வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக தமிழக கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்- தமிழக மக்கள் கருத்து

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போர் காரணமாக இலட்சக் கணக்கில் இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள பொதுமக்கள் பலர் வேண்டுகோள் விடுத்தனர்.


வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக கொழும்பு வார இதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அதேவேளையில் இந்தியா வாய்மூடி மௌனியாக இருக்கக் கூடாது. இந்த விடயத்தில் தலையிட வேண்டும் என்றும் தமிழக மக்களின் ஒரு பகுதியினர் அந்த வார இதழுக்குத் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில பொதுக் குழு உறுப்பினர் அசோக்குமார் கருத்துத் தெரிவிக்கையில்,

காங்கிரஸ் கட்சி தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையாக நடத்துமானால் காங்கிரஸ் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளதுடன் இலங்கையில் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவது துரதிர்ஷ்ட வசமானது மிகவும் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளதாகவும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.


தமிழகத்தை சேர்ந்த இல்லத்தரசியான திருமதி சரஸ்வதி கருத்துத் தெரிவிக்கையில்,

பச்சைக்குழந்தைகள் பட்டினிகிடந்தால் பூமாதேவி பொறுக்காது. சின்ன பசங்களும் இளம் பெண்களும் இப்படி நடுத் தெருவில் வாழ்க்கை நடத்துவதை பார்க்க பொறுக்கவில்லை. இந்நிலை மாற வேண்டும் என்று கூறினார்.

இல்லத்தரசியான திருமதி ஜெயலட்சுமி கூறியதாவது,

பச்சைப் பிள்ளைகளும் தாய்மார்களும் வீதியிலேயே கிடக்கிறார்கள். என் மகன் கம்பியூட்டரில் அந்த படங்களை எடுத்து காட்டிய பொழுது எனக்கு பகீர் என்று இருந்தது. அரசியல் பிரச்சினைகளை ஓரம் கட்டி விட்டு மக்கள் நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டுமோ அதை அந்த நாட்டு அரசாங்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இல்லத்தரசியான திருமதி பத்மாசினி என்ற பெண்மணி கருத்து தெரிவிக்கையில்,

குழந்தைகளும் பெண்களும் வசிப்பதற்கு இடமில்லாமல் கூரை இல்லாத திறந்த வெளியில் வாழ்ந்து கொண்டிருப்பதை கேள்விபட்டதும் மிகவும் வேதனையாக இருந்தது என்றும் தெரிவித்ததுடன் நமது எதிரிகளுக்கு கூட இத்தகைய மோசமான துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்பட்டுவிட கூடாது.

ஈழத்தில் இருக்கின்ற நமது சகோதரர்களின் வாழ்வில் விடியல் பிறக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.

மருந்துக்கடை உரிமையாளரான நாகப்பன் கருத்து தெரிவிக்கையில்,

சின்ன குழந்தைகள் கூட நடுத் தெருவில் நிற்கின்றனர். நானும் பிள்ளையை பெற்றவன்தான். இன்னொரு குழந்தை இப்படி கஷ்டப்படுவதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.



Comments