நோர்வே பேர்கன் நகரில் 48 மணிநேர உண்ணாநிலை போராட்டம்




வன்னி மக்களின் அவலத்தை நோர்வே அரசாங்கத்திற்கும் அனைத்துலக சமுதாயத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக நோர்வேயில் உள்ள பேர்கன் நகரில் 48 மணிநேர கவனயீர்ப்பு உண்ணாநிலை போராட்டத்தினை தமிழ் இளையோர் தொடங்கியுள்ளனர்.

பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் Metodis தேவாலயத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு இந்த உண்ணாநிலை போராட்டம் தொடங்கியுள்ளது.

உண்ணாநிலை போராட்டத்தில் இளையோர்களுடன் இணைந்து மொத்தமாக 13 தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.

Metodis தேவாலயத்தின் பாதிரியார் மெழுகுவர்த்தி ஏற்றி நிகழ்வை தொடக்கி வைத்தார்.

தொடக்க நிகழ்வில் நோர்வேஜிய நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

நிகழ்வில் தமிழீழ மக்களின் அவலநிலையை வெளிக்காட்டும் காணொளியும் காண்பிக்கப்பட்டது.


புல்லாங்குழல் இசையும் அதனைத் தொடர்ந்து தமிழீழப் போராட்ட வரலாறு நோர்வேஜிய மொழியில் விளக்கப்பட்டது.

தொடக்க நிகழ்வில் பெருந்திரளான தமிழ் மக்களுடன் நோர்வேஜிய மக்களும் பார்வையாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

உண்ணாநிலை கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக நேற்றைய நாள் நோர்வேஜிய ஏடுகளில் செய்திக்கட்டுரை இளையோர் அமைப்பு உறுப்பினர்களின் படங்களுடன் வெளியிடப்பட்டிருந்ததை பார்வையிட்ட பல நோர்வேஜிய மக்களும் தொடக்க நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Comments