தமிழ்நாடு கடை அடைப்பு: வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கைது

இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் அக். 31 அன்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. மளிகை கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள், சிறப்பு அங்காடிகள், ஜவுளி கடைகள் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.

சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பெரம்பூர், வியாசர்பாடி, மயிலாப்பூர், அடையாறு, கோடம்பாக்கம், திருவொற்றியூர், திருவான்மியூர் உள்பட நகரின் பல பகுதிகளில் உள்ள மளிகை, காய்கறிகள் கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சிலர் காலை வியாபாரத்தை முடித்த பின்னர் கடைகளை அடைத்துவிட்டனர்.

சென்னையில் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேட்டில் நள்ளிரவு 12 மணி முதல் காய்கறி, பழக்கடைகள் மூடப்பட்டன. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாகச் சரக்குகள் ஏற்றி வரக்கூடிய லாரிகள் அக்.31 அன்று நிறுத்தப்பட்டன. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படவில்லை. இதனால் காய்கறி-பழ வியாபாரம் அடியோடு பாதித்தது.

பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் வாங்க டெம்போ, வேன், மினி வேன், ஆட்டோக்களில் கோயம்பேடுக்கு வழக்கமாக வரும் சுமார் 1000 வாகனங்களும் வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறி மொத்த சில்லறை வியாபார கடைகள் மூடுப்பட்டதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டின் மெயின் கேட் மூடப்பட்டு இருந்தது. பூக்கடை தவிர ஓட்டல்கள், டீக்கடைகள், பல் பொருள் அங்காடி போன்றவை மூடப்பட்டன. இதே போல தாம்பரம், ஆவடி, ஆம்பத்தூர், திருநின்றவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெரு வீதிகளில் திறந்து இருந்த ஒரு சில சிறிய கடைகளில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் டவுட்டனில் உள்ள சில கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவர் வேப்பேரி காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.

Comments