புலி எதிர்ப்பு நிலைப்பாடு இலங்கை இந்திய உறவும்

ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் வன்னியில் நிகழ்ந்தேறுகின்றனஆழ ஊடுருவும் அரக்கர்களும், பேரினவாத எறிகணைகளும் அகதிகளைக் கொன்று குவிக்க, ஜனநாயக மீட்பு யுத்தம் புரிவதாக உலகை ஏமாற்றுகிறது சிங்கள தேசம்.

பகலிலும் இருள் சூழ்ந்த பதுங்கு குழி வாழ்விற்கும் பழக்கப்பட்ட மனிதர்கள். மகாவம்சப் பேரிரைச்சல் தரும் வான் தாக்குதல்களால் திசைமாறிச் சரணடைவார்களென்று நம்பப்ப டுகின்றது.வன்னி மக்களின் வாழ்வுரிமை மீது உக்கிரமான போராட்சி புரியும் பெருந்தேசிய இனவாதம், நிவாரணங்களை இடைமறிக்க, எறிகணை யுத்தம் புரிகிறது.கழுத்து முறிக்கப்பட்ட தென்னை மரங்களும் கூடு கலைக்கப்பட்ட பறவைக் கூட்டங்களும் தாயக மக்களின் அவல வாழ்வின் சாட்சிப் பதிவுகளாகின்றன.

வலிதரும் இடர் நீக்கப் போராட்டம் தொடர்கின்றது. இயல்பு வாழ்வை மீட்பதென்கிற பொய்யுரை, வாழ்வுரிமையற்ற சூனியக் களத்தினை உருவாக்கும் நிலையினை மெய்யாக்கும் பாதையில் பயணிக்கிறது.ஆனாலும் பொய்மைத் திரை நீக்கப் போராட்டம் தொடர்கிறது. முல்லைத்தீவு வைத்தியசாலையில் அடிப்படை மருந்து கூடக் கிடையாதென அரச அதிபர் சாட்சியம் கூறுகின்றார்.நிவாரணங்கள் அனுப்பப்பட்டு விட்டதாக இந்திய அரசாங்கம் பெருமை கொள்கிறது. ஆனாலும் எறிகணைகளையும் விமானக் குண்டு வீச்சுக்களையும் மக்கள் தினமும் தரிசிக்கிறார்கள்.வெள்ள அனர்த்தமும் மக்களை விரட்டுகிறது.

இயற்கையும் மனிதர்களும் சேர்ந்து வழங்கும் கொடூரங்கள், விபரிக்க முடியாத சோகத்தினை அம்மக்கள் மீது திணிக்கிறது.உலக மனித உரிமைக் காவலர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். காந்தி தேசம், பிராந்திய ஆதிக்கக் கனவில் மிதக்கிறது.பிரணாப் முகர்ஜி வருவாரா, மாட்டாரொவென ஆராய்ச்சி செய்கிறார்கள், சில அரசியல் விற்பனர்கள்.அவர் கொழும்பிற்கு வருகை தந்தாலும் பெரிய அதிசயங்கள் எதுவும் வன்னியில் நிகழப் போவதில்லை. இன்றைய போர்ச் சன்னதம் குறையப் போவதில்லை.கிளாலியில் பேரிழப்பைச் சந்தித்தாலும் வெற்றி பெறுவோமென்கிற பேரினவாதச் சிந்தனை உளவியலில் தேக்க நிலை ஏற்படும் வாய்ப்பேயில்லை.இடிபடும் வழிகளைத் தவிர்த்து புதுவழிபுகும் முயற்சிகள் தொடர்கின்றன. பரப்பளவு சுருங்க, இறுக்கநிலை தரும் வீரியம், உடைத்தெறியும் சக்தியை அதிகரிக்குமென்பதே அடிப்படை அறிவியல் உண்மையாகும்.

அதன் எதிர்வினைகளை குஞ்சுப் பரந்தன், புதுமுறிப்பு, அறிவியல் நகர் மற்றும் அண்மைய கிளாலிச் சமர்களில் காணக் கூடியதாகவிருக்கிறது.கிளிநொச்சி நோக்கிய நான்கு முனை படை நகர்வுகளில்எதிர்த்தாக்குதலின் இறுக்க நிலை அதிகரிப்பதால் இரணைமடுவிற்குள் இறங்கும் புதிய பாதையினை இராணுவம் தெரிவு செய்துள்ளது.வல்லரசுகளின் கொழும்புத் தூதரக படைத்துறை அதிகாரிகள், வன்னிக் களமுனைப் பின் தளங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அறிவுரையோடு ஆற்றுப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

எவரை அழித்தொழிக்க இந்த ஒன்றுகூடல்கள் நடைபெறுகிறதென்பதை தாயக, புலம்பெயர் தமிழ் மக்கள் புரிய மாட்டார்களென்று கற்பிதம் கொள்வது தவறு.ஜெயசிக்குறு சமர் காலத்திலும் இவ்வகையான வெளிப்படையான சந்திப்புகளும் இராணுவ மனோ வலிமையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட பரப்புரைகளும் அரங்கேறின.சில வல்லரசு நாடுகளும் இந்தியாவும் இலங்கை அரசுடன் கை கோர்த்து நின்று செயற்படுவதை தமிழ் மக்கள் ஏற்கனவே தெரிந்து புரிந்து வைத்துள்ளார்கள்.வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான்வெளி மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள், குதிருக்குள் ஒளிந்திருந்த அப்பனை வெளிக்காட்டியது.

இராடர்கள் கொடுத்த காந்தி தேசம், ஆட்களையும் அனுப்பியுள்ள செய்தி இங்குதான் அம்பலமாகியது.புலிகளின் பிரதேசத்தில் அகலக்கால் நீட்டுவதும், நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும், எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை, ஜெயசிக்குறு சமரில் கற்றறிந்திருக்கலாமெனத் தனது மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் குறிப்பிட்ட விடயம் தற்போது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.பூர்வீக தேசிய இனத்தின் மக்கள் சக்தியினை ஒடுக்குமுறையாளர்கள், எப்போதும் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்.கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் வெளிப்படுத்தாத அரசியல் நேர்மையை இனியும் சிங்களதேசம் கடைப்பிடிக்குமென எதிர்பார்ப்பது மடமைத்தனமாகும்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டுச் சரணடைந்தால் மட்டுமே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு நிரந்தர தீர்விற்கான அடிப்படையாக முன்வைக்க முடியுமென்று சிங்களதேசம் கூறுவதை இந்தியாவும் ஏற்றுக் கொள்கிறது.அரசியல் நேர்மையற்ற சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகள், தமிழ் மக்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்காதென்பதை பண்டா செல்வா ஒப்பந்தம் முதல் தற்போதைய அர சாங்கத்தால் கிழித்தெறியப்பட்ட ரணில் பிரபா ஒப்பந்தம் வரை உறுதிப்படுத்துகிறது.சமாதானம் பேசிய பிராந்திய நாடுகளெல்லாம், வவுனியா படைத்தளத்தில் இன்று அமைதியைத் தேடுகிறார்களாம்.

படைவலுச் சமநிலை அரசிற்குச் சார்பாக மாறுவது போல் தோற்றமளிக்கையில் பேரினவாதத்தின் போர் வெறிக்குப் பக்கபலமாக நிற்கும் இரட்டை வேடம், வல்லரசுகளின் ஏகாதிபத்தியப் பரிமாணங்களூடாக வெளிப்படுகிறது.சிங்களதேசத்தை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காக போராடும் தமிழினத்தின் முதன்மைச் சக்தியை, எதிரியாக இனங்காட்ட வேண்டிய தேவை இந்தியாவிற்கு உண்டென்பதை புரிதல் வேண்டும்.இந்திய பிராந்திய ஆதிக்க விரிவாக்க சிந்தனையும் பேரினவாத நயவஞ்சக அரசியல் கருத்து நிலையும் விடுதலைப் புலிகளென்கிற பொது எதிரியை மையப்படுத்தி முரண்நிலைத்தளமொன்றில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதனை சற்று விரிவாகப் பார்த்தால் இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையே இராஜதந்திர உறவில் விரிசல் உருவாகாமல் இருப்பதற்கு புலி எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஒற்றுமை காண்கின்றன.விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு இந்தியாவில் ஏற்படாமல் இருப்பதற்கு இந்திய எதிர்ப்புக் குரல் கொழும்பில் எழாமலும் தடுத்திட வேண்டும்.சரத் பொன்சேகாவின் கதைக்கு இந்தியத்தூதரிடம் மன்னிப்புக் கோரிய நிகழ்விலிருந்து இதனைப் புரியலாம்.இந்தியப் பிடியிலிருந்து முழுமையாக வெளியேறி பாகிஸ்தான், சீனாவுடன் பூரண உறவினைப் பேணினால் பாரதத்தின் ஆதரவு தமிழ் மக்கள் பக்கம் திரும்புமென்கிற அச்சமும் அரசாங்கத்திடம் உண்டு.

ஆகவே, இந்தியப் பக்கபலத்துடன் விடுதலைப் புலிகளை அழித்திட வேண்டுமெனச் அரசாங்கம் காட்டும் அவசரப் போக்கு தெளிவாகப் புரியப்படும். களமுனையில் படை தரப்பு உள்வாங்கும் இழப்புகள், இந்திய இலங்கை உறவுச் சமன்பாட்டில், மாறுதல்களை தோற்றுவிப்பதாக உணரப்படுகிறது. விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவிருக்கும் வலிந்த தாக்குதல், உள்களத்திலா அல்லது வெளிக்களத்திலாவென்பதை அனுமானிக்க முடியாதுள்ளது.

இந்நிலையில் மும்பைத் தாக்குதலில் தமது முழுமையான அரசியல் இருப்பிற்கான கவனத்தைத் திருப்பியுள்ள இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள், தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை குறி வைத்தே ஈழப் பிரச்சினையை கையாள்வார்கள்.பொதுத் தேர்தலுக்கு இன்னமும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் அவசரமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு தற்போது இல்லையென்றே கூறலாம். அதுவரை மக்கள் சக்தி அமைதி காக்குமென்று கூற முடியாது.

-சி. இதயச்சந்திரன்-

[நன்றி-வீரகேசரி வாரவெளியீடு ( 21.12.2008)]

Comments