ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தகோரி தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

எதிர்வரும் சனிக்கிழமை (13.12.08) காலை 09:00 தொடக்கம் மாலை 06:00 வரையில் சென்னையில் கோயம்பேடு என்னும் இடத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

உண்ணாநிலைப் போராட்டத்துக்கான அழைப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகின்றோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் அடைக்கலம் புகுகின்றனர்.

இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கின்றோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் நாளாந்தம் இறக்கின்றனர் அவர்கள்.

அடுத்த வேளை உணவு, KFC Chicken-ஆ அல்லது Pizza Hut-ஆ என்று நண்பர்களுடன் பேசுகின்றோம் நாம். நாளைக்காவது ஒருவேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கின்றனர் அவர்கள்.

பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கின்றோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கின்றனர் அவர்கள்.

சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கின்றோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கின்றனர் அவர்கள்.

நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் நாம்?

செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிக்க ஒருநாள் உண்ணாநிலை இருப்போம், வாருங்கள் நண்பர்களே! என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


Comments