இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களுக்கு உதவுமாறு செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள்

சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களுக்கு பொருளாதார வளம் கொண்டவர்கள் மற்றும் உதவி அமைப்புக்கள் உதவ முன்வர வேண்டும் என கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மோசமான போர் அழுத்தங்களும் வாழ்வியல் நெருக்கடிகளும் மக்கள் முழுமையாக புதையுண்டுள்ளனர்.

உண்ண உணவும், உடுக்க உடு துணியும், மருந்துகளும் இல்லிடமும் இன்றி மிக மோசமான பரிதாபத்திற்குரிய வாழ்க்கையை வன்னி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய பேரவலத்திற்கு உதவுவதற்கு தொண்டு நிறுவனங்கள் எவையும் இங்கு இல்லை.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு மட்டும் சேவையாற்றி வருகின்ற போதும் அவலங்களினால் எழுந்துள்ள தேவைகளை நிறைவு செய்ய அதனால் இயலவில்லை என்பது மக்களைப் பாதித்துள்ள பாரிய கவலையாகும்.

எமது செஞ்சிலுவைச் சங்கக் குடும்பம் மருத்துவ சுகாதார சேவைகளை உள்ளுரில் இன்னும் எஞ்சியுள்ள நிதியுதவியாளர்களின் துணையுடன் ஆற்றி வருகின்றோம்.

எதிர்வரும் நாட்களில் குழந்தைகளுக்கான சத்துணவு, பால்மா போன்றவற்றையும் சுகாதார வேலைத்திட்டங்களையும் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை எம் முன்னால் எழுந்துள்ளது.

மக்களின் துயர் துடைக்க எல்லோரும் உதவிட அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம் என அதில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments