ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ் திரையுலகத்தினர் உண்ணாவிரம்: ரஜனி, கமல் உட்பட பலரும் பங்கேற்பர்

ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் சிறி லங்காவக்கான இந்தியாவின் இராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர், நடிகைகள் எதிர்வரும் 1 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தவுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்கவுள்ளனர் எனவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள கிளிநொச்சியைப் பிடிக்க அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அப்பகுதியிலிருந்தே வெளியேற்றி வருகின்றது சிங்கள இராணுவம். ஏராளமான தமிழர்கள் இதில் பலியாகி வருகின்றனர்.

இது தவிர, இந்திய சிறி லங்கா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் தாக்கி வருகிறது சிங்களக் கடற்படை. இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையிலும் சிங்கள இராணுவத்துக்கு இந்தியாவின் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழ் திரையுலகம் சார்பில் இராமேஸ்வரத்தில் எதிர்வரும் 19ஆம் திகதியன்று கண்டனப் பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இயக்குநர் பாரதிராஜா, ராமநாராயணன், நடிகர் சரத்குமார் தலைமையில் தமிழ் இன உணர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் திரையுலகின் அனைத்துப் பிரிவு சங்கங்களும் பங்கேற்றாலும், நடிகர் சங்கம் பங்கேற்பதில் உள்ள கஷ்டம் குறித்து சரத்குமார் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால், பின்னர் அவரை பாரதிராஜாவும், ராமநாராயணனும் சமாதானப்படுத்தினர். அவரும் இராமேஸ்வரம் வருவதாக ஒப்புக்கொண்டார்.

ஆனால், இராமேஸ்வரம் செல்ல நடிகர், நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு, தங்கும் வசதி என பல பிரச்சினைகள் இருப்பதால் சென்னையிலேயே போராட்டம் நடத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திரையுலகம் நடத்தும் போராட்டத்துக்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு.

ஆனால், இராமேஸ்வரம் வரை போய் பங்கேற்க முடியாதுள்ளதை வேதனையுடன் தெரிவிக்கின்றோம். நாங்கள் சந்திக்கவிருக்கும் நடைமுறை சிக்கல்கள்தான் இதற்குக் காரணம். எனவே, நடிகர் சங்கம் சார்பில் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நவம்பர் 1ஆம் திகதி தனி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இது திரையுலகம் நடத்தும் போராட்டத்துக்கு எதிரானதல்ல.

அவர்கள் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு. அதேநேரம் சென்னையிலேயே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இந்தப் போராட்டத்தில் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட அனைவரும் பங்கேற்பார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காலை 8 மணிக்கு துவங்கும் இந்த உண்ணாவிரதம் மாலை 4 மணிக்கு முடியும். போராட்ட முடிவில் ஈழத் தமிழருக்கு உடனடியாக அனைத்துவித அடிப்படை உதவிகள் செய்யக் கோரியும் சிறி லங்கா இராணுவத்துக்கு தரப்படும் இந்திய உதவிகளை நிறுத்தக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

தழித்திரையுலகத்தின் இராமேஸ்வர ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திரையரங்குகள் மூடப்படும்

ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி தமிழ் திரையுலகம் சார்பில் இராமேஸ்வரத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி பேரணி இடம்பெறவுள்ளது.

இப்பேரணியையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் 19 ஆம் திகதி காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படவுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும், சிங்கள அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 19 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலகினர் திரண்டு பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தவுள்ளனர்.

இதில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் என திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் திரையுலகம் சம்பந்தமான அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படவுள்ளன. போராட்டம் நடக்கும் 19 ஆம் திகதி தியேட்டர்களும் மூடப்படும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 19ஆம் திகதி பேரணியில் திரை அரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்களும் கலந்து கொள்கின்றனர். அதையொட்டி அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,100 தியேட்டர்களில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்றார்.

Comments