மிகச் சிறப்பாக செயற்பட்ட இம்ரான் - பாண்டியன் படையணி போராளிகள் தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

களமுனைகளில் மிகச்சிறப்பாக செயற்பட்ட லெப். கேணல் இம்ரான் - பாண்டியன் படையணியின் போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தாயக களமுனைகளில் தாக்குதல் நடத்த வந்த எதிரிக்கு எதிராக தாக்குதலை நடத்தி அழிவுகளை கொடுத்து முதன்மையாக ஈடுபட்ட போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் சமர் ஆய்வு மையத்தின் ஊடாக சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு இன்று திங்கட்கிழமை சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட் இடத்தில் லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவின் கல்விப்பகுதி பொறுப்பாளர் நிலவன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடரினை போர்ப் பயிற்சி ஆலோசகர் தினேஸ் மாஸ்ரர் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை இம்ரான் - பாண்டியன் படையணி தளபதி ஆதவன் ஏற்றினார்.

தொடர்ந்து இம்ரான் - பாண்டியன் படையணிக் கொடியினை படையணி துணைத்தளபதி அருள்நம்பி ஏற்றினார்.

லெப். கேணல் இம்ரான் - பாண்டியனின் திருவுருவப்பத்திற்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுடரேற்ற, மலர்மாலையினை சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி சூட்டினார்.

மலர்வணக்கத்தினை லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவு சிறப்பு பொறுப்பாளர் கலைக்கோன் தொடக்கி வைத்தார்.

படையணி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு போராளிகள் சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினர்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் இம்ரான் - பாண்டியன் படையணி தளபதிகள், பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பரிசுப் பொருட்களை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வழங்கி மதிப்பளித்தார்.

தொடர்ந்து களங்களில் சிறப்பாக போரிட்டு செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டி சமர் ஆய்வு மையத்தின் ஊடாக வழங்கப்பட்ட சான்றிதழ்களை சோதியா படையணி சிறப்புத் தளபதி கேணல் துர்க்கா, சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஆகியோர் வழங்கி மதிப்பளித்தனர்.

நிகழ்வில் சமர்க்கள ஆய்வு தொடர்பான கருத்தினை யோகி மற்றும் சிறப்புரையினை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்வில் போராளிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


Comments