மத்திய அரசை நியாயப்படுத்தும் முதல்வரின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது – பழநெடுமாறன்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழநெடுமாறன் அவர்கள் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் மத்திய அரசை நியாயப்படுத்தி வெளியிட்ட அறிக்கை தமக்கு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்து கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்திய அரசின் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக பல்வேறு கட்சித் தலைவர்களும் கூறியுள்ள நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

"இலங்கைப் பிரச்னையில் தலையிடுவதில் மத்திய அரசின் நிலையையும் அதிகார எல்லைகளையும் உணர வேண்டும். இன்னொரு நாட்டின் பிரச்னையில் பக்கத்து நாடு ஓரளவுதான் தலையிட முடியும்" எனக் கூறும் முதல்வர் தீர்மானம் போடுவதற்கு முன் இதைப் பற்றி யோசிக்கவில்லையா?



சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்த போது அது உள்நாட்டுப் பிரச்னை என இந்திய அரசுக்குத் தெரியவில்லையா?

இந்திய அரசு அளித்த ஆயுதங்களைக் கொண்டு தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது போரை நிறுத்து என்று கூறுவது இந்தியாவின் அதிகார எல்லையை மீறும் செயலா?

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானம் போட்ட முதல்வரே அதை மதிக்காமல் பின் வாங்கும்போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் இணைந்து முடிவு எடுக்க வேண்டிய வேளை வந்து விட்டது.

இந்திய அரசின் நிலைப்பாட்டை தமிழக மக்கள் ஏற்காததன் அறிகுறியே நாடெங்கும் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் ஆகும். மக்களின் போராட்டத்தைத் தொடர கட்சிகள் ஒன்று கூடித் தயாராவோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments