சமாதான பேச்சுகள் தோல்விக்கு யார் காரணம்?

இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்குமான விஜயத்தினை தற்போது மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரோமாபுரி சென்று பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்து இலங்கை நிலைமைகளை விளக்கியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்து வத்திக்கானின் இராஜாங்கச் செயலாளர் காடினல் ராசிசோ பேண்ரோன் என்பவரோடு கலந்துரையாடல் நடத்திய போது பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் கிழக்கு மாகாணம் விடுக்கப்பட்டமை, குறிப்பாக மடு தேவாலயப் பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டமை யாவற்றையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

மேலும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின் அரசியல் தீர்வொன்றினை எட்டுவதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைந்து ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசிக்க வேண்டுமென தான் அறைகூவல் விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார். சமாதானத்தையும் சுதந்திரத்தையும் மீட்பதற்கு இராஜாங்க செயலாளர் பேண்ரோன் நல்லாசிகளை வழங்கியதாக அறியப்படுகிறது. ஆனால், வத்திக்கான் விஜயம் பற்றி கூட்டறிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை



சர்வமத தலைவர்களுடன் சந்திப்பு

மேற்குறித்த வெளிநாட்டு விஜயத்தின் முன்னர் அதாவது 25.11.2003 ஆம் திகதி கோட்டை நாக விகாராதிபதி வண. மாதுருவாவே சோபித தேரர், மன்னார் மறை மாவட்ட ஆண்டகை அதி வண. ராயப்பு ஜோசப் அடங்கலான சர்வமத தலைவர்கள் மற்றும் சில பிரமுகர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.), ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கு உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்ட போது இது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை.

ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். கடந்த 25 வருடங்களாக வெவ்வேறு அரசாங்கங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 3 தடவைகள் நான் ஐரோப்பாவுக்கு தூதுக்குழுக்களை அனுப்பியுள்ளேன் என அவர் (ஜனாதிபதி) கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது;

"விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த காலப் பகுதிகளை தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கே பயன்படுத்தியுள்ளனர். ஆகையால் அவர்களைத் தோற்கடிக்கும் வரை அல்லது அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின் நான் அரசியல் தீர்வுத் திட்டத்தினை முன்வைப்பேன்' என்பதாகும்.
பிரபாகரன் மாவீரர் தின உரையில் கூறியது

பேச்சுவார்த்தைகள் விடயத்தைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 2008.11.27 ஆம் திகதி ஆற்றிய மாவீரர் தின உரையில் குறிப்பிட்டிருந்ததைப் பார்ப்போம்.
"அதேநேரம் நாம் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை சமாதான வழிமுறை தழுவி எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க திம்புவில் தொடங்கி, ஜெனிவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுகளில் பங்கு பற்றி வந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காண நாம் முழு மனதுடனும் நேர்மையுடன் செயற்பட்ட போதும் பேச்சுகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

சிங்கள அரசுகளின் விட்டுக் கொடுக்காத கடும் போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித்தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பு என்ன நடந்தது?
தமிழர் தரப்பில் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்திய மூன்று தசாப்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் பண்டாரநாயக்க செல்வநாயகம் மற்றும் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தங்கள் போன்ற சமாதான உடன்படிக்கைகள் யாவும் சிங்கள பேரினவாத சார்பு தலைமைகளால் காற்றில் பறக்க விடப்பட்ட வரலாற்றினை முற்றாக மறந்த நிலையிலேயே தென்னிலங்கை தலைமைகளால் காய்கள் நகர்த்தப்பட்டு வந்துள்ளன.

குறிப்பாக கடந்த 60 வருடகாலமாக தெளிந்த நிதானமான வரலாற்றுப் பார்வையோ நாட்டின் நீண்ட கால நன்மை கருதிய தொலை நோக்கோ இன்றியே ஆளும் வர்க்கத்தினர் செயற்பட்டு வந்துள்ளனர் எனவும் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான தீர்வுத் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதற்கான ஒரு விதமான அறிகுறியும் தெரியவில்லை. கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தி ஜனநாயகம் மீட்கப்பட்டுள்ளதாக ஓயாத பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் பூசல்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன என்பது வெள்ளிடை மலை. மட்டக்களப்பில் 3 இரவுகளில் 25 படுகொலைகள் என சென்ற வாரச் செய்தியொன்று கூறியது. கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

முதலமைச்சர் கவலை

மறுபுறத்தில் மிக பரபரப்பாக பதவியில் அமர்த்தப்பட்டவராகிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது கையில் ஒரு அதிகாரமும் இல்லை என 23.11.2008 "சண்டே ரைம்ஸ்' இதழுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். அது போலவே, முக்கியமான மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் தனது கவலையை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.

கிழக்கின் நிலைமை இவ்வாறிருக்கையில் வடக்கில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின் இதே பாணியில் தான் அரசாங்கம் காய்கள் நகர்த்த முற்படும் எனலாம். அரசாங்கமானது தனது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் அதற்காக என்ன விலையையும் கொடுப்பதற்குத் தயாராயுள்ளதையும் காண்பது கடினமான காரியமல்ல. இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கான விடயங்கள் மீது கவனம் செலுத்தப்படாமலிருப்பதைக்காணலாம்.

மூளைசாலிகள் வெளியேற்றம்

இந்த வகையில் "மூளைசாலிகள் வெளியேற்றம்' என்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய விடயமாகும். இது தொடர்பாக அண்மையில் இடம் பெற்ற பட்டமளிப்பு வைபவமொன்றினை உதாரணமாகக் குறிப்பிடலாம். பட்டதாரி பின்படிப்பு முகாமைத்துவ நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுவாக இத்தகைய வைபவங்களின் போது புகைப்படங்கள் எடுத்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு நீங்காத மகிழ்ச்சிதரும் வாய்ப்பாக ஆவல் காணப்படுவதை நாம் அறிவோம்.

ஆனால், மேற்குறித்த பட்டமளிப்பு வைபவத்திற்குரிய பல பட்டதாரிகள், வருகை தந்திருக்க வில்லை. பட்டமளிப்பு விழாவுக்குக் காத்திருக்காமல் பல பட்டதாரிகள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, டுபாய் போன்ற நாடுகளுக்குப் பறந்து விட்டனர். அறிவியல் மூலதனத்திலேயே ஒரு நாட்டின் எதிர்காலம் பெரிதும் தங்கியிருக்கின்றது. அது வின்றி வேறு பல வளங்கள் இருந்தும் பயன் இல்லை. அதுபோலவே, மேசன்மார், தச்சுத்தொழிலாளர் போன்ற தரங்களில் உள்ளவர்களும் அடுத்த கட்ட அறிவியல் மூலதனமாகக் கருதப்படவேண்டிய பிரிவினர் ஆவர். இவர்களையெல்லாம் இன்று இந்த நாடு இழந்து வருகிறநிலைமை காணப்படுகிறது.

மிக துர்ப்பாக்கியம் என்னவென்றால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் அரசாங்கமே அவர்களை வெளியேறச் செய்வதற்கு ஊக்கமளித்து வருகிறது என்பதாகும். மேலும், பல்லாயிரக்கணக்கான புத்திஜீவிகள், தொழிலறிஞர்கள் நாட்டு நிலைமைகள் காரணமாக ஏற்கனவே வெளியேறிவிட்டமை நாட்டின் அபிவிருத்திக்குக் குந்தகமாய் அமைந்துள்ளது. அவர்களின் சேவைநாட்டுக்குத் தேவை, அவர்கள் நாட்டுக்கு மீள வேண்டும் என அரசாங்கம் சிந்தித்துச் செயற்படத் தலைப்படவேண்டும். நாட்டுக்குச் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு உறுதியாய் உழைக்க வேண்டும்.

உலகளாவிய நிதி நெருக்கடியும் இலங்கையும்

அடுத்த முக்கியமான விடயம் இன்றைய உலகளாவிய நிதி நெருக்கடியாகும். அமெரிக்கா முதல் அபிவிருத்தியடைந்த நாடுகள் பல ஈடாடிப்போயுள்ளன. ஆனால், அதனால் இலங்கைக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டு விடாது என்றொரு மெத்தனப்போக்கு காணப்படுகிறது. மத்திய வங்கி ஆளுநர் நிவாட்கப்றால் கூட இது விடயமாக இலங்கை கலக்கமடையத் தேவையில்லை எனக் கூறியுள்ளார். "வாழ்க்கைக்குப் பயிர்' என்றும் உலகளாவிய அமைப்பின் இலங்கைக்கிளை விவசாயத்துறை முகம் கொடுக்கும் முக்கியமான பிரச்சினைகளை அண்மையில் கூடி ஆராய்ந்தது.

அங்கே பிரதான உரையாற்றிய பிரபல பொருளியல் நிபுணர் றொஹாந்த அத்துக்கோறளை, "இன்றைய உலகளாவிய நெருக்கடியானது இலங்கையில் பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகையால் மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்று முகமாக சில மீட்பு பொறிமுறைகளை பிரயோகிப்பதற்குத் தயாராக வேண்டுமென எச்சரிக்கை விடுத்திருந்தார்.

2004 இல் ஏற்பட்ட கடல்கோள் (சுனாமி) போன்று எழுந்துள்ள நிதிநெருக்கடியானது அமெரிக்கா போன்ற சில நாடுகளைக்கூட ஆட்டங்காணச் செய்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் கூறியதாவது, "இலங்கையில் குறிப்பாக தேயிலை, இறப்பர், தெங்கு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தாவிட்டால் குறிப்பாக கீழ் மட்டங்களிலுள்ள மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாகும்.

எனவே விவசாயத்துறைக்கு எவ்வகையான மீட்புத்திட்டங்கள் தேவையென ஆராய்ந்து உலகளாவிய ரீதியில் பரவிச் செல்லும் நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்குரிய முறையில் விவசாயத் துறை மீள்கட்டமைப்புச் செய்யப்பட வேண்டும்' என்பதாகும்.

எனவே இலங்கையில் 25 வருடகால அழிப்பு யுத்தத்திற்கு முடிவுகட்டி, நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை தட்டிக்கழிக்க முடியாததாகும்.

- வ. திருநாவுக்கரசு


Comments