விடுதலைக்கான போரில் இழப்புக்கள் ஏற்படத்தான்செய்யும்: அதனையும் தாண்டி இலட்சியத்தை அடைவோம்: கேணல் தீபன்

இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும். ஆனால், விடுதலைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறான பல துன்பங்களை தாண்டித்தான் விடுதலையை வென்றெடுக்கவேண்டும் என்று விடுதலைப்புலிகளின் வடபோர் முனை கட்டளை தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தனது உரையில் மேலும் கூறியதாவது:-

சிறிலங்கா படை தமிழ்மக்கள் மீது உளவியல்போர் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் நடத்தியும் எறிகணைத்தாக்குதல் நடத்தியும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகின்ற முயற்சியில் சிறிலங்கா ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழ்மக்கள் இடமளிக்ககூடாது. எதிரியின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துகொள்வதற்கு பதுங்குகுழிகளை அமைத்தும் அரண்களை அமைத்தும் பாதுகாப்பினை தேடவேண்டும்.

தமிழ்மக்கள் போரியல் சூழலுக்கு ஏற்றவாறு தமது வாழ்க்கையை மாற்றவேண்டும். இவ்வாறு எதிரியின் தாக்குதலில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துகொண்டு விடுதலைக்கான பணியினை விரைவுபடுத்தவேண்டும். இதன்மூலம்தான் விடுதலைக்கான போரில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் கனவினை நனவாக்க தமிழர்கள் ஒவ்வொருவரும் போராடவேண்டும்.

விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்படத்தான்செய்யும். ஆனால், நாம் தொடர்ந்து போராடிவருகிறோம். எதிரி தமிழ்மக்களுக்கு பாரியஅழிவுகளை - உயிரிழப்புக்களை - ஏற்படுத்தி தமிழ்மக்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கிவருகின்றான்

விடுதலைக்கான போரில் இவ்வாறான துன்பங்களை தாண்டித்தான் வெற்றிகளை பெறமுடியும். விடுதலைக்கான அர்ப்பணிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த அர்ப்பணிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சிறிலங்கா படைகள் நினைப்பதை செய்து முடிக்கமுடியாது. எதிரிக்கு அவலத்தை கொடுத்து எமது வாழ்வை மாற்றவேண்டும். இதுதான் நாம் மாவீரர்களுக்கு செய்கின்ற பணியாக இருக்கும். இப்பணியை நிறைவேற்றி முடிப்பது தமிழ்மக்கள் அனைவரதும் கடமையாக இருக்கும். இதன்மூலம் விடுதலையை வென்றெடுக்கமுடியும்.

புளியங்குளத்தை புரட்சிக்குளமாக்கிய லெப்.கேணல் விக்கீஸ்வரன்

லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரன் 16 ஆண்டுகளாக தேசவிடுதலைக்காக உழைத்தவர். சிறந்த நிர்வாகத் திறமை மிக்க - துணிவுமிக்க - தளபதி. 1991 இல் தனது உடன்பிறப்பு 'ஆகாயக் கடவெளி சமரில்' வீரச்சாவடைந்தவுடன், தனது உடன்பிறப்பின் கனவை நனவாக்க விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவர்.

விடுதலைப் போராட்டத்தில் இவரது தொடக்கப் பணியாக புதியபோராளிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் ஒரு ஆண்டு காலமாக சண்டைகளில் ஈடுபட்டவர்.

1997 இல் - ஜெயசிக்குறு காலப்பகுதியில் - சிங்களப்படைகளின் நடவடிக்கைக்கு எதிராக - என்னுடன் நின்று நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு - புளியங்குளத்தை புரட்சிக்குளமாக்கியதில் விக்கீசுக்கும் பெரும் பங்குண்டு. சிறிலங்கா படையினரின் பளை படைத்தளத்தை உடைத்தெறிந்து, இத்தாவிலில் நிலைகொண்டிருந்த எமது அணிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஒரு தடைநீக்கியாக விளங்கியவர்.

ஒவ்வொரு விடுதலைப் போராளியையும் இழக்கின்றபோது அது எமக்கு பேரிழப்பாக இருக்கின்ற போதும் இம்மாவீரர்களின் கனவினை நனவாக்க நாம் அனைவரும் அணிதிரள்வதுதான் இம்மாவீரர்களுக்குச் செய்யும் பெரும் வணக்கமாக இருக்கமுடியம்.

இவ்வாறு கேணல் தீபன் தெரிவித்தார்.

வீரவணக்க நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச் சுடரினை மாவீரர்பணிமனை பணிமுதல்வர் பொன் தியாகம் ஏற்றினார். விக்கீஸ்வரனின் துணைவியார் வித்துடலுக்கான ஈகச்சுடரினை ஏற்றி மலர் மாலை சூட்டினார். தொடர்ந்து, மலர் மாலைகளை அவரது பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், கேணல் தீபன, லெப்டினட் கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி சிறப்புத் தளபதி கோபால் ஆகியோர் சூட்டினர்.

கிளிநொச்சிக் கோட்ட அரசியற்றுறைப் பொறுப்பாளர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீரவணக்கவுரைகளை சமராய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி, கேணல் தீபன் ஆகியோர் ஆற்றினார். மலர் வணக்கத்தை வவுனியா மாவட்ட கட்டளைத் தளபதி லோறன்ஸ் ஆரம்பித்து வைக்க மக்கள் மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து வித்துடல் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூயவிதை குழியில் விதைக்கப்பட்டது.

Comments