சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் தமிழீழ காவல்துறை நடுவப் பணியகம் அழிப்பு

சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் தழிழீழ காவல்துறை நடுவப்பணியகம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக துணைப் பணிமனை என்பன அழிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் உள்ள தமிழீழ காவல்துறை நடுவப்பணிமனை அதன் அருகாக உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழக துணைப் பணிமனை, வணிக நிறுவனங்கள், கிளிநொச்சி தபாலகம் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

இப்பணிமனைகள் மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 நிமிடமளவில் நான்கு தடவைகள் சிறிலங்கா வான்படையின் மிகையொலிவேகத்தாக்குதல் வானூர்திகள் தாக்குதலை நடத்தின.

இதில் காவல்துறை நடுவப்பணிமனை, அதன் அருகாக உள்ள வணிக நிலையங்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக துணைப் பணிமனை, வணிக நிலையங்கள், உணவகங்கள் என்பன அழிந்துள்ளன. கிளிநொச்சி தபாலகம் சேதமாகியுள்ளது.

மீண்டும் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் காவல்துறை நடுவப் பணியகம் மீது வானூர்திகள் நடத்திய தாக்குதலில் ஏலவே சிதைந்த பகுதிகள் மேலும் சிதைந்துள்ளன.

வானூர்திகள் முற்பகல் 9:30 நிமிடமளவில் நடத்திய தாக்குதலின் போது போது முதன்மை வீதி வழியாக சென்று கொண்டிருந்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

சிறீகாந்தகரன் கருணன் (வயது 23)

தேவராசா மகிந்தன் (வயது 21)

தங்கராசா சயந்தன் (வயது 31)

முத்துலிங்கம் தவராசா (வயது 47)

சிவகுரு மனோகரலிங்கம் (வயது 43)

பொன்னுத்துரை மங்களேஸ்வரி (வயது 64)

மகேந்திரன் கனிஸ்டன் (வயது 13)

ஆகியோர் காயமடைந்தனர்.

சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலின் சிதறல்கள் கிளிநொச்சியில் உள்ள மல்லாவி மருத்துவமனை வளாகத்துள்ளும் வீழ்ந்துள்ளன.

தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை மற்றும் சமாதான செயலகம் ஆகியவற்றுக்கு நேற்று குண்டுவீசி அழித்த சிறிலங்கா அரசு வெளிப்படையாக மக்கள் மத்தியில் இயங்கிவரும் தமிழீழ குடிசார் நிர்வாக மையங்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளை தற்போது அன்றாடப்பணியாக மேற்கொண்டு வருகின்றது.


Comments