அநுராதபுரத்தில் குண்டுவெடிப்பு முன்னாள் இராணுவ உயரதிகாரி ஜானகப்பெரேரா பலி!

அநுராதபுரம் நகரில் இன்றுகாலை ஐக்கியதேசியக் கட்சி அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற பாரிய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் இராணுவ உயரதிகாரியும் வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜானகப்பெரேரா கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஜானகப்பெரேராவின் மனைவி உட்பட 22 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரான டாக்டர் ஜோன்புள்ளே. மேலும் 59 பேர் இதில் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

வடமத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கான புதிய அலுவலகம் ஒன்றின் திறப்பு விழா வைபவத்துக்காக, அந்த அலுவலகத்தில் ஜனாக பெரேரா உட்பட அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.தே.க. தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த வேளையிலேயே இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தில் சுமார் 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஜானகபெரேரா.

1996ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், யாழ். படைகளின் பிரதான கட்டளைத்தளபதியாக ஜனக பெரேரா இருந்தார்.

யாழ்ப்பாணப் படையினர் அவரது தலைமையின் கீழ் இருந்த காலத்தில்தான் அங்கு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி யாழ். நாவற்குழிப் பகுதியில் வைத்து இராணுவச் சிப்பாய்களால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார்.

அத்துடன் 1996 - 1997 காலப் பகுதியில் குடாநாட்டில் எழுநூறுக்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இரகசியமாகப் பிடித்துச் செல்லப்பட்டு செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்துக்கு இவரே பிரதான காரணகர்த்தா என்று அப்போது பேசப்பட்டது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கில் பிரதான குற்றவாளியாக மனுதாரர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தார் ஜானக பெரேரா.

எனினும் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவுடன் அவரை இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதராக்கி அங்கு அனுப்பிவைத்தது இலங்கை அரசு. அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை மழுங்கடிப்பதற்காகவே - மறைக்கச் செய்வதற்காகவே - அவரை இலங்கையை விட்டு வெளியேற்றுவதற்கு அரச உயர்பீடம் தீர்மானித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் இராணுவம் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், தளபதி ஜானக பெரேராவை சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று, மனித உரிமை அமைப்புகள் குரலெழுப்பி வந்தன. எனினும் அந்தக் கோ­ஷம் பெரிதாக எடுபடவில்லை.

சமீபத்தில் நடந்த வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியிருந்தார் ஜானக பெரேரா.

அந்த மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டார். அங்கு ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. எனினும் ஏனைய வேட்பாளர்களை விட, வடமத்திய மாகாணத்தில் அதிகபடியான விருப்பு வாக்குகளை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments