இந்தியாவின் அக்கறையின்மையால்தான் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சிறிலங்கா முடிவு: தினமணி குற்றச்சாட்டு

இந்தியாவின் அக்கறையின்மையால்தான் இலங்கைத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சிறிலங்கா அரசும் படையினரும் முடிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு குற்றம்சாட்டியுள்ளது.

இன்று புதன்கிழமை வெளிவந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் தலையங்கம்:

"பாவப்பட்ட ஜென்மங்கள்" என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு மிகவும் பொருத்தமானவர்கள் யார் என்று கேட்டால், இலங்கையில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான். காஸ்மீரப் பண்டிட்டுகளாவது அகதிகளாக அவர்களது உறைவிடத்திலிருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அதற்கும் வழியில்லாமல், அங்கேயே இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவதுதான் தலையெழுத்து போலிருக்கிறது.

அவர்களுக்குக் கொஞ்ச-நஞ்சம் பாதுகாப்பு அளித்து வந்த விடுதலைப் புலிகளும் பலமிழந்து விட்ட நிலைமை. ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய இந்திய அரசு, அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய கவலையில் இலங்கை என்கிற அண்டை நாடு இருப்பதையே மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.

சீதோஷ்ண நிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்னைகளில் மூழ்கி இருக்கும் சர்வதேச நாடுகளுக்கு இந்துமகா சமுத்திரத்தில் இருக்கும் சிறிய தீவான இலங்கையில் வசிக்கும் சிறுபான்மை மக்களான தமிழர்களைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை.

தேயிலைத் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யச் சென்ற இந்திய வம்சாவளித் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்த அறுபதுகளில் தொடங்கி, இப்போது எஞ்சி இருக்கும் தமிழர்களையும் அழித்து விடுவது என்கிற இலங்கை அரசின் இராணுவத் தாக்குதல் வரை, ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அது, இந்தியா இந்தப் பிரச்சினையை சரியாக அணுகவில்லை என்பதுதான்!

இந்திரா காந்தி பிரதமராக இருந்தவரை, இலங்கை அரசு இந்தியா என்ன சொல்லுமோ, என்ன செய்யுமோ என்று பயந்தது. அதனால், தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை சற்று கவனத்துடன் கையாள முற்பட்டது. ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவு கிடையாது என்பதைப் புரிந்துகொண்டது முதல், இலங்கையின் சிங்கள அரசும், இராணுவமும் திட்டமிட்டுத் தமிழர்களை அழிப்பதிலும், தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதிலும் முனைப்புடன் செயற்படத் தொடங்கின.

வசதி படைத்த யாழ்ப்பாணத் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் குடியேறி விட்டனர். அவர்களது வாரிசுகள் அந்தந்த நாடுகளில் படித்து, வளர்ந்து, தாய்நாடு பற்றிய சிந்தனையோ பற்றோ இல்லாதவர்களாக வளர்ந்துவிட்டனர். முந்தைய தலைமுறையினரும் சரி, போராளிகளுக்குப் பொருளுதவி அளித்து வந்ததுடன் தங்களது கடமை முடிந்தது என்று ஓய்ந்துவிட்டனர்.

இந்த நிலையில், இந்தியாவின் அக்கறையின்மையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இலங்கைத் தீவிலிருந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவது என்று இலங்கை அரசும் இராணுவமும் தீர்மானித்து விட்டதுபோலத் தோன்றுகிறது. கடந்த சில வாரங்களாக அங்கே இராணுவம் நடத்தும் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் குடித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்கிற பெயரில், அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து, இனப்படுகொலை நடத்தும் இலங்கை அரசைக் கேள்வி கேட்பார் இல்லாத நிலைமை.

பிஜித் தீவில் இந்தியர்கள் பிரச்சினை, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பிரச்சினை ஏன் உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்குப் பிரச்சினை என்கிற போதெல்லாம் வெகுண்டெழுந்து செயற்படும் இந்திய அரசு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மட்டும் மெத்தனப் போக்குடன் ஏன் செயற்படுகிறது என்கிற கேள்வியைத் தமிழர்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.

முன்பெல்லாம், நம்மவர்கள் மத்திய ஆட்சியில் முக்கியப் பங்கு வகிக்காதபோது, நமக்கு அதனால்தான் மரியாதை இல்லையோ என்று நினைக்கத் தோன்றியது. கடந்த 18 ஆண்டுகளாக, மத்திய அரசின் அச்சாணியாக தமிழகத்தின் மாநிலக் கட்சிகள் செயற்பட்டும் அதே நிலைமை நீடிப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அதிகாரிகள் மட்டத்தில் பேசிப் பயனில்லை என்பதையும், பிரதமர் மன்மோகன் சிங்கே நேரடியாக இலங்கை அதிபருடன் பேசி, தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைக்கும் பாதுகாப்புத் தேடித் தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் எழுப்புகின்ற குரல் தில்லியில் கேட்கிறதா என்பது தெரியவில்லை.

ஆனால், முதல்வர் கருணாநிதியே பிரதமரிடம் பேசியிருப்பதாகச் சொல்கிறார். அது ஓரளவுக்குப் பிரதமரை யோசிக்க வைத்திருக்கும் என்று நம்பலாம். "கவலை வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்புங்கள்" என்று பிரதமர் நா தழுதழுக்கத் தன்னிடம் கூறியிருப்பதாகவும், பிரதமரின் வார்த்தைகள் தனக்கு நம்பிக்கை தருவதாகவும் கூறுகிறார் முதல்வர்.

மத்திய அரசு இலங்கைத் தூதரக அதிகாரி மூலம் விடுத்திருக்கும் எச்சரிக்கை மீறப்பட்டால், இந்த அரசு தேவைதானா என்ற கேள்விக்கு விடை காண வேண்டி வரும் என்று முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். அது மத்திய அரசுக்கு மட்டுமல்ல, அவரது தலைமையிலான தமிழக அரசுக்கும் பொருந்தும் என்பதுதான் உண்மை! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments