ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: வைகோ அறிவிப்பு

தமிழ்நாடு அரசாங்கம் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைய தமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று ஒழிக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு தொடர்ந்து இனப்படுகொலை நடத்துவதைத் தெரிந்துகொண்டே இந்திய அரசு ஆயுத உதவி செய்து வந்து உள்ளது.

எனவே, இது அண்டை நாட்டுக்கு நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்ட உதவி அல்ல; சிங்கள அரசுக்கு இராணுவ பலத்தைக் கூட்டுவதற்காகவே வழங்கப்பட்ட உதவி ஆகும்.

"இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா இராணுவ உதவி செய்கிறது" என்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அக்டோபர் 2 ஆம் நாள் எனக்கு எழுதி உள்ள கடிதம், ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது.

சிறிலங்கா வானூர்தி படைக்கு வழங்கி உள்ள ராடர்களை, இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்;

இலங்கைக்கு அனுப்பி உள்ள இந்திய இராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும்;

குறைந்த வட்டியில் மானிய உதவி போல சிறிலங்காவுக்கு வழங்குவதாகச் சொன்ன கடனை, இரத்து செய்வதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்;

இந்தியக் கடற்படையும், சிறிலங்கா கடற்படையும் செய்துகொண்ட தகவல் பரிமாற்று ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும்;

சிறிலங்கா இராணுவத்துக்கும், வானூர்தி படையினருக்கும் இந்தியாவில் அளிக்கின்ற பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இலங்கையில் சிங்கள அரசு தன்னிச்சையாகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்தது.

ஒவ்வொரு நாளும், தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி, பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவதால், உடனடியாகத் தாக்குதலை சிறிலங்கா அரசு நிறுத்திவிட்டு, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்குமாறும், சிங்கள அரசின் நடவடிக்கைகளால் முறிந்துபோன அமைதிப் பேச்சுகளை, ஏற்கனவே நடுநிலைமையோடு கடமையாற்றிய நோர்வே அரசை நடுவராகக் கொண்டு நடத்த வேண்டும் என்றும் ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தை கொழும்பில் திறப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் வற்புறுத்துவதோடு, இதைச் செய்வதற்கு சிங்கள அரசு முன்வராவிட்டால், சிறிலங்காவுடனான ராஜீய உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ளும் என்றும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தும் என்று, இந்திய அரசு சிறிலங்காவுக்கு எச்சரிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்வதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வராவிடில், அந்த அரசுக்குத் தரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அறிவிக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களவருக்கு ஆயுதங்களை வழங்கி துரோகம் செய்த இந்திய அரசின் குற்றத்துக்கு, மத்திய அமைச்சரவைதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனவே, இலங்கையில் சிங்கள அரசு போர்நிறுத்தம் செய்வதற்கு உரிய நிர்பந்தத்தை மத்திய அரசு உடனடியாகச் செய்யாவிடில், அமைச்சரவையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.

தமிழர் நலன் காக்கவும், ஈழத்தமிழர் இனக்கொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, அதன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டே அல்ல! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments