தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோரின் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு தொடங்கியது


கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நேற்று தொடங்கியுள்ளனர்.

தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கியிருக்கின்றனர்.

இந்நிகழ்வு 10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவில் கலாச்சார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:01 நிமிடத்துக்கு தொடங்கியது.

நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் "மாமனிதர்" ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் ஈகச்சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்.

35-க்கும் அதிகமான இளையோர்கள் பங்கேற்றுள்ள இந்த 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு இன்று இரவு 10:00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்றுள்ள இளையவர்கள், ஏன் இந்த கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுக்கின்றோம் என அங்கு கூடியிருந்தவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

இளையோர்களின் உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வுக்கு தமது ஆதரவினைத் தெரிவித்து பல மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

நிகழ்வு தொடர்பான மேலதிக விவரங்களை அறிய விரும்புவோர் (01) 647 834 1075 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.





Comments