சிங்களவர்களின் குரலாக சதா ஒலிக்கும் ஜெயலலிதா: வீரமணி சாடல்



சிங்களவர்களின் குரலாக தமிழ்நாட்டிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சதா ஒலித்துக் கொண்டிருக்கின்றார் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அண்ணா பெயரில் கட்சி. அதனையே "ஆரிய மாயை'' அபகரிப்பு. எந்த சொல்லுக்காக சிங்கள இராணுவ தளபதியை கண்டிக்கிறார்களோ, அதே கருத்தினை வெளிப்படையாக அறிக்கைகள் மூலம் பொறுப்பான ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக முதலமைச்சர் வசூலித்த நிவாரண நிதி சேகரிப்பை கொச்சைப்படுத்தினார்.

ஆனால் உண்மை என்ன? படங்களுடன் செய்திகள் வந்தனவே. ஜெயலலிதாவின் புளுகு பலூன் வெடித்து சிதறிவிட்டதே. சிங்களர்களின் குரலைத்தானே இவர் சதா ஒலிக்கிறார். காரணம் என்ன? தமிழரல்லர் என்பதுதானே. தமிழ்நாட்டு வாக்காளர்களை எவ்வளவு அடிமுட்டாள்கள் என்று அவர் நினைத்திருக்கிறார்.

இவ்வளவையும் மறந்துவிட்டு, அந்த அணிபக்கம் ஓடினால் இரண்டொரு சீட்டுகள் கிடைக்கும் என்று ஓடுகிறார்களே- தமிழன் நிலை இவ்வளவு கேவலமாக ஆகலாமா?

ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, சோ, கல்கி- பார்ப்பன ஊடகங்கள் இன அடிப்படையில் மன அடிப்படையில் ஒன்றாக நிற்கின்றன. தமிழர்களின் கடமை என்ன? சிங்களவருக்கு ஆதரவு குரல் கொடுப்பவருடன் கூட்டு வைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழங்குவோம் என்பது அசல் இரட்டை வேடம் அல்லவா? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு காட்டும் போது நம்மில் எவரும் ஈனத்தமிழர்களாக மாறிவிடக்கூடாது என்றார் அவர்



Comments