வாராய் ! நீ வாராய் !- அழைக்கிறது சிங்களம்- நம்பிப் போகுமா தமிழினம் ?

மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற வாராய் நீ வராய் என்ற பாடலையும் அந்தப் படத்தில் இடம் பெற்ற காட்சியும் தமிழ் மக்களால் மறக்க முடியாதவை. ஆனால் இதே பாடலை வாய் விட்டுப் பாடாத குறையாய் இன்று இலங்கை இராணுவமும் அரசும் அரச அதிகாரிகளும் படும் பாட்டினைச் சொல்லி மாளாது.

இது ஒன்றும் தமிழ்ப் பொது மக்கள் மீதுள்ள பாசத்தினால் அல்ல. வெளி உலக மனித நேய ஆர்வலர்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் எதிர் நோக்க வேண்டிய தேவை காரணமாகவே இத்தகைய பாச அழைப்பை இலங்கை அரசு செய்கிறது.

மூகமும் மனித நேய அமைப்புகளும் ஆர்வலர்களும் முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலர் பான் கீ முனும் கண்டு அறிய வேண்டிய நிலையில் உள்ளனர். இதனைப் புலப் படுத்தும் வகையில் வன்னிப் பிரதேச மக்கள் தமது அறப் போராட்டக் குரலைச் சர்வதேச அமைப்புகளின் வெளிறேறத்துக்கு எதிராகக் கிளப்பி உள்ளனர். இந்த அப்பாவிப் பொது மக்கள் தாங்கள் பயங்கரவாதிகளா இல்லையா என்பதை வெளி உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய வரலாற்றுக் கடமையாக இந்த நிறுவனங்களுக்கு உணர்த்த முற்படுகின்றனர். இந்த உண்மையை இந்த நிறுவனங்கள் புரிந்து கொண்டு செயற்படுமா? புரிந்து செயற்பட வேண்டும் என்பதே ஈழத் தமிழ் மக்களின் எதிர் பார்ப்பும் 25 வருடங்களுக்கு மேலான நம்பிக்கையும் ஆகும்.

எப்பாடு பட்டேனும் தமிழ்ப் பொது மக்களை வன்னியிலிருந்தும் புலிகளிடமிருந்தும் பிரித்துவிடும் கபட நாடகமே சிங்கள இனவெறி அரசின் இம் முயற்சி. அப்படி அகற்றிவிட்டால் 1987ல் வடமராட்சியில் ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கை மூலம் அடர் விமானக் குண்டு வீச்சின் மூலம் ( Carpet Bombing) எஞ்சியிருக்கும் வன்னிப் பகுதிப் பொதுமக்களையும் புலிகளையும் அழித்துவிடவும் அதன் மூலம் இலங்கையின் இனப் பிரச்சனையைத் தீர்த்துக் கட்டித் தீர்வு கண்டு விடவும் சிங்களம் மனப்பால் குடிக்கிறது. இது சாத்தியமா எனக் கேட்காதீர்கள். அவிவேக பூரண குருவான மாதன முத்தா மகிந்தரும் அவரது சீடர்களும் நடத்தும் ஆட்சியில் இப்படியான செயற்பாடுகள்தான் இடம் பெறுகின்றன.

1987ல் இடம் பெற்ற ஒப்பரேசன் லிபரேசனை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்த இந்தியா பின்னர் அதனை ஒரு சாட்டாக வைத்துச் சினிமாக் கதாநாயகன் போல் வந்து தானே தமிழ் மக்களின் வில்லனாக மாறி வெறியாட்டம் ஆடி விட்டுப் போனது. ஆனால் இன்று உள்ள சூழலில் அப்படி ஒரு ஒப்பரேசனைச் செய்ய இந்திய விமானப் படையே வந்து குண்டு போடுவதும் சாத்தியமாகவே உள்ளது. தேவைப்பட்டால் புதிதாக இந்தியா தயாரித்து வைத்திருக்கும் அணு குண்டையும் கூட அதனையும் போட அது தயங்காது.

ஆனால் என்ன செய்தாலும் வன்னித் தமிழ் மக்களைப் பனங்காட்டு நரிகள் போல ஆக்கி விட்டன விடாது அங்கு தொடரும் போர்கள். மேலும் அண்மையில் புலிகள் வவுனியா வன்னிப்போர்ப் படைத் தளக் கட்டளைத் தலைமையகத்தை வெற்றிகரமாகத் தாக்கி அழித்ததும் அதனால் வெளியான செய்திகளும் வன்னித் தமிழ் மக்களுக்கு அசுர மன பலத்தைக் கொடுத்து விட்டது.

இப்படியான மனநிலையில் புத்தியுள்ள எவரும் கையில் இருக்கிறதைப் பறக்க விட்டுப் பறக்கிறதுக்கு அலைய மாட்டார்கள். வன்னி மக்களின் வாழ்விலும் தாழ்விலும் மழையோ வெய்யிலோ சுனாமியோ சூறாவளியோ கூட இருந்து தம் உயிரையும் துச்சமென மதித்து உதவி புரியும் மனப் பக்குவம் படைத்த தமிழர் புனர் வாழ்வு மற்றும் வெண்பறா போன்ற தொண்டர் படையும் தமிழீழ விடுதலைப் புலிப் படை வீரர்களும் கொடுக்கும் அன்பும் ஆதரவும் அர்ப்பணிப்பும் கோடி கொடுத்தாலும் உலகில் வேறு எங்கும் பெற முடியாது என்பதை இம்மக்கள் அனுபவ மூலம் அறிந்தவர்கள். இப்படி யானவர்களுக்குப் புத்த பிக்குவைக் கொண்டு பிரித் ஓதி நூல் கட்டினாலும் அவர்கள் சிங்களத்தை ஒரு போதும் நம்பிப் பின்னால் போக மாட்டார்கள் என்பது உறுதி.

1995ல் யாழில் இருந்து ஐந்து இலட்சம் மக்களும் புலிகனின் பின்னால் வந்ததை சிங்களமும் உலக நாடுகளும் மறந்து விட்டன போல் தெரிகிறது. நினைவில் கொண்டிருப்பார்கள் என்றால் மீண்டும் அதே போன்ற முயற்சியை இப்போ வன்னி மக்களிடத்தில் பயன் படுத்த துணிய மாட்டார்கள்.

ஆனால் யாழ் மக்களை அன்று ஆசையும் அமைதியும் பெறலாம் என நம்பச் செய்து மீளப் போன மக்களின் பிணங்கள் செம்மணி முதல் வடக்கின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிரம்பி வழியும் கதைகள் இன்றும் தொடரும் சோகக் கதைகளை உலகமே அறியும்.

கதை அப்படி இருக்கும் போது வன்னி மக்களா அறியாது இருப்பர் ? இத்தகைய சூழ் நிலையில் வவுனியாவுக்கு மட்டுமல்ல வடக்கே வாருங்கள் என எவர் அழைத்தாலும் வன்னி மக்கள் அங்கே கூடப் போகப் போவதில்லை.

இந்த உண்மையின் இரகசியத்தை வெளி நாடுகளும் அறியும். ஆனால் சிங்களமும் இந்தியாவும் எப்படியேனும் வன்னி மக்களையும் அகற்றிவிட்டு மண்ணின் கனிம வளங்களையும் கடலின் எண்ணெய் வளங்களையும் வளைச்சுப் போட்டு வெளி நாடுகளுக்கு விற்றுப் பணமாக்கவும் அபிவிருத்தி பாதுகாப்பு என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து விடவும் துடிக்கின்றன. கைச்சாத்திடப் பட்ட ஒப்பந்தத்தின் படி அப்பிரதேசமும் கடற் பகுதியும் இம்மாத முடிவுக்குள் கையளிக்கப்பட வேண்டிய தேவையும் அரசுக்கு இருக்கிறது. எனவே இலங்கை இந்திய அரசுகள் இத்தனை அக்கரை ஆர்வம் அவசரம் காட்டுவதில் நியாயம் தெரிகிறது.

இதனைச் செய்து முடிக்க மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து விரட்டிக் கண்காணாத இடத்தில் சிங்கள மக்கள் மத்தியில் அகதிகளாய் பிச்சைக்காரர்களாகக் குடி அமர்த்திவிட்டால் வன்னியில் எஞ்சியிருக்கும் மக்களும் புலிகளும் பயங்கரவாதிகள் மட்டுமே என உலக அளவில் பிரச்சாரப் படுத்தி 1944ல் யப்பானில் அமெரிக்கா அணுகுண்டு போட்டது போல அணுகுண்டைப் போட்டு அழிக்க அணுகுண்டும் ஆதரவும் கொடுக்க இருக்கவே இருக்கிறது இந்தியா. போரின் மூலம் சமாதானம் எப்படிச் சாத்தியமாகும் எனக் கேட்பவருக்குப் பதிலும் இனப் பிரச்சனைக்குத் தீர்வும் கண்டது போலாகிவிடும். இப்படி எழுதுவது ரொம்ப ஓவர் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. முன்னாள் பிரித்தானியப் பிரதமர் சேர் வின்ஸ்ரன் சேர்ச்சில் போரிலும் காதலிலும் எதுவுமே நியாயமானது “Anything is fair in love & war ‚’’ என்றார். இன்றைய இலங்கை இந்திய அரசியல் அகராதியில் தமதிழ் மக்களுக்குச் செய்யப்படும் எந்தக் கொடுமையும் அழிவும் எல்லாமே ஜனநாயகம் எல்லாமே சரி எல்லாமே நியாயம் என்பதாகவே இருக்கிறது.

இலங்கையின் போரினாலும் காடைத்தனத்தாலும் தமது சொந்த இடங்களிள் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் மீளவும் தமது சொந்த இடங்களுக்குப் போய் வாழ்ந்த வரலாறே கிடையாது. 1970களில் சாம்பல் தீவு தம்பலாகமம் 1980 முதல் வடக்கே வலிகாமம் இன்னும் மட்க்களப்பு மூதூர் அம்பாறைப் பிரதேரசங்களில் இடம் பெற்ற நிலப் பறிப்புக்கள் மூலம் இடம் பெயரந்த ஊர் மக்கள் இன்றும் அகதிகளாகவே உள்ளனர். இதில் இந்து முஸ்லீம் கிருஸ்தவர் என்ற பேதம் கிடையாது. இலங்கையில் சிங்களவர் அல்லாத எவருக்கும் வாழும் நிலத்தில் உரிமை கிடையாது. பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டி விட்டுப் பேச்சுக்கள் மூலம் காலத்தைக் கடத்தி விட்டால் தமிழர் பிரதேசமோ தாயகக் கோட்பாடோ ஏடுகளிலும் இல்லாது போய்விடும். ஏடுகளில் உள்ள வரலாற்றுப் பதிவுகளைச் சிங்களம் வெளிநாட்டு அகராதிகளில் இருந்தும் அகற்றி விட்ட இன்றைய நிலையில் தமிழரின் தாயகக் கோட்பாடு தலைஎடுக்க விடாமல் செய்து விடுவது மிகவும் இலகுவாகி விடும்.

இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தன்னாட்சி தேசியம் சுயநிர்ணய உரிமை இருக்கிறதோ இல்லையோ என்பது கூட இன்று முக்கியம் இல்லை. அவர்கள் மனிதர்களா ? மனிதர்களாகப் பார்க்கப் படுகின்றனரா என்பதே அகில உலகப் பிரச்சனையாக உள்ளது.

அதனைச் சர்வதேச சமூகத்துக்கும் ஐ.நா. சபைக்கும் உணர வைக்க வேண்டிய, நிரூபிக்க வேண்டிய அநியாய அக்கிரமக் கடமை தமிழ் மக்கள் தலைமீது விழுந்து தொலைத்திருக்கிறது. ஈழத் தமிழர் மனிதர்களே இல்லை என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்ல பல கைக் கூலிகள் வானொலி தொலைக் காட்சிகள் தமிழர் பண்பாட்டு விழாக்கள் நடத்தியும் பேட்டிகள் கொடுத்தும் தரங்கெட்ட தமது பிறப்பின் பெருமையைக் காட்டி வருகின்றனர்.

உலக அதிசயமாக இலங்கையில் மட்டும்தான் மனித உரிமைகள் அமைச்சும் அமைச்சரும் உள்ளன. அமைச்சரின் ஒரே ஒரு வேலையாக மனித உரிமை மீறல் பற்றிய விமர்சனங்களைக் கண்டிப்பது மட்டுமே இருக்கிறது. இவரிடம் அடி வாங்குவர் பட்டியலில் முன்னால் இந்திய தலைமை நீதியரசர் பகவதி, அமெரிக்க தூதர் றிச்சார்ட் பவுச்சர் இந்திய பாதுகாப்பு டிஆலோசகர் எம் கேஇ நாராயணன் யப்பானிய மற்றும் அமெரிக்க அரச அதிகாரிகள் மனித உரிமை ஆர்வலர்கள் என அன்றாடம் பட்டியல் வளரும் நிலையே உள்ளது. நேர்மையான விமர்சனம் எதுவுமே அரசுக்கு அவமானமாகத் தெரிவதால் அவற்றை நேர்மையற்ற சொற்களால் கண்டிக்கும் நேர்மை கொண்ட அமைச்சர் இவர்.

ஐ.நா.மனித உரிமைக் குழவின் இலங்ரைகப் பிரதிநிதியாக ஒரு தமிழ்ப் பெண்ணாக ராதிகா குமாரசுவாமி இருக்கிறார். வாங்குகிற கூலிக்கும் மேலாகக் கடமை புரியும் கண்ணியம் நிறைந்தவர். இவரது பெயரும் தோற்றமும் தமிழ் போல் தெரிந்தாலும் சுட்டுப் போட்டாலும் தமிழ் உணர்வே வராத நல்ல குணம் படைத்தவர்.

பார்வைக் கோளாறோh அல்லது பகுத்தறிவுக் கோளாறோ என்று தெரியாத கோளாறு இவரிடம் தெரிகிறது. இவரது கூர்மையான பார்வைக்கும் அறிவுக்கும் தமிழ் பெண்கள் சிறுவர் படும் அனைத்து துன்ப துயரங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே பொறுப்பாகத் தெரிந்து விடுகிறது. கொழும்பிலோ கொக்குவிலிலோ கொக்கட்டிச் சோலையிலோ எங்கே எது நடந்தாலும் அது புலிப் பயங்கரவாதம் எனவே கண்டு விடுகிறார்.

உலகத்தையே கண்ணீரால் கழுவித்துடைத்துப் போனது 2004 மார்ழியில் வந்த சுனாமிக் கடற் கோள் அழிவு. அதனால் உலகின் பல நாடுகள் கேட்காமலே பல கோடி உதவியைப் பொருளாகவும் பணமாகவும் அள்ளிக் கொடுத்தன. கிடைத்த பொருட்கள் எவையும் தமிழ்ப் பகுதி மக்களை எட்டியும் பார்க்க வில்லை.

வந்த பணத்தில் பல கோடி சுருட்டியவர் இன்று வெள்ளை வேட்டி கட்டி உலக பவனி வர அப்பாவிச் சிங்கள மக்கள் கூட ஒதுங்க ஒரு குடிசை இன்றி இன்னமும் தவிக்கின்றனர். இந்த நிலையில் உருவாக்க முற்பட்ட சுனாமி மீளமைப்பு முகாமைத்துவ மையம் வந்தால் புலிகளுக்குத் தன்னாட்சி உரிமையைக் கொடுத்து விடும் எனக் காரணங் காட்டித் தமிழ் மக்களுக்கு அறவே உதவி கிடைக்காமற் செய்தது அரசு. இந்த அக்கிரமம் இந்தியாவுக்கோ சர்வதேச சமூகத்துக்கோ கண்ணில் படவில்லை.

ஆபத்து வேளையில் அவர் வருவார் இவர் தருவார் எனத் தமிழ் மக்கள் பார்த்திருக்காது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழர் புனர் வாழ்வுக் கழகமும் புலம் பெயர் தமிழ் மக்களின் தன்னார்வப் பொருள் உதவியுடன் மீட்பு வேலைகளையும் மீள் கட்டுமானப் பணிகளையும் செய்து முழு உலகமுமே தமிழரின் செயற்றிறன் கண்டு வியக்கும் வகையில் சாதனை படைத்தனர்.

ஆனால் அதே புலிகள் இயக்கத்தையும் அதே தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தையும் இலங்கை அரசின் இனவெறி ஆட்டத்துக்கு உதவும் வகையில் உலக நாடுகள் பயங்கரவாதிகள் எனப் பட்டியலிட்டுத் தடைசெய்தன.

இலங்கை அரசும் இந்திய அரசும் தடைசெய்தால் ஏதாவது நியாயம் காட்ட முடியும். ஆனால் இதர நாடுகள் தடை செய்வதற்கு என்ன நியாயம் இருக்கிறது.?

தமிழ் மக்கள் தமது உழைப்பால் வரும் ஊதியத்தை தமது சமுதாயத் தேவைக்கு கொடுப்பது பாவம் என்றால் கத்தோலிக்த் திருச் சபையோ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ தமது பணிகளுக்குத் திரட்டும் பணமும் செயற்பாடும் எப்படி நியாயமாகும் ?

இப்படியான கேள்விகளைக் கேட்க வேண்டியவரும் பதில் காண வேண்டியவரும் தமிழ் மக்களும் அவர்களைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்த் துரொகிகளுமே. எனவே இவை இந் நிறுவனங் களையும் அவற்றின் தொண்டர்களையும் இழிவு படுத்துவதாக எவரும் நினைத்து விடக் கூடாது. ஆனால் இந்தக் கொடுமைகளை எல்லாம் ஐ.நாவும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் எதுவும் பேசாமல் மௌனம் காப்பதுதான் கவலை தருகிறது. உலகின் மனச்சாட்சியைச் சந்தேகிக்க வைக்கிறது.

ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனான் சுனாமி அழிவுகளைப் பார்வையிட வந்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் பில் கிளின்ரன் வந்தார். எவருமே சுனாமியால் பாதிக்கப் பட்ட வன்னி மற்றும் தமிழ் பகுதிகளில் உள்ள மக்களைப் பார்க்க அரசு அனுமதியாது விரட்டியது. ஏன் என்று கேட்கவும் இவர்களுக்குத்: தோன்றவில்லை. ஐ.நா.மனித உரிமைக் குழு ஆணையாளர் கரேன் பார்க்கர் வந்தார் அவராலும் மனித உரிமை மீறல் பற்றி எதுவும் கேட்கவோ செய்யவோ முடியவில்லை.

அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த லூயிஸ் ஆபர் அம்மையார் வந்தார். அபலைத் தமிழ் பெண்கள் காணாமல் போக்கடிக்கப் பட்வர்களின் உறவினர் இராணுவத் தடைகளையும் மீறித் தமது சோகக் கதையைக் கூறத் துடித்தனர். பாதி கேட்ட நிலையில் மீதிக் கதை கேட்க மீண்டும் வருவேன் எனக் கூறி மீண்டும் வந்தார். அவருடைய பருப்பு எதுவுமே மகிந்தரின் பானையில் அவியவில்லை. பருப்புக் கறியும் பாயாசமும் விருந்தோடு கிடைக்கும் என்ற கனவும் கலைந்து விட்டது. காணாமல் போனவர் உயிரோடு மீண்டும் பாணலாம் என்ற நினைப்பும் இல்லை கருமாதியும் செய்ய முடியவில்லை.

இப்போது உள்ள ஐ.நா.செயலர் பான் கீ மூன் அறிக்கை விட்டு அரசிடம் அடிவாங்கிக் கிடக்கிறார். இத்தனை நடந்தும் இலங்கை அரசை ஜனநாயகச் சோசலிசக் குடியரசு என்றே சர்வதேசச் சமூகம் பார்க்கும் நிலைதான் அகில உலகக் கேவலமாகப் படுகிறது. மியன்மார் எனப்படும் பர்மிய யுண்டா இராணுவ அரசு, வியட்நாமின் பொல்பொட் அரசு, சிம்பாப்வே, டாவூர் போன்ற அரசுகளுக்கும் இலங்கை அரசுக்கும் என்ன வேறுபாட்டை இந்த வெட்கங் கெட்ட ஐ.நா.வும் ஏனைய அரசுகளும் காண்கின்றன ?

இவர்கள் வன்னி மக்களையும் அரச இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதி என்ற மரணப் பொறிக்குள் இழுப்பதில் ஏன் ஆர்வம் காட்டுகின்றன. ?

இதில் விதிவிலக்காகப் பாராட்டுக்கு உரிவராக செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பிரதிநிதியின் துணிச்சலான பதிலையும் நிலைப் பாட்டையும் தமிழினம் என்றைக்கும் நன்றியோடு நினைவு கூரும் என்பதிpல் சந்தேகமில்லை. அரசுக்கும் வன்னியில் இறந்து படும் இராணுவத்தின் உடல்களைப் பெற வேண்டிய தேவை இருப்பதாலும் செஞ்சிலுவைச் சங்கத்தை அரசு தொடர்ந்தும் பணி செய்ய அனுமதித்துள்ளது.

அதன் இருப்பால் மட்டும் தமிழினத்துக் விடிவு கிட்டி விடாது. உலகத்தின் மூடிக் கிடக்கும் கண்களைத் திறக்கச் செய்வதால் மட்டுமே தமிழரின் விமோசனம் உள்ளது. அதனைத்தான் இன்று வன்னி மக்கள் தொண்டு நிறுவனங்களை வெளியேற விடாது தடுக்கின்றனர்.

இந்தத் தொண்டர் நிறுவனங்களாவது தமிழ் மக்களும் புலிகளும் வேறு அல்ல என்பதையும் அங்கு இருப்பது பயங்கரவாத ஆட்சி அல்ல என்பதும் புலிகளும் தமிழ் மக்களும் பயங்கரவாதிகள் எனப் பட்டியல் இடப் பட வேண்டியவர்கள் அல்ல என்பதையும் வெளி உலகுக்கு வெளிப்படுத்துமா ? வெளிப்படுத்த வேண்டும். அதுவே ஈழத் தமிழினத்தின் உயிர் மூச்சு.

-பத்மா -



Comments