போரின் போக்கை தீர்மானிக்கும் கிளிநொச்சி சமர்

சிறிலங்காப் படைகள் எப்பாடுபட்டாவது கிளிநொச்சியை இந்த ஆண்டுக்குள் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் கடும் முனைப்பாகப் போரிட்டு வருகின்றன. நத்தார் தினத்தை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்யச் சொல்லி கிறிஸ்தவ ஆயர்களிடம் இருந்து வந்த கோரிக்கையையும் நிராகரித்து விட்டு சிறிலங்கா அரசு கடுமையான தாக்குதலை கிளிநொச்சியை நோக்கி தொடுத்து வருகின்றது.

ஏற்கனவே மாவீரர் தினமாகிய நவம்பர் 27க்குள் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவதாக சிறிலங்கா அரசு சபதம் செய்திருந்தது. சிங்கள இனவாத அமைப்புகளும் கிளிநொச்சியை கைப்பற்றிய படையினருக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகளை தயார் செய்து வைத்திருந்தன.

நவம்பர் 26 அன்று சில சிங்கள ஊடகங்கள் கிளிநொச்சிக்குள் சிறிலங்காப் படைகள் நுழைந்து விட்டதாகவும், அடுத்த நாள் அந்த வெற்றிச் செய்தியை அறிவிப்பதற்காக சிறிலங்கா அரசு அதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தன. கிளிநொச்சியை சிறிலங்காப் படையினர் கைப்பற்றி விட்டனர் என்று அப்பொழுது பல சிங்கள மக்கள் நம்பவும் செய்தனர்.

ஆனால் இன்று வரை சிறிலங்காப் படைகளால் கிளிநொச்சியைக் கைப்பற்ற முடியவில்லை. கைப்பற்ற முடியவில்லை என்பதோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. சிறிலங்காப் படைகளின் புதைகுழியாக கிளிநொச்சி மாறி வருவதுதான் சிறிலங்கா அரசை பெரும் சிக்கலுக்குள் தள்ளி விட்டிருக்கின்றது.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் சிறிலங்காப் படையினர் பெரும் ஆளணி வளத்தை இழந்து போயுள்ளனர். வன்னிச் சமரில் காயமடையும் படையினரின் தொகை மிக மிக அதிகமாக இருக்கின்றது. கிளிநொச்சி வரை முன்னகர்வதற்காக சிறிலங்காப் படையினர் கொடுத்த விலை மிகப் பெரியது.

பொதுவாக உலகின் மற்றைய நாடுகளில் நடைபெறும் சண்டைகளில் கொல்லப்படும் படையினரை விட காயமடையும் படையினரின் தொகை மூன்று மடங்குக்கு உள்ளேயே இருக்கும். ஆனால் சிறிலங்காவில் கொல்லப்படும் படையினரை விட காயமடையும் படையினரின் தொகை பத்து மடங்கு அதிகமாக இருக்கின்றது.

சிறிலங்கா அரசு கைப்பற்றிய இடங்களை தக்க வைப்பதற்கும், புதிய இடங்களைக் கைப்பற்றுவதற்கும் தேவையான ஆட்பலம் இல்லாமல் திண்டாடுவது அப்பட்டமாகத் தெரியத் தொடங்கியுள்ளது. வலிந்த சண்டைகளுக்கு அனுபவம் அற்ற புதிய படையினர் களம் இறக்கப்படுகின்றனர். அதுவும் மிகவும் வயது குறைந்த படையினர்களை முன்களத்திற்கு கொண்டு வந்து பலி கொடுக்கின்ற வேலையை சிறிலங்கா அரசு செய்து தொடங்கியிருக்கின்றது.

அத்துடன் சிங்கள பெண் சிப்பாய்களும் களமுனைக்கு அனுப்பப்படுகின்றார்கள். பல ஆண்டுகளாகவே சிறிலங்காப் படையில் பெண்கள் உண்டு. ஆனால் அவர்கள் பெண் புலிகள் போன்று சண்டை அனுபவம் உடையவர்கள் அல்ல. பின்தள உதவிகளையும், பராமரிப்புகளையும், வீதிப் பரிசோதனைகளையும் மேற்கொள்வதே இதுவரை அவர்களின் வேலையாக இருந்து வந்தது. தற்பொழுது ஆட்கள் போதாத காரணத்தினால் அவர்களையும் சிறிலங்கா அரசு போர் முனைக்கு அனுப்புகின்றது.

சிறிலங்கா அரசின் அனுபவமும் ஆற்றலும் மிக்க படையினர் பலர் கடந்து இரண்டு ஆண்டுகளாக நடந்த சண்டைகளில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் களமுனையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். மறுபுறம் விடுதலைப் புலிகள் தமது சிறப்புப் படையணிகளை பலமான முறையில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இந்த முக்கியமான அம்சம் எதிர்கால சண்டைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.

சிறிலங்காப் படையினர் ஆட்பலம் இல்லாத நிலையில் நிற்கின்றனர் என்பது வேறொரு விடயத்திலும் வெளிப்பட்டது. சிறிலங்காப் படையினர் சில வாரங்களிற்கு முன்பு மாங்குளத்தையும், நெடுங்கேணிக்கு அருகில் அமைந்துள்ள கஜபாபுரத்தையும் கைப்பற்றிய பின்பு வன்னியில் தென்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறிவிட்டார்கள். ஒரு பெரும் நிலப்பரப்பில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கிய பின்பும் சிறிலங்காப் படையினர் அப் பகுதிக்குள் இன்று வரை நுழையவில்லை.

தெற்கு வன்னியிலும் பரவி நிலைகொண்டால் மேலும் ஆட்பலத்தை இழக்க வேண்டி ஏற்படும் என்பதனாலேயே சிறிலங்காப் படையினர் அங்கு நுழையாமல் நிற்கின்றனர். கிளிநொச்சியில் அடிவாங்குகின்ற நேரங்களில் மட்டும் அப் பகுதியில் காலாற நடந்து விட்டு, ஏதாவது ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி, அதைக் கைப்பற்றி விட்டதாக சிறிலங்காப் படையினர் அறிக்கை விடுக்கின்றனர்.

கடந்த வாரம் சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியில் கடும் இழப்பை சந்தித்த பிற்பாடு, இரண்டு நாட்கள் கழித்து நெடுங்கேணியை கைப்பற்றியதாக சிறிலங்க அரசு அறிவித்ததும் இந்த வகையானதே.

அதே வேளை சிறிலங்காப் படைகள் தற்பொழுது மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி செல்லும் வீதியில் (ஏ34) ஒலுமடுவைக் கைப்பற்றி மேலும் சில கிலோமீட்டுர்கள் தூரம் முன்னேறியுள்ளனர். அதே போன்று முல்லைத்தீவில் இருந்த சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள முள்ளியவளைக்கு அண்மையாக சிறிலங்காவின் 59வது படையணி முன்னேறியுள்ளது.

கிளிநொச்சியைக் கைப்பற்றும் சண்டைகள் மிகக் கடுமையாக உள்ளதால், சிறிலங்காப் படைகள் ஒட்டுசுட்டானைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கலாம். அல்லது முல்லைத்தீவைக் கைப்பற்றவும் முயலலாம். ஆனால் கிளிநொச்சியைப் போலவே முல்லைத்தீவு சண்டைகளும் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கிளிநொச்சியில் மிகப் பெரிய மண் அணைகளை அமைத்து தற்காப்புச் சண்டைகளை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றார்கள். குஞ்சுப் பரந்தனில் இருந்து இரணைமடுவரை “ட” வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மண் அணைகளை உடைக்க முடியாமல் சிறிலங்காப் படைகள் திணறிக் கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை சிறிலங்காப் படைகள் பலமுனையில் கிளிநொச்சியை நோக்கி நடத்திய நகர்வுகள் அனைத்தும் விடுதலைப் புலிகள் நடத்திய ஆகோரமான பதிலடியால் முறியடிக்கப்பட்டன. கிளாலியில் மேற்கொண்ட முன்னகர்வும் முறியடிக்கப்பட்டது. 200 வரையான படையினர் கொல்லப்பட்டும், 450இற்கும் மேற்பட்ட படையினர் காயங்களுக்கும் உள்ளாகினர்.

50இற்கும் மேற்பட்ட படையினரின் உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. கிளாலியில் ஒரு படையினன் உயிரோடு பிடிக்கப்பட்டான். இந்த வன்னிச் சமரில் இதுவரை சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் உடலங்களைக் காட்சிப்படுத்திய நிலை ஒரு நாளில் தலைகீழாக மாறிப் போய் விட்டது.

சிறிலங்காப் படையினரின் பல முனை நடவடிக்கை முறியடிக்கப்பட்டிருந்தாலும், இரணைமடுவால் முன்னேறிய படையினர் இரண்டு கிலோமீட்டர் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். ஆனால் மூன்று நாட்கள் கழித்து சனிக் கிழமை அன்று விடுதலைப் புலிகள் அப் பகுதியை ஒரு வலிந்த அதிரடித் தாக்குதல் மூலம் மீட்டெடுத்தனர்.

வன்னிச் சமர் ஒரு புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியருப்பதை இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் சிறிலங்காப் படையினர் தாக்குதலை ஆரம்பித்த பின்பு அவர்கள் பல இடங்களை வல்வளைப்புச் செய்துள்ளனர். ஆனால் எங்கும் அவர்கள் கிளிநொச்சியைப் போன்று ஒரு எதிர்த் தாக்குதலை சந்திக்கவில்லை. அத்துடன் இழந்த பகுதிகளை மீட்டெடுக்கும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியதாகவும் செய்திகள் இல்லை.

ஆனால் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகக் கடுமையான முறியடிப்புத் தாக்குதலை நடத்துகின்றனர். இழந்த முன்னரண்களை பதில் தாக்குதல் நடத்தி மீட்டெடுக்கின்றனர். இந்த வலிந்த தாக்குதல்களுக்கு இதுவரை பயன்படுத்தாத புதிய படையணிகளையும் விடுதலைப் புலிகள் களமிறக்குகின்றனர்.

இரணைமடுவில் வலிந்த தாக்குதலில் ஈடுபட்ட போராளிகள் தாம் சண்டைக்காக நீண்ட நாட்கள் காத்திருந்ததாக கூறுகின்றார்கள். சண்டைக்கான உத்தரவு வந்ததும் மிகவும் உற்சாகத்துடன் சண்டை செய்ததாகவும், ஆரம்பத்தில் சிறிலங்காப் படைகளின் எதிர்ப்பு கடுமையாக இருந்ததாகவும், ஆயினும் கடும் தாக்குதலை நடத்தி அவர்களை அடித்து விரட்டியாதாகவும் கூறுகின்றார்கள்.

மிகக் கடுமையான சண்டைகளை செய்யக் கூடிய அனுபவம் வாய்ந்த சிறப்பு அணிகளை விடுதலைப் புலிகள் ஏதோ ஒரு திட்டத்திற்காக பாதுகாத்து வருகின்றார்கள் என்பது அந்தப் போராளிகளின் கூற்றில் இருந்து புலப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் கடுமையான முறியடிப்புத் தாக்குதலை எதிர்கொண்டாலும், சிறிலங்காப் படைகள் இந்த வாரம் திங்கட் கிழமை மீண்டும் ஒரு பலமுறை நகர்வை மேற்கொண்டன. இதிலும் சிறிலங்காப் படைகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுது. பல முனைகளில் சிறிலங்காப் படைகளின் முன்னகர்வு முறியடிக்கப்பட்டது. ஆனால் குஞ்சுப்பரந்தனில் சிறிலங்காப் படையினர் ஒரு குறிப்பிட்டளவு தூரம் முன்னேறியுள்ளனர். அப் பகுதியில் தொடர்ந்தும் சண்டைகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

கிளிநொச்சியை சிறிலங்காப் படைகளால் கைப்பற்ற முடிகிறதோ இல்லையோ, அங்கே தற்பொழுது நடந்து வருகின்ற சமரில் சிறிலங்காப் படையணிகள் சந்திக்கின்ற சேதம் எதிர்காலத்தில் சிறிலங்காப் படைகளின் ஆற்றலில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவே போரின் போக்கையும் தீர்மானிக்கும்.

-வி.சபேசன் (25.12.08)

வெப்ஈழம்

Comments