மன்னார் வான் பரப்பில் இந்தியச் சிறகுகள் விரிகின்றனவா?

தமிழக மீனவர்கள் தினந்தோறும் கொல்லப்படும்போது, இந்திய இலங்கையின் நூற்றாண்டு கால ஆழமான உறவினை, பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

சார்க் மாநாட்டில். இது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போலிருந்தது.கச்சதீவை மீளப் பெற்றால், இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தடுக்கப்படுமென தப்புக் கணக்குப் போடப்படுகிறது.

இந்த கச்சதீவு கைமாறிய வரலாற்றை சிறிது பார்க்கலாம்.
கச்சம் என்றால் ஆமை என்றும் பொருள்படும். பச்சை நிற ஆமைகள் நிறைந்த இடமாக அத்தீவு விளங்கியதால், அதனை பச்சைத்தீவென்றே முன்பு அழைத்தார்கள்.

பின்னர் கச்சதீவாக மாறிவிட்டது.1882 ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரம் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சதீவு, பின்னர் கிழக்கிந்திய கம்பனியால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது.
பிரித்தானியரிடமிருந்த இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 1974 ஆம் ஆண்டுவரை இக் கச்சதீவு இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசம்தான்.

இக் கச்சதீவுக் கையளிப்பில் ஒரு வித அரசியல் சூத்திரமும் புதைந்துள்ளது.1974 ஆம் ஆண்டில், இந்தியா பொக்ரனில் நடத்திய அணுகுண்டு வெடிப்பு பரிசோதனையில் இருந்து ஆரம்பமாகிறது இந்த கச்சதீவுப் பரிமாற்றம்.

உலக நாடுகள் பலவற்றிலிருந்து எழுந்த கண்டனங்களை தமது பிராந்திய நலனிற்குச் சாதகமாக பயன்படுத்த முயன்ற பாகிஸ்தான் அரசு, ஐ.நா. சபையில் இந்தியாவிற்கெதிராகத் தீர்மானமொன்றினைக் கொண்டு வர முயற்சித்தது.

ஐ.நா.விலுள்ள இலங்கைப் பிரதிநிதியை தம்பக்கம் ஈர்க்க, எட்டு நிபந்தனைகளுடன் கூடிய இந்திரா சிறிமா ஒப்பந்தமொன்று 1974 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதியன்று உருவானது.
அணுகுண்டு பரிசோதனையால் எழுந்த எதிர்ப்பலைகளை தணிக்க, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட நிலமே இந்த கச்சதீவாகும்.

அதனைத் தொடர்ந்து1976 மார்ச் 23 ஆம் திகதியன்று, மன்னார் வளைகுடா கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தமொன்றும் உருவானது. புதிய உலகக் கோட்பாடு உருவாக முன்னர் நடந்த நிகழ்வுகள் இவை.

ஆகவே இலங்கையின் ஆதரவினைப் பெற, இந்தியா வழங்கிய நன்கொடையாகவும் கச்சதீவினைக் கருதலாம் அல்லது கையூட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சிங்கள தேசத்தை தனது ஆளுகைக்குள் இழுத்துவர இந்தியா மேற்கொண்ட நகர்வுகள் யாவும், தமிழ் மக்களின் நலன்களை அடகு வைத்தே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய இந்திய நகர்வுகளின் படிமுறை வளர்ச்சியில் மாகாண சபைத் திணிப்பும், ஆயுத உதவிகளும் பதியப்பட்டுள்ளன.

இந்தியாவின் முழுமையான பார்வையும் அவதானிப்பும் தற்போது சிங்களதேசத்தை நோக்கித் திருப்பப்பட்டுள்ளது என்பதே சரியான கணிப்பாகும்.

தென்னாசியப் பிராந்தியத்தில் முனைப்புப் பெற்றுள்ள வல்லாதிக்க நாடுகளின் முரண்நிலைக் களத்தில், தமிழர் நலன் குறித்த மனித நேயப் பார்வை இந்தியாவிற்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

தேசிய இனங்களிடையே நிலவும் முரண்பாடுகளை தனது ஆதிக்க அபிலாஷைகளுக்கான கருவியாக இந்தியா பயன்படுத்துவதை புரிதல் வேண்டும்.அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்பிற்கான இராஜதந்திர நகர்வுகளின் வெளிப்பாடுகளை “சார்க்’ மாநாட்டிலும் இந்தியா புலப்படுத்தியது.

ஓர் உலகம், ஒரு கனவின் மொத்த உருவமாக அமெரிக்கப் பேரரசு வெளிக்கிளம்புவதற்கு முன்னர், இலங்கையை தன் வலைக்குள் வீழ்த்த, இந்தியா வழங்கிய கச்சதீவு நன்கொடைகள், இன்று பிரதிபலனை அறுவடை செய்யும் காலத்தை தொட்டு நிற்கிறது.

சிங்கள தேசத்தைத் தன் காலடியில் விழ வைக்க உபயோகிக்கப்பட்ட தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை, அதற்கு எதிரான தளத்தில் நின்றும் இந்தியா பயன்படுத்துகிறது.

பொருளாதார ஆக்கிரமிப்பினை வெளிப்படையாகவும், சிங்களதேசம் விரும்பும் தமிழின அழிப்பிற்கான இராணுவ உதவிகளை மறைமுகமாகவும் கடைப்பிடிக்கும் இந்திய இராஜதந்திர இரட்டைப் பாதையானது, குறிக்கோள் எட்ட முடியாத சமாந்தரப் பயணத்தில் முடிவடையலாம்.
சீனப் பிடிக்குள் சென்றடைந்த மியன்மாரின் எண்ணெய் வளங்களிலிருந்தும் இந்தியா பாடம் கற்கவில்லை.

தவறான பாதையில் தவறவிட்ட அனுகூலங்களை, இன்னுமொரு பிழையான பாதையில் பெற்றுக் கொள்ளலாமென முயற்சிப்பது போலுள்ளது, மன்னார் எண்ணெய் வளத்தை முழுமையாகக் கையகப்படுத்த இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகள்.

இதில் மன்னாரிலுள்ள எண்ணெய் வளம் என்பதை விட, அக்கடல் பிராந்தியத்துள் எதிரி கால் பதிக்கக் கூடாதென்பதே இந்திய வல்லாதிக்கத்தின் தேவையாகவிருக்கிறது.

அதாவது வளப்பங்கீடு என்பதற்குமப்பால், தமது ஆதிபத்திய எல்லையோடு ஒட்டிய கேந்திர முக்கியத்துவம்மிக்க கடல், தரைப் பிரதேசங்களில் சீனா, பாகிஸ்தானின் நிலையெடுப்பு நிகழும் வாய்ப்பினை முறியடித்தலே இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு தற்போது இருக்கும் தலையாய பிரச்சினையாகவுள்ளது.

கொழும்பில் வாடகை வண்டியில் பயணித்த எம்.கே.நாராயணனின் முதன்மையான பணியும் இதுதான்.

ஏற்கனவே கொழும்பு வட்டாரத்தில் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள “சீபா’ (இஉகஅ) எனப்படும் முழுமையான பொருளாதார இருதரப்பு உடன்பாடு சிங்கள தேசிய முதலாளிகளால் நிராகரிக்கப்படும் நிலையிலுள்ளது.

இவ்வொப்பந்தம் ஊடாக ஒரு முழுமையான பொருளாதார ஆக்கிரமிப்பினை தம்மீது இந்தியா செலுத்த முற்படுவதாக சிங்களம் அச்சமடைவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கம் முடிவடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்னர், இந்தியாவின் நவீன காலனி ஆதிக்கத்துள் இலங்கை அகப்பட்டு, இந்தியாவின் 27 ஆவது மாநிலமாக இணையும் நிலை தோன்றப்போவதாக, ஜே.வி.பி. எச்சரிக்கின்றது.

வெள்ளைப்புலி நோர்வேயை வெளியேற்றி, இந்திய அனுசரணையுடன் இனப்பிரச்சினையை தீர்க்க முடியுமென்று, முன்னர் இந்தியாவிற்கு சாமரம் வீசியவர்கள்தான் இந்த ஜே.வி.பி.யினர்.
கொழும்பு அரசியல் களத்தில் தற்போது நோர்வே இல்லை. இன்று சிங்கள தேசத்தின் இறையாண்மைக்குள் ஊடுருவ முயலும் இந்தியாவையும் அகற்றிவிட்டால், சீனாவை உள்நுளைத்து, தமது சிவப்புச் சாயத்தை அழிய விடாமல் காப்பாற்றிக்கொள்ளலாமென்பதே ஜே.வி.பி.யின் நீண்ட மூலோபாயம்.

ஆனாலும் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெருந்தேசிய வாத கூட்டுகள், வேகமாக முன்னெடுக்கும் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஜே.வி.பி.யினால் இயங்க முடியவில்லை.

இந்திய “சீபா’ விற்குள் அகப்பட்டால், சீனாவின் நிரந்தர ஆதரவு, விலகிச் சென்று விடுமென்ற அச்சம், ஜே.வி.பி.க்கும் உண்டு.

“சார்க்’ மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகளைப் பார்க்கிலும், பார்வையாளர்களாகக் காட்சி தந்தவர்களே பலவான்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

சிங்கள தேசத்தை ஏதாவதொரு அணி இழுத்துச் சென்று விடுமென்கிற அச்சத்தையே, இவ்வுலக வல்லரசாளர்களின் “சார்க்’ மாநாட்டு பிரசன்னம் புலப்படுத்துகிறது.

ஐ.நா. சபை மனித உரிமைச் சபையின் உறுப்புரிமை நிராகரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் ஏற்பட்ட தலைகுனிவை சரிசெய்ய “சார்க்’ மாநாட்டை பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம்.
மாலைதீவில் நடைபெறவிருந்த மாநாட்டை, 300 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் நடத்த அரசாங்கம் முனைந்த பின்னணியின் தாற்பரியம் இதுவாக இருக்க வேண்டும்.
ஆனாலும் அரசாங்கத்தின் எண்ணம், பயங்கரவாதத்திற்கெதிரான தீர்மானம் ஒன்றினூடாக நிறைவேறியுள்ளது.

“சீபா’ ஊடாக, இந்திய ஆதிக்கத்துள் இலங்கையை இழுத்துவரும் மன்மோகன்சிங் குழுவினரின் நோக்கம் நிறைவேறவில்லை.

“சீபா’ ஊடாக இந்திய ஆதிக்கத்துள் இலங்கையை இழந்துவரும் மன்மோகன் சிங் குழுவினரின் நோக்கம் நிறைவேறவில்லை. அதேபோன்று “பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ ஒன்றினை இலங்கையுடன் கைச்சாத்திட இலங்கை சென்ற பாகிஸ்தானின் கனவும் நிஜமாகவில்லை.

இறுதிவரை முயன்றும் “சீபா’ வை ஒப்பேற்ற முடியாமல் போன நிகழ்வு, இந்திய இராஜ தந்திர தோல்வியாகவே கணிக்க வேண்டும்.

திருமலை எண்ணெய் குதம், மன்னார் எண்ணெய் படுக்கை, காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையென வட கிழக்கு பிரதேசத்தை மட்டும் தமக்களித்து, தமிழர் பிரதேசத்துள் இந்தியக் கனவினை முடக்க சிங்கள தேசம் முற்படுவதனை பிரதமர் மன்மோகன்சிங் புரிந்து கொள்வதால், முழு இலங்கையையும் தனது கட்டுக்குள் கொண்டுவர “சீபா’ உடன்பாட்டினை உயர்த்திப் பிடிக்கிறார்.

இதேவேளை மன்னார் ஆகாயப் பரப்பிலிருந்து புதியசெய்தியொன்று கசிகிறது.
கடந்த சில நாட்களில், இலங்கை வான் படைக்குச் சொந்தமான இரண்டு உலங்கு வானூர்திகள் சேதமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் அவசரமாகத் தரையிறங்கிய ஒரு உலங்குவாணூர்தியில், இந்தியப் படையினர் பயணம் செய்ததாக சிங்களப் பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது.

இச்செய்தி உண்மையாக விருந்தால், காந்தி தேசத்தின், தோல்வியுறும் வெளியுறவுக் கொள்கையின் நீண்ட பட்டியலில் இலங்கையும் இணைந்து கொள்ளுமென்பதே சத்தியமான உண்மையாகும்.

- சி.இதயச்சந்திரன்-

Comments