60 ஆவது சர்வதேச மனித உரிமை தினமும் சிறிலங்காவின் கிளஸ்ரர் குண்டு வீச்சும்

சர்வதேச மனித உரிமை பிரகடனம் உருவாக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி புதன்கிழமை 60 வருடங்கள் ஆகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்பத்தைத் தொடர்ந்து சர்வதேச சட்டங்கள், வரையறைகள் உருவாகுவதற்கு மூலப்பிரகடனமாக சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் விளங்குகிறது.

இப்பிரகடனம் முப்பது (30) சாரங்களைக் கொண்டவை. இவற்றில் சமத்துவம், சிவில், அரசியல் உரிமை அத்துடன் சமூகப் பொருளாதார கலாச்சார உரிமை போன்றவை அடக்கப்பட்டுள்ளது.

இப்பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி முதல், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ள அனைத்து நாடுகளும் இப்பிரகடனத்தை ஏற்று நடக்க கடமைப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் சிறிலங்காவின் நிலையை ஆராய்வது மிக அவசியமானது.

சிறிலங்கா, ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து 1948 ஆம் ஆண்டு பெப்பிரவரி 4 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது.

ஆனால், இத்தீவில் ஒரு தேசிய இனமாக வாழும் தமிழர்கள், தமது முழு அளவிலான அரசியல் உரிமைகளைப் பறிகொடுத்த நாளாக இந்நாளை கொள்ளலாம்.

அதாவது, சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிற இதேவேளையில், இலங்கைத் தீவில் சிங்கள அரசும் தமிழர் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய 60 ஆவது வருடத்தை, சுதந்திரம் பெற்ற தினமாகக் கொண்டாடுகின்றார்கள்.

தமிழீழ மக்களின் மனித உரிமைகளை மீறுவதில் மறுபட்ட சிறிலங்கா அரசுகள் கண்ட மகிழ்ச்சி, கடந்த 60 வருடங்களில் எண்ணில் அடங்காதவை.

1948 இல், வாக்குரிமை, குடியுரிமை ஆகியவை பறிக்கப்பட்டதுடன் சிங்கள மொழி திணிக்கப்பட்டு, சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் விஸ்தரிக்கப்பட்டு கல்வித்தரப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்ட வேளை தமிழ் மக்கள் மீது பல இனக்கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சிறிலங்கா அரசின் அடக்குமுறையாலும் இனக்கலவரங்களினாலும் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், காணாமல் போயும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டும், சொந்த வாழ்விடங்கள், கிராமங்களை விட்டும் விரட்டியடிக்கப்பட்டனர்.

முன்பு நடந்தவை, தற்போது நடப்பவற்றை நாம் ஆராயுமிடத்து, 1956 முதல் ஆரம்பமாகிய தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் - குண்டாந்தடியினால் ஆரம்பிக்கப்பட்டு, ஒருவர் இருவராக கொல்லப்பட்டு, ஒன்றிரண்டு தமிழ் வீடுகளாக அழிக்கப்பட்டு காலப்போக்கில் துப்பாக்கி, கைத்துப்பாக்கி பெற்றோல் குண்டு நிலக்கண்ணிவெடிகள் என பரவலாக்கப்பட்டு, எறிகணைத் தாக்குதல், விமானக்குண்டு வீச்சு என முன்னேற்றம் பெற்று, இன்று சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் தனது 60 ஆவது கொண்டாடும் இவ்வேளையில், சிங்கள இனவெறியாளரின் 'கிளஸ்ரர்" என அழைக்கப்படும் கொத்தணிக் குண்டு வீச்சிற்கு தமிழீழ மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழீழ மக்கள் இருப்பிடங்கள், பாடசாலைகள், பொது இடங்கள், கிராமங்கள் யாவும் நூற்றுக்கணக்காக, ஆயிரக்கணக்காக எறிகணை தக்குதலகளினாலும் விமானக் குண்டுவீச்சுக்களினாலும் அழிக்கப்பட்டுள்ளன.

கொத்தணிக் குண்டு
உலக நாடுகள் எதை எதையெதையெல்லாம் உலகுக்கு கடுமையான தீங்கு விளைவிப்பதாக கூறி தடைசெய்தார்களோ, செய்ய எண்ணுகிறார்களோ அவை யாவற்றையும் இன்று சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக பாவிக்கின்றது.

கடந்த மே மாதத் அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பல நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் ஓன்றுகூடி 'கிளஸ்ரர் குண்டு" பாவனைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, இவ் உடன்படிக்கையில் ஐ.நா. அங்கத்துவ நாடுகளை கைச்சாத்திடுமாறும், இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான கூட்டத்தையும் தற்போது நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் கூட்டியுள்ள வேளையில், சிறிலங்கா இக் 'கிளஸ்ரர் குண்டை" பாவனைக்கு எடுத்துள்ளமை, சிறீலங்காவின் சர்வதேசத்திற்கு எதிரான போக்கை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

சிறிலங்கா தனது மோசமான மனித உரிமை மீறல்களுக்காக, ஐ.நா. மனித உரிமைச்சபையில் தனது ஆசனத்தை இழந்தது, தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பீ. பிளஸ் எனும் சலுகை விடயமும் ஊஞ்சலாடும் இவ்வேளையில், இவர்கள் பாவனைக்கு உட்படுத்தும் 'கிளஸ்ரர்" குண்டுவீச்சு சிறிலங்காவை எங்கு கொண்டுசென்று விடும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- பிரான்சிலிருந்து ச.வி.கிருபாகரன் -


Comments