மும்பாய் தாக்குதலை நடத்திய அஜ்மலை நேபாளத்திலிருந்து கடத்தி வந்தது இந்திய றோ: பாகிஸ்தான் சட்டத்தரணி தகவல்

இந்தியாவின் மும்பாயில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவராகக் கூறப்படும் அஜ்மலை, நேபாளத்திலிருந்து கடத்தி வந்தது இந்திய உளவு அமைப்பான "றோ" தான் என்று பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த சட்டத்தரணியான சௌத்ரி மொகமட் பரூக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாளேடான த நியூசுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

மும்பாயில் கைது செய்யப்பட்டு இந்திய பாதுகாப்பு படையின் காவலில் உள்ள நபரின் உண்மையான பெயர் அஜ்மல்.

2007 ஆம் ஆண்டின் ஜூலையில் அஜ்மலை அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டனர். நேபாளத்துக்கு வர்த்தக ரீதியாக சென்றிருந்த அஜ்மல் அங்கிருந்து காணாமல் போனது தெரியவந்தது.

இது தொடர்பாக நேபாள தலைமை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்திருந்தேன். அதனை நேபாளத் தலைமை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

அந்த வழக்கில் நேபாள உள்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நேபாள அரசு மற்றும் இந்திய உளவு அமைப்புக்களை எதிர்த்தரப்பாக குறிப்பிட்டிருந்தேன்.

அஜ்மல் காணாமல் போனது தொடர்பாக நேபாள காவல்துறை, ஐ.நா.வின் நேபாள மனித உரிமைகள் குழு மற்றும் நேபாள மனித உரிமை ஆர்வலர்களிடமும் தெரிவித்திருந்தேன்.

அப்போதே இந்திய உளவு அமைப்பினரால் அஜ்மல் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறியிருந்தேன்.

அஜ்மலை இந்திய உளவு அமைப்பினர் கைது செய்த செய்திகள் ஏற்கெனவே நேபாள ஊடகங்களிலும் வெளிவந்திருக்கிறது. இந்திய உளவு அமைப்பினரால் அஜ்மல் கைது செய்யப்பட்ட செய்தி, அஜ்மலின் குடும்பத்தாருக்கு தெரியும்.

நேபாளத்துக்கு தனது நண்பர்கள் நால்வருடன் அஜ்மல் சென்ற நிலையில்தான் காணாமல் போனார். அஜ்மல் உட்பட நான்கு பேரும் வாரந்தோறும் வர்த்தகம் தொடர்பாக பாகிஸ்தான் ஏயர்லைன்ஸ் வானூர்தி மூலம் நேபாளம் செல்வது வழமையாகும். அஜ்மலின் குடும்பத்தினர் அந்த நால்வரில் சிலரைத் தொடர்பு கொண்டனர்.

நேபாளத்தில்தான் அஜ்மல் காணாமல் போனது குறித்த ஆதாரங்கள் உள்ளன.

இந்திய உளவு அமைப்பினரால் அஜ்மல் கடத்தப்பட்டது குறித்து அனைத்துலக ஊடகவியலாளர்கள் பங்கேற்ற மாநாட்டை நேபாளத்தில் நான் நடத்தியிருந்தேன். அதனை இணையத் தளங்களிலும் வெளியிட்டிருந்தோம்.

நேபாளத்தில் அஜ்மலை கைது செய்த இந்திய உளவுத்துறை நான்கு மணி நேரம் அங்கே காவலில் வைத்து சித்திரவதை செய்த பின்னர் இந்தியா கொண்டு சென்றது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள அஜ்மல்தான் நேபாளத்தில் கடத்தப்பட்டவர்.

அஜ்மலுக்கும் பரித்கோட்டுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும் அஜ்மலின் உறவினர்களின் தொடர்பு எண்களை அந்த சட்டத்தரணி வெளியிடவில்லை.

இதனிடையே, நேபாளத்தில் இந்திய உளவு அமைப்பினரால் அஜ்மல் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதை நேபாள அரசு மறுத்துள்ளதாக பாகிஸ்தானிய தொலைக்காட்சியான ஜியோ செய்திகள் கூறுவதாகவும் த நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Comments