போர் நிறுத்த காலத்தைப் போல் தமிழர் பகுதிகளிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும்: பெரியார் தி.க.

தமிழ்நாடு அரசாங்கம் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை வரவேற்றுள்ள தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகம், போர் நிறுத்த ஒப்பந்த காலத்திலிருந்ததைப் போல் தமிழர் பகுதிகளிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசாங்கம் ஏற்பாடு செய்த அனைத்து கட்சிக்கூட்டத்தின் தீர்மானங்களை வரவேற்று பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

தமிழக மக்களின் உணர்வை பிரதிபதிலிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வரும் அனைத்து கட்சியினரும் இம்முடிவை எடுத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் ஈழத் தமிழர் விடுதலைப் போருக்கான ஆதரவும் எழுச்சியும் நீறு பூத்த நெருப்பாக உள்ளது என்று நாங்கள் கூறிவந்தமை இப்போது உண்மையாகியிருக்கிறது. இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தன்னிச்சையாக முறித்துக்கொண்டது.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபோது எத்தகையதொரு நிலைமை இருந்ததோ அதே போல்- தற்போது தமிழர் பகுதிகளில் ஆக்கிரமித்து சிறிலங்கா இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்.

தமிழ் மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் நேரடியாக அவர்களைச் சென்றடைய வேண்டும்.

தமிழ்நாடு அரசாங்கத்தின் முன்முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நல்ல- சிறந்த முடிவை, ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் பெரியார் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள், தொடர்ந்து கண்காணித்து தமிழ் மக்களிடத்தில் இந்த உணர்வுகள் மங்கிவிடாமல் முன்னெடுககும் கடைமையைச் செய்வோம் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments