ற ரீதியில் முகமாலைப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றிற்கு மேற்பட்ட படை நடவடிக்கைகள் படுதோல்வியிலேயே முடிந்தன.

இத்தகைய நிலையில் தற்பொழுது வன்னியின் தெற்கு தென்மேற்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சியை எட்டிவிடலாம் எனச் சிறிலங்கா படைத்தரப்பில் கருதப்படுகின்றது. இதன் வெளிப்பாடே நான்கு மாதங்களில் கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிவிடும் என்ற இராணுவத்தளபதியினதும் படைத்துறைச் செயலரின் பிரகடனங்களுமாகும்.

போரில் ஈடுபடுவோர் அனைவருமே தமது வெற்றிக்காகவே திட்டமிடுகின்றனர். ஆனால் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும், அதுவும் போரில் வெற்றி பெறுவதற்கான தொன்றாகவே இருக்கும். இருக்கவும் முடியும்.

ஆகையினால் போரில் ஈடுபடுபவர்கள், தமது வெற்றிக்காக களமுனைகளில் பல தந்திரோபாயங்களை மேற்கொள்கின்றனர். ஆனால், இதில் போரைத் தொடுப்பவர்களுக்கான வழிமுறைகள் சிலவே உள்ளன.

ஆனால், போரை எதிர்கொள்பவர்களுக்குப் போரைத் தொடுப்பவர்களைவிட மாற்று யுக்திகளுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

அதாவது, போரைத் தொடுப்பவர்களுக்கு வலிந்து தாக்குதல் - ஆக்கிரமித்தல் என்பது தவிர்க்க முடியாததொன்றாகிறது.

ஏனெனில், வலிந்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் இழப்புக்களினால் தமது நகர்வை நிறுத்திக் கொண்டாலோ அன்றி பின்வாங்கினாலோ அது களமுனையில் ஏற்பட்ட தோல்வி என்றாகிவிடும்.

ஆனால், எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் - பெரும் சேதம் இன்றி விலகிக்கொண்டால் போதும் அது தோல்வி என்று ஆகிவிடமாட்டாது.

அதாவது, முறியடிப்புத் தாக்குதல் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்தலும் வெற்றியே. அதேசமயம், வெற்றிகரமான பின்வாங்கல் ஒன்றை மேற்கொள்வதும் கூட ஒருவகையில் வெற்றிகரமானதே.

உலகப் போரியல் வரலாற்றில், வெற்றிகரமான பின்வாங்கல்கள் பல செய்யப்பட்டதுண்டு. இதற்கெனத் தலைநகரங்கள் கூடக் கைவிடப்பட்டதும் உண்டு. அதன் பின்பான முறியடிப்புத்தாக்குதல்களில் பெரு வெற்றிகள் பெறப்பட்டதும் உண்டு. இழந்த பிரதேசங்கள் மீட்கப்பட்டதும் உண்டு.

அதாவது, வெற்றிகரமாகப் பின்வாங்கும் துருப்புக்கள் - அன்றி பொருத்தமான வேளைகளில் பின்வாங்கும் துருப்புக்கள் தகுந்த வேளையில் வலிந்து தாக்குதல்களுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளுதல் என்பது இலகுவானதொன்றாகவே இருக்கும்.

இதனைச் சிறிலங்காப் படைத்தலைமையும் ஓரளவு விளங்கிக்கொண்டுள்ளதென்றே கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே தமது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து சிறிது வேறுபட்ட தொனியிலும் இடைக்கிடை பேசுவதற்குத் தலைப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் சிறிலங்கா இராணுவத் தளபதி அண்மைய பேட்டிகளில், இரண்டு விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதில்,

01. தந்திரோபாய ரீதியில் சில இடங்களில் இருந்து பின்வாங்குதல்களை இராணுவம் மேற்கொள்ளலாம்.

02. பிரதேசத்தை ஆக்கிரமிப்பது - அதாவது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைக் கைப்பற்றுதல் - எமது நோக்கமல்ல, விடுதலைப் புலிகளைக் கொன்றொழிப்பதென்பது எமது நோக்கமாகும்.

இராணுவத் தளபதியின் இக்கூற்றுக்களை கோத்தபாய ராஜபக்சவும் அண்மைய பத்திரிகைச் செவ்வியில் (லண்டன் ரைம்ஸ்) பிரதிபலித்துள்ளார் என்றே கொள்ளமுடியும்.

'யுத்த முன்நகர்வுகள் மூலம் விடுதலைப் புலிகளை வன்னிப் பகுதிக்குள் பின்வாங்கச் செய்வதன் மூலம் முழுமையாக யுத்தத்தில் வெற்றிபெற முடியாது. விடுதலைப் புலிகள் பதுங்கியிருக்கும் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவர்களைப் பூரணமாகத் தோல்வியடையச் செய்வதன் மூலமே சமாதானத்தை நிலை நாட்ட முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவினதும், கோத்தபாயவினதும் இக்கருத்துக்கள் ஒருபுறத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களைத் தம்மால் முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ள முடியாது என்பதையே உறுதி செய்வதாகவுள்ளது.

ஆக்கிரமிப்புப் போர் ஒன்றை நடத்தும் படைத்தரப்பு சில பகுதிகளில் இருந்து பின்வாங்குவது குறித்துப் பேசுவது போரின் போக்கு அவர்களுக்குச் சாதகமானதாக இல்லை என்பதை உணர்த்துவதாகவன்றி வேறு எதனை உணர்த்துவதாக இருக்க முடியும்?

இதேவேளை, விடுதலைப் புலிகளைக் கொன்றொழித்தல் என்ற அணுகுமுறையானது தமிழர்களைக் கொன்றொழித்தல் என்பதாகவே கொள்ளத்தக்கதாகும். இதுவே இலகுவில் சாத்தியமானதாகவும் நடைமுறையில் இன்று கடைப்பிடிக்கப்படும் வழிமுறை ஒன்றாகவும் உள்ளது.

சிறிலங்காத் தரப்பு நிலைமை இவ்வாறானதாக இருக்கையில், விடுதலைப் புலிகள் நிலைப்பாடு பற்றிப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக விடுதலைப் புலிகள் படை நடவடிக்கைகளை முறியடிப்பதான வலிந்து தாக்குதல்களை விரைவில் நடத்தப் போகின்றார்களா?

அன்றி மேலும் பின்னகர்வுகளை மேற்கொள்ளப் போகின்றார்களா? என்பது முக்கியமானதாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிர்த்தரப்பை எந்தளவிற்கு அனுமதித்தல் என்பது குறித்தும் களமுனை எங்கு, எவ்வேளையில் தமக்குச் சாதகமானதாக மாறக்கூடும் என்பது குறித்தும் மதிப்பீடு செய்யும் ஆற்றல் போதிய அளவில் உண்டு.

ஆகையினால், யுத்தத்தை எங்கு நடத்துவது என்பதையும், எப்பொழுது நடத்துவது என்பது குறித்தும் விடுதலைப் புலிகள் தாமே தீர்மானித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

சிறிலங்காப் படைத்தரப்பு, தமது அடுத்த கட்டத் தாக்குதலை மல்லாவி, துணுக்காய், நாச்சிக்குடா நோக்கியதாக முன்னெடுத்தல் கூடும். ஏனெனில் கிளிநொச்சி நோக்கியதாக இருப்பினும் சரி, பூநகரி நோக்கியதானதாக இருப்பினும் சரி, இம்முனைகளிலேயே நகர்வுகள் முன்னெடுப்பதற்கான சூழ்நிலையே காணப்படுகின்றது.

இதேவேளை இம்மும்முனைகளில் இறுதியாக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட சில நகர்வுகள் முறியடிக்கப்பட்டிருந்தன. இதில் படைத்தரப்பு குறிப்பிடத்தக்க இழப்புக்களைச் சந்தித்ததோடு மட்டுமல்ல, பின்வாங்கி இருந்தது என்பதே களநிலைமையாக இருந்தது.

அத்தோடு, இம்மோதல்களில் கொல்லப்பட்ட சில படையினரின் சடலங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. இதேவேளை, இத்தாக்குதல்களில் படைத்தரப்பு அதிக இழப்புக்களைச் சந்தித்துள்ளதாகக் கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதோடு இழப்பைச் சந்தித்தவை சிறிலங்காவின் உயர்சக்தி கொண்ட படைப்பிரிவு எனவும் தெரிவித்திருந்தன.

இத்தகையதொரு நிலையில் கிளிநொச்சி நோக்கியதாகச் சிறிலங்கா இராணுவம் படை நடவடிக்கையை மேற்கொள்ளும் பட்சத்தில் விடுதலைப் புலிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே பல விமர்சகர்களினதும். ஆய்வாளர்களினதும் கேள்வியாகும்.

அதாவது, எதிர்த்தாக்குதலுக்கும், முறியடிப்புத் தாக்குதலுக்குமான களத்தை விடுதலைப் புலிகள் எங்கு தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள் என்பதே இன்றுள்ள முக்கிய கேள்வியாகும்;.

ஏனெனில் அதற்கான காலம் நெருங்கி வந்துள்ளதாகவே பலராலும் கருதப்படுகின்றது.

இருப்பினும் ஆரூடங்கள், எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றைப் பூர்த்தி செய்வது போன்று விடுதலைப் புலிகளின் தீர்மானங்கள் இருக்கும் எனக் கொள்வதற்கில்லை.

களமுனையின் புவியியல் தன்மையில் இருந்து ஆளணி மற்றும் சூட்டு வலுவரையில் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையிலேயே தீர்மானம் செய்யப்படுவதாக இருக்கும்.

ஆனால், புலிகளின் வலிந்து தாக்குதல்கள் எவ்வேளையில் எவ்வாறானதாக அமையப்பெறினும் சரி அன்றி அவர்கள் வலிந்து தாக்குதல்களை நடத்தாது போனாலும் சரி - கிளிநொச்சியை நான்கு மாதங்களுக்குள் கைப்பற்றுதல் என்ற சிறிலங்கா ஆட்சியாளரின் கனவு களமுனையின் யதார்த்தத்திற்கு உட்பட்டதொன்றாக இருக்கமாட்டாது.

அதிலும், இன்னும் இரண்டு மாதங்களில் மாரிகாலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இக்காலக்கெடுவானது சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பை அபிலாசையைக் கொண்டதாக இருக்குமே ஒழிய யுத்தம் குறித்ததான ஒரு சிறந்த மதிப்பீடாகக் கொள்ளமுடியாது.

- ஜெயராஜ் -

நன்றி: வெள்ளிநாதம் (15.08.08)


Comments