இலங்கைத் தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு



இலங்கை அதிபரும், தளபதியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இலங்கைத் தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரி டிசம்பர் 10ஆம் நாள் காலை 11 மணியளவில் சென்னையில் இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு என்னுடைய தலைமையில் கறுப்புக்கொடி ஏ‌‌ந்‌தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கை வருமாறு:-

இலங்கைத் தீவில் தமிழ்க் குலத்தையே கூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு ராணுவத் தாக்குதலை நடத்தித் தமிழர்களைக் கொன்று குவித்து இனப் படுகொலை செய்து வருவதை சிங்கள அரசு நிறுத்த வேண்டும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், 'தமிழக அரசியல் கோமாளிகள் சொல்வதை இந்திய அரசு கேட்காது' என்று இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கொக்கரித்து உள்ளார்.

"இந்திய அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்கவில்லை என்றும், இனியும் கேட்காது என்றும், இது குறித்து இந்தியப் பிரதமர் தம் கருத்தை எங்களிடம் தெரிவித்து உள்ளார்'' என்றும் கூறி உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தின் 'மை' உலர்வதற்கு உள்ளாக, டெல்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்துவிட்டு, இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்சே 'போர் நிற்காது' என்று மமதையோடும், அடங்காத் திமிரோடும் முர்க்கத்தனமாகப் பேசியது இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்.

இந்த வெக்கக்கேடான இழிசெயலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காததால்தான், ராஜ பக்சேயின் ஏவுதலோடு சிங்களத் தளபதி, தமிழகத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்திப்பேசும் துணிச்சலைத்தந்து உள்ளது.

சட்டமன்றக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தைத் தமிழக முதல்வர் கூட்டிய போதும், டெல்லிக்குச் சென்று கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்த போதும், இவையெல்லாம் கண்துடைப்பு நாடகம் என்றும், இந்திய அரசு போர் நிறுத்தத்தை வற்புறுத்தப் போவது இல்லை என்றும் தெரிவித்தேன். தற்போது சிங்களத்தளபதி, தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்தி உள்ள அக்கிரமம் மன்னிக்க முடியாத கொடுமை ஆகும்.

இலங்கையில் தமிழ் இன அழிப்புப் போரைச் சிங்கள அரசு நடத்துவதற்கு ராடார்கள், ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி ராணுவ ரீதியான தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து இந்தப் போரைப் பின்னால் இருந்து இந்திய அரசு இயக்கி, தமிழ் இனத்துக்குத் துரோகம் இழைப்பதால் ஏற்பட்ட அகம்பாவமும் துணிச்சலும்தான் சரத் பொன்சேகாவை இப்படிப் பேச வைத்து உள்ளது.

இந்தியா உலகின் அணு ஆயுத வல்லரசுகளுள் ஒன்று ஆகும்.ஆனால் சுண்டைக்காய் நாடான இலங்கையில் சிங்கள இனவாத அரசு, ஏழுகோடி தமிழ் மக்கள் உள்ள தமிழகத்தை அதன் சட்டமன்றத் தீர்மானத்தைக் கிள்ளுக்கீரையாக நினைத்து மண்டைக் கொழுப்புடன், எக்காளமிடும் அவமானத்தை இந்திய அரசுதான் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை டெல்லிக்கு வரவழைத்து 'போர் நிறுத்தம் செய்கிறாயா? இல்லையா? என்று எச்சரிக்கை செய்வதற்கு பதிலாக இந்திய அரசின் வெ‌ளிஉறவுத்துறை அமைச்சரை இலங்கைக்குத் தூது அனுப்பப் போகிறோம் என்று சொல்வதே மானக்கேடு ஆகும். 'இனியும் பொறுப்பதற்கு இல்லை' என்று தமிழ் மக்கள் எரிமலையாய்ச் சீறவேண்டிய தருணம் ஏற்பட்டு விட்டது.

இலங்கையில் தமிழ் மக்களை படுகொலை செய்து கொண்டே, இந்தியக் கடலிலும் நுழைந்து தமிழக மீனவர்களையும் தாக்கி கொலை பாதகம் செய்து கொண்டே இத்தனைக்கும் மேலாக தமிழகத் தலைவர்களைத் துச்சமாகக் கருதி கேலி புரியவும் ஏளனம் செய்யவும், சிங்களத் தளபதி முற்பட்டுவிட்டார். இது தமிழ் இனத்துக்கும், தாய்த் தமிழகத்துத் தமிழர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இழைக்கப்பட்ட பெருத்த அவமானம் ஆகும்.

இந்தியப் பிரதமர் உடனடியாக இலங்கை அரசுக்குப் பலத்த கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவும், இலங்கைத் தளபதி சரத் பொன்சேகாவும் நிபந்தனை அற்ற மன்னிப்புக் கோருமாறு இந்தியா நிர்பந்திக்க வேண்டும். அப்படி மன்னிப்புக் கேட்காவிடில் இலங்கைத் தூதரை இந்தியாவில் இருந்து மத்திய அரசு வெளியேற்ற வேண்டும்.

இலங்கை அதிபரும், தளபதியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இலங்கைத் தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரி டிசம்பர் 10ஆம் நாள் காலை 11 மணியளவில் சென்னையில் இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு என்னுடைய தலைமையில் கறுப்புக்கொடி ஏ‌‌ந்‌தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழர்களின் மானம் காக்க நடத்தப்படும் இந்த அறப்போரில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்

Comments