ரஷ்யாவின் நடவடிக்கை உலகிற்கு கூறிய செய்தி என்ன?

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பதையே கடந்த வாரம் ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. அண்மைக்காலமாக மேற்குலகம்
வரைந்து கொண்ட எழுந்தமானமான வரைவிலக்கணங்களுக்கு எல்லாம் இது ஆச்சரியக்குறி வைத்துள்ளது.

சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமான போது, கருங்கடலுக்கு அண்மையாக அமைந்துள்ள ஜோர்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோதல் களும் ஆரம்பமாகியிருந்தன. ஜோர்ஜியா வின் பிடியில் இருந்த போதும் சுதந்திர பிரகடனம் செய்த தென் ஒசேஷிய மற்றும் அப்காசியா (South Ossetia and Abkhazia) ஆகிய மாநிலங்கள் ஜோர்ஜிய படைகளின் தாக்குதல்களுக்கு தொடர்ச் சியாக உட்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் கடந்த வாரம் மோதல்கள் மூண்டிருந்தன.

ஜோர்ஜியா படைகள்தென் ஒசேஷியா பகுதி மீது கடந்த வியாழக்கிழமை (07) காலை மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்தே தாம் படை நடவடிக்கையை ஆரம்பித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை மாலை ரஷ்யாவின் 58 ஆவது இராணுவம் தென் ஒசேஷியா நோக்கி நகர்ந்த போது கடும் மோதல்கள் ஆரம்பித்திருந்தன. ரஷ்யாவின் 58 ஆவது இராணுவத்தின் தாக்குதலுக்கு உதவியாக 76 ஆவது வான்நகர்வு (PsKov) படையணியின் பற்றலியன் துருப்புக்களும் களமிறங்கியிருந்தன.

ரஷ்யாவின் நடவடிக்கை நன்கு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும். தரைப்படையினர் தென் ஒசேஷியா மற்றும் அப்காசியா பகுதிகளுக்கூடாக வேகமான நகர்வை மேற்கொண்டிருந்த அதே சமயம், கடற்படை கப்பல்கள் கருங்கடலினூடாக ஜோர்ஜியாவுக்கான ஆயுத உதவிகளை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. மேலும் வான்படையின் மிக்29 மற்றும் எம்.ஐ35 ரக தாக்குதல் விமானங்களும் உலங்குவானூர்திகளும் ஜோர்ஜியாவின் வான்படை தளம், படை நிலைகள், ஆயுத கிடங்குகள், ராடர் மையங்கள் என்பன மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்தன.

படைவலு ஒப்பீட்டை பொறுத்தவரையில் ரஷ்யாவுக்கும், ஜோர்ஜியாவுக்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு. உதாரணமாக ஜோர்ஜியாவின் படைபலத்தை எடுத்துக் கொண்டால் அது 26,900 வீரர்கள், 82 போர் டாங்கிகள், 7 எஸ்.யூ25 தாக்குதல் விமான ங்கள், 95 பீரங்கிகள், 139 துருப்பு காவிகள் என்பவற்றை கொண்டது. ஆனால் ரஷ்யா வின் படை பலம் 641,000 வீரர்கள், 6,717 போர் டாங்கிகள், 6388 துருப்புக்காவிகள், 1206 போர் விமானங்கள், 7550 பலதரப் பட்ட பீரங்கிகள் என்பவற்றை கொண்டது டன், அணுஆயுதங்கள், மற்றும், நீர்மூழ்கி கப்பல்கள், நீண்டதூர ஏவுகணைகள் என்பன வும் அவர்களிடம் மிக அதிகம்.

இருந்த போதும் ரஷ்யாவின் இந்த படை நடவடிக்கையை உலகம் உன்னிப்பாக கவனித்து வந்ததற்கு காரணங்கள் உண்டு. 1990 களில் பல்கன் வளைகுடா, இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான், அதன் பின்னர் ஈராக் என அமெரிக்காவும், அதன் கூட்டணி அமைப்பான நேட்டோ கூட்டமைப்பும் மேற்கொண்டு வந்த படை நடவடிக்கைகள் மற்றும் பூகோள அரசியலுடன் ரஷ்யாவின் படை நடவடிக்கைகளை ஒப்பிட்டதே அதற்கான காரணம்.

இவற்றுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவின் படைநடவடிக்கை மிகவும் வேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது 6 நாள் போரில் தென் ஒசேஷியா மற்றும் அப் காசியா ஆகிய பகுதிகளில் இருந்து ஜோர் ஜிய படைகளை அகற்றியதுடன் ரஷ்யாவின் படை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து விட் டதாக அது அறிவித்திருந்தது.

நேட்டோ மற்றும் அமெரிக்கா கூட்டணியை பொறுத்தவரையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அவர்களுக்கு பெரும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்பது வெளிப்படையõனது. அதாவது போரியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி உலகின் படை சமவலு தொடர்பாக மீண்டும் ஒரு கோட்டை வரையும் நிலைக்கு ரஷ்யாவின் படை நடவடிக்கை உலகினை தள்ளியுள்ளது.

2001 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த போது அன்றைய தலிபான் ஆட்சியின் படை பலம் தற்போதைய ஜோர்ஜியாவின் படை பலத்துடன் ஒப்பிடும் போது மிகவும் பலவீனமானது. மேலும் வெளியுலகின் ஆதரவுகள், நாட்டின் உட்கட்டமைப்புக்கள் என்பனவும் ஆப்கானில் மிகவும் பலவீனமாகவே இருந்தன. ஆனால் அந்த மோதல்களில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எடுத்துக்கொண்ட காலம், இழப்புக்கள் என்பவற்றுடன் ஒப்பிடும் போது ரஷ்யாவின் படை நடவடிக்கையின் வேகம் அதிகம் என்பது ஒரு சாராரின் கருத்து.

தரை, கடல், ஆகாய வழிகளால் ஜோர்ஜியாவை முற்றுகையிட்ட ரஷ்யா அதன் தொலைத்தொடர்பு வலையமைப்பையும், இணையத்தளங்களையும் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்க செய்திருந்த அதேசமயம் பல்கன் குடியரசுகள், ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான் என மேற்குலகம் மேற்கொண்ட அதே இராஜதந்திர நகர்வுகளை தற்போது ரஷ்யாவும் மேற்கொண்டுள்ளதும் கவனிக்க தக்கது. அதாவது மேற்குலம் தமது நடவடிக்கைகளை எவ்வாறு மனிதாபிமான நடவடிக்கைகளாக சித்தரிக்க முயன்றனவோ அதே போலவே ரஷ்யாவும் தனது நடவடிக்கையை ஒரு மனித நேய நடவடிக்கையாகவும், ரஷ்ய படையினரை அமைதி படையினராகவும் அறிவித்துள்ளது.

சோவியத்து ஒன்றியம் உடைந்து பல நாடுகள் உருவாகிய போது அவற்றை ஊக்குவித்த மேற்குலகம் அந்த நாடுகளை தமது நேட்டோ அமைப்பிலும் உள்வாங்கியதுடன், மேலும் பல நாடுகளை உள்வாங்கவும் முற்பட்டிருந்தன. மேலும் முன்னாள் சோவியத்து ஒன்றியத்தின் கூட்டாளியான யூகோஸ்லாவியாவையும் பல துண்டுகளாக உடைத்து பல சிறிய நாடுகளை உருவாக்கியதில் மேற்குலகத்தின் பங்களிப்பு கணிசமானது.

பால்கன் வளைகுடா நெருக்கடியின் முடிவாக கடந்த பெப்ரவரி மாதம் கொசோவோ தனது சுதந்திரத்தை அறிவித்த போது மேற்குலகம் மிகவும் விரைவாக அதனை அங்கீகரித்து உள்வாங்கி கொண்டது. அன்று சோவியத்தின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிரதமருமான –விளாடிமிர் புட்டின் தெரிவித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.

அதாவது “உலகில் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பல மாற்றங்களுக்கு கொசோவோ ஒரு கேவலமான உதாரணமாக இருக்கலாம்’“ என அவர் தெரிவித்திருந்தார்.

அதன் பொருள் தற்போது ரஷ்யாவின் படை நடவடிக்கைகளில் எதிரொலித்துள்ளது. தென் ஒசேஷியாவை பொறுத்தவரையில் 1992 ஆம் ஆண்டு அது தன்னை சுதந்திரநாடாக பிரகடனம் செய்த போதும், அது ரஷ்யாவுக்கு ஆதரவான தேசம் என்பதனால் மேற்குலகம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கொசோவோ, தென் ஒசேசியா இரு தேசங்களும் பல ஒற்றுமைகளை கொண்டிருந்த போதும் மேற்குலகின் நடவடிக்கைகள் எதிர்மறையானவை.

மேலும் ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளை திறந்த பொருளாதார வலையமைப்புக்குள் உள்வாங்கிய மேற்குலகம் அங்கு ஏவுகணை தடுப்பு ஏவுகணைகளை நிறுவுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. மேற்குலகத்தின் இந்த நடவடிக்கைகளை ரஷ்யா எதிர்த்த போதும் அது நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதது உலகின் படைச்சமவலு தொடர்பாக பல்வேறு கணிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சீனாவின் வளர்ச்சியே எதிர்காலத்தில் அமெரிக்காவை எதிர்க்கும்
நிலைக்கு சவாலாகும் என்ற கருத்துக்களும் வலுவாக தலைதூக்கியிருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது தற்போது முத்தரப்பாக மாற்றம் பெற்றுவிட்டதோ என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.

ரஷ்யாவை பொறுத்தவரையில் மேற்குலகின் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்க்காது விட்ட போதும் தற்போது அது மேற்கொண் டுள்ள நடவடிக்கை பூகோள ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் மிகவும் பெறுமதியானது. பாகு கடற்பிராந்தியத்தில் இருந்து ரபிலிசியை ஊடறுத்து சியான் (Baku-Tbilisi-Ceyhan pipeline - BTC) பகுதிக்கு செல்லும் எரிபொருள் வழங்கல் குழாயை அண்மித்து இந்த நடவடிக்கை அமைந்திருந்தது மிகவும் முக்கியமானது. இதற்கு சமாந்தரமாக எரிவாயு குழாய் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

இந்த எரிபொருள் குழாய் 1,768 கி.மீ தூரத்திற்கு கப்சிகன் கடல் பிராந்தியத்தில் இருந்து மெடிற்றிரேனியன் கடற்பிராந்தியம் வரையிலும் நீண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனுõடாக 2005 ஆம் ஆண்டு மே மாதம் எரிபொருள் விநியோகம் ஆரம்பமாகியிருந்த போதும் அது சியான் பகுதியை 2006 ஆம் ஆண்டு மே மாதமே வந்தடைந்திருந்தது. –அஸர்பைஜான் எண்ணெய் வயல்களில் அகழப்படும் எண்ணெய் துருக்கியை சென்றடைவதில் இந்த எரிபொருள் குழாய்களின் பங்களிப்பு கணிசமானது.

ஜோர்ஜியா ஊடாக தென் –ஒசெற்றியா பகுதிக்கு அண்மையாக செல்லும் இந்த எரிபொருள் விநியோக குழாய்க்கு அருகில் ரஷ்யா தனது படைகளை நிறுத்தியுள்ளமை, மேற்குலகத்திற்கு முள்ளின் மேல் இருப்பது போன்றதாகும். கஸ்பியன் பகுதியின் (Caspian region) எண்öணய் மற்றும் எரிவாயு வளங்களில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதால் ரஷ்யாவுக்கு அண்மையில் உள்ள நாடுகளை தன்வசப்படுத்தும் திட்டங்களை அது நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த பொருளாதார முக்கியத்துவங்களுக்கு மத்தியில் மோதல் மூண்ட இடத்தின் பூகோள முக்கியத்துவம் அதிகமானது என்பதுடன் ரஷ்யாவின் படை நடவடிக்கையின் வேகம், அதன் ஒருங்கிணைப்புக்கள் என்பனவும் முக்கியமானவை. கடந்த வார படை நடவடிக்கையில் தரை, கடல், வான்படைகளை களமிறக்கிய ரஷ்யா கணினிவலையமைப்பு மீதான சைபர் தாக்குதலையும் (Cyber attack) ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

படை நடவடிக்கைகளுடன், சைபர் தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்டது உலகில் இதுவே முதல் தடவை எனவும், இது இறுதியாக இருக்கப்போவதில்லை எனவும் கணனிவலையமைப்பு நிபுணர் பில் வூட்கொக் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது கூறியுள்ளார். சைபர் தாக்குதல் மூலம் ஜோர்ஜியாவின் ஊடகத்துறை, தொலைதொடர்பு மையம், போக்குவரத்து துறை என்பன செயலிழந்து போயிருந்தன. மேலும் ரஷ்யா படைகள் தென் ஒசெற்றியாவிற்குள் நுøழந்ததும், ஜோர்ஜியாவின் தேசிய வங்கியும் செயலிழந்திருந்தது.

படைத்துறை இழப்புக்களை பொறுத்தவரையில் ரஷ்யா தனது தரப்பில் 74 வீரர்களை இழந்துள்ளதுடன், 171 பேர் காயமடைந்துள்ளனர், 19 பேர் காணாமல் போயுள்ளனர். ஜோர்ஜிய தரப்பில் 175 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர். பொதுமக்கள் தரப்பில் 2,000 இற்கும் மேற்பட்டோர் இரு தரப்பிலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ரஷ்யா ஜோர்ஜியாவுக்கு இடையிலான இந்த மோதலில் வெற்றி பெற்றவர் யார் தோல்வியுற்றவர் யார் என்றால், வெற்றி பெற்றது ரஷ்யா என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதாவது ஜோர்ஜியாவின் பிடியில் இருந்த இரு மாநிலங்களில் இருந்து ஜோர்ஜிய துருப்புக்களை முற்றாக வெளியேற்றியமை, ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள் நோட்டோவில் இணையும் திட்டத்திற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது, மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு ஒரு தற்காலிக முட்டுக்கட்டையை ஏற்படுத்தியது என்பன ரஷ்யாவின் வெற்றிக்கான காரணங்களாக அமைகின்றன.

ஜோர்ஜியாவை பொறுத்தவரையில், இரு மாநிலங்களில் அதன் பிடியை இழந்தமை, தனக்கு உதவியாக நேட்டோ படைகள் களமிறங்கும் என்ற நம்பிக்கைகள் தவறாகிப் போனமை, நேட்டோவில் இணையும் அதன் நோக்கம் தள்ளிப்போனது என்பவை அதன் தோல்வியாக கருதப்படுகின்றது.

அமெரிக்காவை பொறுத்தவரையில் ரஷ்யாவின் படை நடவடிக்கை பல அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளது ஒருபுறம் இருக்க, ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பாக முன்கூட்டியே அமெரிக்காவின் புலனாய்வுத்துறை அறியாது விட்டது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகின்றது. ரஷ்யாவின் படைநடவடிக்கை தொடர்பாக அமெரிக்காவின் புலனாய்வுத்துறை முன்னரே தகவல்களை சேகரித்து வழங்கியி ருந்தால் ஜோர்ஜியா இந்த பேரழிவை தவிர் த்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா பாதுகாப்பு துறையின் பெருமளவான வளங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நோக்கி செறிவாகி இருந்ததால் ஜோர்ஜியா தொடர்பாக பெருமளவான தகவல்களை திரட்ட முடியவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புவட்டாரங்கள், மோதல்கள் ஆரம்பமாகிய பின்னர் கடந்த வார இறுதியிலேயே அமெரிக்கா அதிகளவான உளவு செய்மதிகளை ஜோர்ஜியா நோக்கி திருப்பியதாக தெரிவித்துள்ளன.

இதனிடையே ரஷ்யாவின் படை நடவ டிக்கை தொடர்பாக தான் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை எச்சரித்ததாக ரஷ்யா ஈயூரேசியன் கற்கை நெறி ஆய்வாளர் ஏரியல் கோகென் தெரிவித்துள்ளார். எனவே இந்த மோதல்கள் அமெரிக்க அரசின் நிர்வாக தவறு என்பது அவரது கருத்து. மோதல்கள் நடைபெற்ற போது எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்த அமெ ரிக்கா, தற்போது இராணுவ விமானங்கள் மூலம் ஜோர்ஜியாவுக்கான உதவி பொருட்களை அனுப்பியுள்ளது.

எனினும் மேற்குலகம் இம்மோதலில் தனக்கு உதவாதது குறித்து ஜோர்ஜியா பெரும் கவலை அடைந்துள்ள அதே சமயம் உக்ரேன், போலந்து போன்ற ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளுக்கும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின் றது.

மேற்குலகம் தம்மை கைவிட்டுவிடலாம் என்ற கவலை அவர்களை ஆட்கொண்டுள்ளது. மேற்குலகத்தை பொறுத்தவரை அவர்களின் பொருளாதார நலன்களுக்கு அப்பால் ஈரான் தொடர்பான அவர்களின் அணுகுமுறைகளுக்கு ரஷ்யாவின் ஆதரவுகள் தேவை. ரஷ்யாவை பகைத்துக்கொண்டு ஈரான் மீது அழுத்தங்களை ஏற்படுத்த முடியாது. இதுவே அவர்களின் செயற்திறன் அற்ற தன்மைக்கான காரணங்கள். எனினும் 1990களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சோவியத்தின் வீழ்ச்சியுடன் உலகில் ஏற்பட்ட அமெரிக்காவின் ஆளுமை ஒரு நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளதாகவே தற்போது கருதப்படுகின்றது. பனிப்போரின் முடிவுடன் வரையப்பட்ட படைச்சமவலு தொடர்பான வரைபுகளில் செந்நிற கோடு வீழ்ந்துள்ளது என்பது தற்போது தெளிவானது.

ஆனால் மேலே கூறப்பட்ட கருத்துக்களுக்கு அப்பால் ரஷ்யாவின் படை நடவடிக்கை மேலும் ஒரு தகவலை உலகிற்கு அழுத்தமாக கூறியுள்ளது. அதாவது ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் போதெல்லாம் ரஷ்யப்படை களமிறங்கும் என்பதே அதுவாகும். இந்த கருத்தை அது உக்கிரேனுக்கும் மிகவும் அழுத்தமாக கூறியுள்ளது.

யூதர்களை காப்பாற்ற உலகில் உள்ள யூதர்கள் இஸ்ரேலின் தலைமையில் ஒன்று திரண்டது போல உலகில் ரஷ்ய இனம் நெருக்கடிகளை சந்திக்கும் போது தமது அரசு நடவடிக்கை எடுக்கும் என ரஷ்யா அழுத்தமாக தெரிவித்துள்ளது முக்கியமானது.

தமது இனம் உலகில் அழிவடைந்துவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு இனமும் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளன என்பதற்கு ரஷ்யாவின் அண்மைய இந்த நடவடிக்கை மற்றுமொரு உதாரணம். எனவே இலங்கையில் அழிவை சந்தித்துள்ள தமிழ் இனத்தை காப்பாற்றவேண்டிய கடப்பாடு உலகில் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கு உண்டு என்பதையும் ரஷ்யாவின் நடவடிக்கை எமக்கு அழுத்தமாக விட்டு சென்றுள்ள செய்தி என்றால் அது மிகையாகாது.

-அருஷ் -

Comments