விடுதலைப் போரும் வன்னி மக்களும்

- தாயகத்திலிருந்து சிவபரமன் -

ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் அந்த போராட்டம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் ஆதரவிலும் பங்குபற்றலிலுமே தங்கியிருக்கும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழீழ மக்களின் ஆதரவும் பங்களிப்பும் இருந்தன.

மக்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் நமது போராட்டம் இவ்வாறானதொரு வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது.

ஏடறிந்த வரலாற்றின் விடுதலைப் போர்கள் எவையும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெற்றதும் இல்லை.

இந்த வரலாறு விடுதலைப் போராட்டங்களுக்கு வேராக இருக்க, ஆதிக்க சக்திகளுக்கோ அச்சமூட்டும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் மக்கள் ஆதரவினைச் சிதைக்க ஆதிக்க சக்திகள் கடும் பிரயத்தனங்களை எடுப்பதுண்டு.

ஆரம்பத்தில் சலுகைவாத அரசியல் சக்திகளை பயன்படுத்தி மக்களைத் திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடும். இவ்வாறான சக்திகள் அதில் தோல்வியடையும் சந்தர்ப்பங்களில் போராட்டத்தின் ஆதாரமாக இருக்கும் மக்கள் மீது மிலேச்சத்தனமான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்ப்பதுண்டு.

ஆனால், இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தெளிவாக இருக்கும் மக்கள் கூட்டமொன்றின் ஆதரவைப்பெற்ற விடுதலைப் போராட்டங்களே வெற்றி பெற்றிருக்கின்றன.

அவ்வாறான விடுதலைப் போராட்டங்களை எந்தவொரு ஆதிக்க சக்தியும் தோற்றகடிக்க முடியாது.

இந்தப் பின்புலத்தில் நமது விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்போமானால், சிங்கள அரசு, தமிழீழ விடுதலை அரசியலின் அடித்தளமாக இருந்த நமது மக்களின் ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கு பிரித்தாளுதல், சலுகைவாத அரசியல் சக்திகளை வளர்ப்பதன் மூலம் மக்கள் மத்தியில் குழப்பங்களை உண்டு பண்ணுதல், மக்கள் மீது தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்ப்பதன் மூலம் போராட்டத்தின் மீதான அவர்களது ஆன்ம ஈடுபாட்டைச் சிதைத்தல் என பல செயற்பாடுகளை கடந்த காலத்தில் மேற்கொண்டிருக்கிறது.

ஆனால், அவ்வாறன ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் நமது மக்கள் கடந்து வந்திருக்கின்றனர்.

இந்தப் பின்புலத்தில் இன்று நமது தேசம் அதன் உச்சக்கட்டத்தை எதிர்கொண்டு நிற்கிறது. ஆனால் இதிலுள்ள ஒரு வேதனை என்னவென்றால், இன்று தமிழர் தேசம் எதிர்கொண்டிருக்கும் ஒரு முக்கிய வரலாற்றுத் திருப்புமுனையை கடந்து செல்வதற்கான முழு விலையையும் வன்னி மக்கள் மட்டுமே கொடுக்க வேண்டியிருப்பதுதான்.

இன்று தமிழீழ வரலாற்றை நகர்த்தி செல்லும் புரட்சிகர பாத்திரத்தை வன்னி மக்கள் மட்டுமே ஏற்றிருக்கின்றனர்.

இது நமது தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே இல்லாதவாறான ஒரு நிலைமையாகும்.

இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதை இதயசுத்தியுடன் சிந்திக்க வேண்டிய தார்மீக பொறுப்பு நமக்குண்டு.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் தமது ஆட்சி எல்லையை வடக்கு கிழக்கு தழுவியதாகப் பேணிவந்தனர்.

நமது மக்களும் பரந்தளவில் விடுதலை அரசியலின் பின்பலமாக தொழிற்பட்டனர்.

இதன் காரணமாக போராட்டத்திற்கான ஆளனிச் சேர்க்கையும் சகல பகுதிகளையும் பிரநிதித்துவப்படுத்தும் வகையில் அந்தந்தப் பகுதிகளின் சனச்செறிவிற்கும், போராட்டத்துடன் அவர்கள் கொண்டிருக்கும் பிணைப்பிற்கும் ஏற்ப நிகழ்ந்தது.

புதிய தலைமுறையினர் பலர் போராட்டத்தில் இணைந்தவாறு இருந்தனர்.

ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் கிழக்கில் கருணா விடயத்தால் ஏற்பட்ட உள்நிலை சிதைவுகள் அதுவரை நமது தேசத்தின் இராணுவ வலுவில் திகிலடைந்திருந்த சிங்களம் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் களமிறங்க வழிவகுத்து.

இன்று அதற்கான முழு விலையையும் வன்னி பெருநிலப்பரப்பின் மக்கள் கொடுத்து வருகின்றனர்.

இன்று சிங்களம் வாகரை, சம்பூர் பகுதிகளில் மக்களை விடுதலைக்கான அணிச் சேர்க்கையிலிருந்து பிரித்தாண்டது போல், வன்னி பெருநிலப்பரப்பின் மக்களையும் பிரித்தாளும் நோக்கிலேயே தமது இராணுவ மற்றும் அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றது.

வன்னியில் தினமும் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை போடுவதிலிருந்து மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரசு சாரா நிறுவனங்களை வெளியேற்றியது வரை அனைத்தும் மக்களைப் புலிகளிடமிருந்து பிரித்தாளுவதுதான் நோக்கம்.

ஆனால் அரசு எதிர்பார்த்தது போன்று வன்னி மக்கள் புலிகளிடமிருந்து விலகிவர முயலவில்லை.

மாறாக மேலும் மேலும் புலிகளின் பலமான பகுதிகளை நோக்கியே திரண்டு வருகின்றனர்.

வரும் மாதங்களில் மேலும் உச்சத்தை அடையவுள்ள போர்ச் சூழலில் அவர்கள் பல்வேறு நிலையிலும் நமது தேசத்தின் இராணுவ வலுவுடன் இணையக்கூடும்.

நமது கடந்த கால அனுபவத்தில், நமது விடுதலைப் போர் சில தற்காலிகமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் அதற்கான முழுத் தியாகங்களையும் செய்தவர்களாக வன்னிப்பெரு நிலப்பரப்பின் மக்களே இருந்திருக்கின்றனர்.

இன்றும் அவர்கள் பெருந் தியாகமொன்றிற்குத் தயாராகி விட்டனர்.

ஆனால் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி வன்னிக்கு வெளியில் இருக்கும் நமது நிலைப்பாடு என்ன?

இந்த விடுதலை வேள்வியில் நமது பங்களிப்பு என்ன?

ஒரு பழமொழி இருக்கிறது 'தமக்குள் குழம்பும் குடி ஒன்றாகவே கெடும்" இன்று நமது தேசத்திற்கு நேர்ந்தது இதுதான்.

நமக்குள் பிரதேசம், பல்வேறு கட்சிகள் என குழம்பியதன் விழைவை இன்று நாம் அனுபவிக்கின்றோம்.

ஊர் கெட்டதால் சிங்களக் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.

எனவே, வன்னியின் மக்கள் விடுதலைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் போது, நாம் நமக்குள் பேதமையைத் தூண்டும் சிந்தனைகளை அகற்றும் பணிகள் குறித்து சிந்திக்கலாம்.

இது குறித்து தமிழர் தேசிய ஊடகங்கள் கூடுதலான அக்கறை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.

இன்றைய சூழலில் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் அனைத்து வகை வாதங்களும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கான சூழச்சிகளேயன்றி வேறில்லை.

வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு அப்பால் இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் இது உணர்த்தப்பட வேண்டும்.

இன்று தமிழர் தேசியம் எதிர்கொண்டிருக்கும் தற்காலிக நெருக்கடியை புலிகள் தலைமையில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் மக்கள் அறுத்தெறிவர்.

அதில் இம்மியளவும் எவரும் நம்பி;க்கை இழக்க வேண்டியதில்லை.

அது எழுதி வைக்கப்பட்ட விதி.

நாம் நமது பணிகள் குறித்து சிந்திப்போம்.

கருவுற்றிருக்கும் உயிர் வெளியில் வரவேண்டுமானால் சற்று வலி பொறுத்துத்தான் ஆக வேண்டும். வலிக்கு அஞ்சினால் புதிய உயிரை தரிசிக்க முடியாது.

நன்றி: நிலவரம்


Comments