விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலில் ஆசிய வல்லரசுகள் அணிதிரண்டுள்ளனவா?

ஆசியாவின் வல்லரசு நாடுகள் என வர்ணிக்கப்படும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் போருக்குப் பின்னால் ஒன்றுதிரண்டிருப்பதாக கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார்.

வடபகுதியில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்களில் இந்த நாடுகள் இராணுவ ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளமை மூலம் இந்த விடயம் தெளிவாகப் புலனாகிறது என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றின் பத்தியெழுத்தாளரான உப்புள் ஜோசப் பெர்னாண்டோ குறிப்பிடுகிறார்.

தமக்குள் முரண்பட்டுவரும் இந்த ஆசிய வல்லரசுகள் இலங்கையில் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துவரும் மோதல்களில் கூட்டாக ஆதரவு வழங்கிவருவது பற்றி அவர் தனது பத்தியில் மேலும் விபரித்துள்ளார்.

அவரது ஆக்கத்தின் சாராம்சம் வருமாறு,

பாகிஸ்தான் விமான ஓட்டி ஒருவர், இலங்கை விமானப் படையினர் வன்னிப் பகுதியில் மேற்கொண்டுவரும் விமானக் குண்டுத் தாக்குதல்களில் பங்குபற்றிவருவதாக இந்தியாவின் முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் ராமன் சில காலத்துக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதேபோல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் போருக்கு சீனா ஆயுத உதவிகள் வழங்கிவருவதும் ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

கடந்த 9ஆம் திகதி வவுனியா கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ரடார் தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்திருப்பதுடன்இ இலங்கை மோதல்களில் இந்தியா நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுயுள்ளது.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஆசியாவின் வல்லரசு நாடுகளான சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கையுடன் அணிசேர்ந்துள்ளமை தெளிவாகிறது.

பொது எதிரி?

ஆசியாவின் தலைமைத்துவத்துக்காகப் போட்டியிட்டுவரும் இந்தியா மற்றும் சீனாவும், ஒரு காலத்தில் தெற்காசியாவின் அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட கசப்பான அனுபவம் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் போரின் தமக்குள் ஒன்றுபட்டுள்ளமைதான் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

சீனாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியா இலங்கைக்கு கடன் வழங்கியுள்ளதா? என தமிழ்நாடு பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர், இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் கேள்வியெழுப்பியபோது, அதற்கு ஆளுங்கட்சி எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை.

ஆனாலும், தனக்கு மிகவும் சவாலான நாடு என்று கருதும் சீனாவிடமிருந்து இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியா ஏன் கடன் வழங்கியது என்பதே இங்குள்ள கேள்வி.

விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு இந்தியா விரும்புவதாகவும் இதற்காக இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கினால் தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால், சீனாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியா இலங்கைக்கு இலகு கடன்களை வழங்கியது எனவும் சில ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

தெற்காசியாமீது கண்வைக்கும் சீனாவின் கவனத்தை ஓரங்கட்ட அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் இந்தியா, இலங்கைக்கு நெருக்கமாக சீனாவைக் கொண்டுவருவது ஆச்சரியமானது.

அதேபோல், தெற்காசியாவில் பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க விரும்பாத இந்தியா, புலிகளுக்கு எதிரான போரின் பாகிஸ்தானுடன் ஓரணிப்பட்டிருப்பதும் புதிரானதே.

ரடார் விவகாரம்

பாகிஸ்தான் விமானிகளுடன் இணைந்து இலங்கை விமானப்படை வன்னிப் பகுதியில் நடத்தும் தாக்குதல்களின்போது அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியபோதிலும் அந்த எதிர்ப்புக்குரல்களுக்கு செவிமடுக்காத இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம், விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இலங்கைக்கு ரடார்களை வழங்கியது.

இது இந்தியாவின் எதிர்க்கட்சிகளுக்கோ, தமிழ்நாட்டுக்கோ தெரியாத ஒரு விடயமல்ல.

இலங்கைக்கு வழங்கிய ரடார் கருவிகளை இந்தியா மீளப்பெறவேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி கோரிக்கை விடுத்தபோது, இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்காவிட்டால், அவர்கள் சீனாவிடம் சென்று ரடார்களைக் கொள்வனவு செய்துவிடுவார்கள் என இந்திய காங்கிரஸ் அதற்கு விளக்கமளித்திருந்தது.

அதுமட்டுமன்றி, ரஷ்யாவின் உதவியுடன் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் அணுசக்தி நிலையைத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டின் வான்பரப்பை விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்றும் இதற்கு இந்தியா மற்றுமொரு காரணம் கற்பித்திருந்தது. இதன்பின் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்குரல்கள் ஓரளவு தணிந்துவிட்டன.

ஆயினும், அண்மையில் வவுனியா கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களில் இந்திய ரடார் பொறியியலாளர்கள் இருவர் காயமடைந்தனர் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் இராணுவ ஆளணிகள் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருப்பதற்கு எதிராக இந்திய எதிர்க்கட்சிகளும் தமிழகக் கட்சிகளும் மீண்டும் குரலெழுப்ப ஆரம்பித்துள்ளன. இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி கூட இதற்கு எதிராகத் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

மீண்டும் இந்தியப்படை?

இதேவேளை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சதியில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் வைகோ, 265 இந்திய தொழில்நுட்பவியலாளரும், இராணுவத்தினரும் போரில் இலங்கைக்கு உதவிவருவதாகவும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

வைகோவின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையாயின் 1987க்குப் பின்னர் இந்திய இராணுவம் இரண்டாவது தடவையாக இலங்கைக்குள் நுழைந்துள்ளது.

1987இல் முதல் தடவை பகிரங்கமாக இலங்கைக்கு வந்த இந்தியப்படை, இம்முறை மறைமுகமாக சிறு சிறு குழுக்களாக இலங்கைக்கு வந்துள்ளது.

சுட்டிப்பாக நாராயணன் மீது முன்வைக்கப்படும் வைகோவின் இந்தக் குற்றச்சாட்டு சரியானதாயின்,ஆசிய பிராந்திய வல்லரசுகளான சீனா, பாகிஸ்தானுடன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நாராயணனின் வெறுப்புணர்வையும் சரியாகக் கையாண்டு, இந்திய உதவியையும் வெற்றிகொண்ட பெருமை இலங்கையைச் சாரும்.

ஒரு போரை முன்னெடுப்பதற்கு மூன்று நாடுகளை ஓரணியில் திரட்டுவது என்பது மிகவும் சவாலான ஒரு விடம். பாகிஸ்தான் ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்தால், இந்தியா அதற்கு எதிரான தரப்புக்கே ஆதரவு வழங்கும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் வல்லரசாக முயலும் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இந்தப் போட்டியின் வெளிப்பாடுகளைப் பல சந்தர்ப்பங்களில் நாம் கண்டுள்ளோம். சீனா விடயத்திலும் இந்தியா இப்படியே நடந்துகொண்டுள்ளது.

எது எப்படி இருப்பினும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை முன்னெடுத்திருக்கும் போருக்கு ஆதரவாக, சீனா,இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த வகையில் பார்த்தால், இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு ஆசிய யுத்தம் என்றே கூறவேண்டும்.

ஆசிய வல்லரசுகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பாரிய மோதல்களின் மத்தியிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் பாதுகாப்பாக இருந்துவருகிறார் என்பது ஆச்சரியமான விடயமே.

எல்லாவற்றுக்கும் மேலாக, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலையீட்டைக் குறைப்பதற்காகவா, அல்லது விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை முற்றாக இல்லாதொழிப்பதற்காகவா இந்தியா நேரடியாக இந்த விடயத்தில் தலையிடுகிறது என்ற கேள்விக்கு விடைகாண்பது இப்போதைக்கு கடினமானது.

வா.கி.குமார்


Comments

தமிழ்க்காரங்க யாராவது நம் நாட்டு பிரைம் மினிஸ்டேர்-ஆ ஆயிட்டாங்கன்னா பிரச்சினையே இல்லாம போயிரும்.