ஒரு சமூகப்பொருளாதார அரசியல் இராணுவ ரீதியிலான கண்ணோட்டம் இது. 2008 ஆம் ஆண்டை மகிந்த ராஜபக்ச ஒரு யுத்த ஆண்டாக பிரகடனம் செய்தார். இதற்காக யுத்த ஆண்டு செலவாக பதினாறாயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் உண்மையில் 2008 யுத்த செலவாக இருபதுநாயிரம் கோடி ரூபா செலவிடப்பட்டதாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.1977ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசாங்கம் பதவிக்கு வந்தது. அவர் 1978ம் ஆண்டு இலங்கையை இரண்டாவது குடியரசாக பிரகடனப்படுத்தியதோடு தன்னை ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் முன் நிலைப்படுத்திக்கொண்டார். இதன் பின்னர் சந்திரிக்கா அம்மையாருடைய காலத்திலும் மகிந்தராஜபக்ச காலத்திலும் பாதுகாப்புக்கென வரவு செலவுத்திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்பட்டே வந்தன இன்று இத் தொகையானது ஐந்து இலக்கங்களைக்கொண்ட கோடிக்கணக்கான ரூபாய்களாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தில் இனப்படுகொலை யானது பல்வேறு பரிமாணங்களிற்கூடாக விசாலிப்புப்பெற்றது. விமானக்குண்டுகளை வீசி பெருமளவில் தமிழ்பொதுமக்களை படுகொலை செய்யும் நிகழ்வு 2008ம் ஆண்டுதான் நிகழ்ந்தது. இதுவரை ஆறாயிரம் தடவைகளுக்குமேல் தமது விமானங்கள் வன்னிப்பெருநிலப்பரப்பின் மீது குண்டுகளை வீசியதாக பாதுகாப்புச் செயலளார் கோத்தபாய ராஜபக்ச பெருமிதப்பட்டுக் கொண்டார்.
இந்தக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் பற்றி அவர் கிஞ்சித்தேனும் அவர் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. எறிகணைவீச்சு, காணமற்போதல, கடத்தல், கப்பம்பெறுதல் என சட்டவிரோதமான செயல்பாடுகள் மிக உயர்மட்டத்தின் ஆசீர்வாதத்தோடு நடைபெற்றது. ஒட்டுக் குழுக்களுக்கூடாகவும் இராணுவத்தின் ஊடாகவும் இந்த சட்டவிரோதமான செயற்பாடுகள் விசாலிப்புப்பெற்றன. இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குற்றத்தீர்பில் இருந்து (Impunity) விதிவிலக்களிக்கப்படார்கள்.
2008 என்பது இராணுவ ரீதியாக தமிழர் தாயகத்தின் நிலப்பரப்புக்களை சிங்களப் பேரினவாதம் ஆக்கிரமித்து நின்ற ஆண்டாகும். இந்த ஆக்கிரமிப்புக்காரணமாக இந்தஆண்டு தொடக்கத்திலிருந்து மக்கள் படிப்படியாக இடம்பெயரத் தொடங்கினார்கள். இலங்கை அரசாங்கம் அவர்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கு வருமாறு அழைப்புகளை விடுத்தபோதும் அவற்றை தமிழ்மக்கள் முற்றாகவே நிராகரித்தார்கள் வவுனியாவில் ஏற்படுத்தப்பட்ட நலன்புரி நிலையங்கள் யாவும் திறந்தவெளி சிறைச்சாலைகளாக தமிழ்மக்களால் பார்க்கப்பட்டன. இதனால் பேரினவாதத்தால் மடு பிரதேசம் ஆக்கிரமிக்கப் பட்டபோது மன்னார் மாவட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவு மேற்குப் பிரதேசங்களிற்கு இடம்பெயர்ந்தார்கள் அப்பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டபோது மக்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். மக்கள் எப்பொழுதுமே 2008ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலேயே தமது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டார்கள். இதன்மூலம் தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஒருசெய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். தாம் எந்தவிதமான இராணுவ ஆக்கிரமிப்பிற்கோ அடிபணிந்துசெல்ல தயாராக இல்லை. தமது சுயாதீனத்தை பேணிப் பாதுகாக்கவே தாம் எப்போதும் உறுதியோடு இருப்பதாக சர்வதேச சமூகத்திற்கு வெளியரங்கப்படுத்தியிருக்கிறார்கள்.
இதன்மூலம் மகிந்தராஜபக்ச அரசாங்கம் கிழக்கின் உதயம் என்றபெயரில் தென்தமிழீழத்தை ஆக்கிரமிப்புச் செய்ததுபோல் வடக்கின் வசந்தம் என்றபெயரில் வடதமிழீழத்தை ஆக்கிரமிப்புச்செய்ய முடியாமல்போய்விட்டது. வன்னிதளம் என்பது பல நூற்றாண்டு காலமாக எத்தகைய ஆட்சியாளர்களிற்கும் அடிபணியாத ஒரு மண்ணாகவே இருந்து வந்திருக்கிறது. ஒல்லாந்தர் காலத்தில் கைலவன்னியனும், இதன்பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பண்டாரவன்னியனும் அந்நிய ஆதிக்கசக்திகளுக்கு எப்பொழுதுமே சிம்மசொப்பனமாகவே இருந்துவந்தார்கள். கைலவன்னியனை ஒரு காக்கைவன்னியனும் பண்டாரவன்னியை ஒரு கதிர்காமசேகர முதலியும் காட்டிக்கொடுத்த கயமத்தனம் காரணமாகவே வன்னி அரசுகள் வீழ்ச்சியடைந்தன.
ஆனால் வன்னிமக்கள் ஒல்லாந்தரையோ ஆங்கிலேயரையோ ஏற்றுக்கொள்ளவில்லை "யானையை அடக்கிய அரியாத்தையின் கதை" குருவிநாச்சியாரின் கதை, அன்னிய ஏகாதிபத்திய சகத்திகளை எதிர்த்து வன்னிமக்கள் நடாத்திய வீரம்செறிந்த போர் முறைகளை வெளிக்கொணர்கின்றன. இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை 1987ம் ஆண்டு வல்வளைப்புச் செய்தபோதும் தமிழ்த்தேசியத் தலைமையை அழித்துவிடுவதற்கு பல்வேறு குறியீட்டுப் பெயர்களில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் வன்னி மண் தமிழர் தேசியப் போராட்டத்தையும் தமிழ்த்தேசியத்தலைமையையும் பாதுகாத்தமை இன்று வரலாற்று பிரசித்தமாயிற்று. 2007ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் திகதி எமது தேசியத்தலைவர்ஆற்றிய மாவீரர் நாள் உரையில் மிகச் சுருக்கமாகக் கூறியவாசகம் தற்போதைய இராணுவ சூழ்நிலையை தமிழ்த்தேசியத்தலைமை எவ்வாறு நோக்குகின்றது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைகிறது. இன்றைய சூழ்நிலை எமக்குப் புதியவையுமல்ல எமக்கு அவை பெரியவையுமல்ல என்ற அவரது வாசகம் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உரையில் அவர்சொல்லாமல் சொன்ன செய்திகள் இனி அடுத்துவரும் காலங்களில் போராட்டத்தின் போக்கை எதிர்வுகூறுவதாக அமைந்துள்ளன.
இலங்கை சமூகங்களின் உறவுகள்
2008 இல் இடம்பெற்ற சில மாகாணசபைத் தேர்தல்களின் பெருமளவு மோசடிகள் ஆள்மாறாட்டங்கள் அடாவடித்தனங்கள் என்பன இடம்பெற்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மாகாணசபைத்தேர்தலில் ஒரு ஒட்டுக்குழு ஒன்றை வெல்லவைப்பதற்காக அங்குள்ள வாக்காளர்களது அடிப்படை மனிதஉரிமைகள் முற்றாகவே பறிக்கப்பட்டன. கொலைகள், கொள்ளைகள், அச்சுறுத்தல்கள், கடத்தல்கள், காணமல்போதல், பாலியல் வல்லுறவுகள் இப்பொழுது அங்கு சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றன. கிழக்கின் அபிவிருத்தி என்ற மகுடவாசகம் இன்று வெறும் வெற்றுக் கோசமாகிப்போய்விட்டது. வடமத்தியமாகாண சபைத்தேர்தலிலும் சப்பிரகமுவ மாகாணசபைத்தேர்தலிலும் இடம்பெற்ற மோசடிகள் ஜனநாயக விழுமியங்களை கேலிக்குரியதாக்கிவிட்டுள்ளன. இந்த இரண்டு மாகாணத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றபோதிலும் சிங்கள மக்கள் அதற்கு ஆதரவளித்தபோதிலும் யுத்த முனைப்புக்கள் தீவிரம் பெற்றிருக்கின்றன. சிங்களப் பேரினவாத அரசு இனிமேல் இலங்கை வாழ் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன ஒற்றுமையென்பது எந்தவகையிலும் ஏற்படாத வண்ணம் பிளவுகளை 2008ம் ஆண்டு ஏற்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர் சுனந்த தேசபிரிய செனநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது பொருள் பதிந்த வாசகமாகும். சிங்கள மக்கள் மத்தியில் வடக்கே இறக்கும் சிங்கள சிப்பாய்களது அகாலமரணங்கள் தொடர்பாக 2008 இறுதிக்காலப்பகுதியில்தான் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சண்டையானது 17-12-2008 இராணுவத்தளபதி தனது பிறந்தநாள் பரிசாக கிளிநொச்சியை வல்வளைப்புச் செய்து முற்றுமுழுதாக கைப்பற்றிவிடும்நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையில் மகிந்தர அரசிற்கு ஏற்பட்ட பேரிழப்பும் யாரொருவருடைய பிறந்ததினக்கொண்டாட்டத்திற்காக தமது பிள்ளைகள் கொல்லப்படுகின்ற கொடூரமான இராணுவ ஏற்பாடுகளும் சிங்கள மக்கள்மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த தினத்தை சண்டே ரைம்ஸ் பத்திரிகை கறுப்புச்செவ்வாய் (Black Tuesday)என வர்ணித்திருக்கின்றது. லக்பிம ஆங்கில ஏடு இதே தினத்தை இரத்தம் தோய்ந்த செவ்வாய் (Bloody Tuesday) என வர்ணித்திருக்கின்றது. இந்த இரு பத்திரிகைகளும் கொழும்பிலிருந்து வெளிவருகின்றவையாகும்.
பொருளாதார நிலைமை
2008ம் ஆண்டு இலங்கைத்தீவின் பொருளாதார நிலைமையானது மிக மோசமான கட்டத்தை அடைந்தது. வாழ்க்கைச் செலவு உயர்வு, வாழ்க்கைத்தர வீழ்ச்சி, பங்குச் சந்தையின் வீழ்ச்சி, பணவீக்கம், பொருட்கள்விலையேற்றம் காரணமாக சாதாரண பொதுமக்களால் தமது அன்றாட சீவனோபாயத்தை கொண்டுநடத்தமுடியாது அல்லல்படும் அவலநிலைமை என்பன ஏற்பட்டன. தென்னிலங்கையில் சிங்களபொதுமக்களுடைய நுகர்வுக்குரிய பொருட்களைக் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட இடர்பாடுகள் மகிந்த ராஜபக்சவினுடைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையை படிப்படியாக வளர்க்கத் தொடங்கியுள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணை ஒருபீப்பாவின் விலை 144 டொலராக அதிகரித்தபோது மகிந்தராஜபக்ச அரசாங்கம் எரிபொருளின்விலையை பெருமளவில் ஏற்றியது. ஆனால் அதன்விலை 2008 இறுதிக்காலப்பகுதியில் 44 அமெரிக்கடொலராக குறைந்தபோதும் எரிபொருள் விலையை அது குறைக்கமறுத்தது. இந்த மறுப்பிற்குக் காரணம் போருக்கான செலவீனம் அதிகரித்திருப்பதாக மகிந்த அரசால் சுட்டிக்காட்டப்பட்டது. இறுதியில் உயர்நீதிமன்றம் தலையிட்டு பெற்றோலின் விற்பனை விலையாக 100 ரூபாவை லீற்றர் ஒன்றிற்கு நிர்ணயம் செய்துள்ளது. அதை அரசாங்கம் ஏற்கமறுக்கிறது. இங்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் சுயாதீன நீதித்துறைக்குமிடையில் முரண்பாடு எழுந்துள்ளது.
இது ஜனநாயக விழுமியங்களை தகர்த்தெறிந்து மகிந்த அரசு சர்வாதிகாரப்போக்கில் செல்வதற்கு முதல் காலடியை எடுத்துவைத்துவிட்டது. என்றே கணிப்பீடுசெய்யப்படுகின்றது. சட்டவாட்சி தத்துவம் புறக்கணிக்கப்பட்டு சட்ட தத்துவங்கள் உதாசீனப்படுத்தப்பட்டு உயர்நீதிமன்றம் ஒருவகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடைய எதிர்வினைகளை 2009 இல் நாம் நேரடியாக காணக்கூடியதாகவுள்ளது. 2008ம் ஆண்டு சனவரி மாதம் தொடக்கம் ஒக்ரோபர் மாதம்வரை ஒவ்வொருமாதமும் அவசரகால சட்ட நீடிப்பின்போது இலங்கையின் பிரதமமந்திரி அவசரகாலச்சட்ட நீடிப்புக்கான காரணங்களை பாராளுமன்றத்தில் எடுத்துச்சொல்லும்போது ஒவ்வொரு மாதமும் படையினருடைய உயிர் இழப்புகளையும் காயப்பட்ட படையினரின் எண்ணிக்கையும் சுட்டிக்காட்டி அவசரகாலச்சட்டத்தை நீடிக்க பாராளுமன்றம் அங்கீகாரம் தரவேண்டுமென்று கேட்பது ஒரு மரபாக இருந்துவருகிறது.
ஆனால் ஒக்ரோபர் மாதக்கடைசியில் இனிமேல் படையினருடைய இழப்புக்களை வெளியிடுவதில்லை என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய படையினரது இழப்புக்கள் இப்போது வெளிவருவதில்லை. ஆனாலும் கூட இராணுவ உயர்அதிகாரிகள் சிலர் எதிர்க்கட்சிகளோடு கொண்டிருக்கின்ற தொடர்புகள் காரணமாக வன்னியில் மரணிக்கும் சிங்களச் சிப்பாய்களது எண்ணிக்கை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு எப்படியோ கிடைத்துவிடுகிறது. இதன்விளைவாக அவை கொஞ்சம் கொஞ்சமாக கசியத்தொடங்குகின்ற பொழுது அவற்றை சில சுயாதீன ஊடகங்கள் வெளிப்படுத்திவிடுகின்றன. மங்கள சமரவீராவின் டிபென்ஸ் வோச், கொழும்புப்பேஜ் போன்ற சுயாதீன இணையத்தளங்களும் சண்டே ரைம்ஸ், சண்டே லீடர் போன்ற அச்சு உடகங்களும் இவற்றை வெளிக்கொணர்ந்து இருக்கின்றன. கொழும்பில் இயங்கிவரும் இலத்திரனியல் ஊடகங்கள் தனியார் வானொலிகள் மீதான அளவுக்குமிஞ்சிய அழுத்தங்கள் காரணமாக அவை பெரும்பாலும் அடக்கிவாசிக்கின்றன. ஆனால் வன்னியில் இயங்கிவரும் சில ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை வைத்து சர்வதேச ஊடகங்கள் உண்மைத்தகவல்களை வெளிஉலகிற்கு துலாம்பரப்படுத்திவந்திருக்கின்றன.
இதனால் 2008 ம் ஆண்டு மகிந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட ஊடகங்கள் மீதான மிகப்பெரிய அழுத்தங்கள் கொலை அச்சுறுத்தல்கள் என்பன அரசிற்கு பாதகமாகவே அமைந்தன.
சமாதானம் நோக்கிய அரசியல் நகர்வுகள்
2008 இல் ஜனவரி மாதம் 2ம் திகதி இலங்கை அரசாங்கம் தாம் விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக ஒருதலைப்பட்சமாக ஒரு முடிவை அறிவித்தது. ஆனால் விடுதலைப்புலிகள் தமது அரசியல்துறைப்பொறுப்பாளர் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு விடுத்த அறிக்கையில் தாம் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகப்போவதில்லை எனவும் அதனைத்தொடர்ந்து கடைப்பிடிக்கப்போவதாகவும் மேலும் நோர்வேயின் சமாதான முயற்சிகளில் தாம் பூரணமான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரித்தார்கள். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இனிமேல் போர்நிறுத்தம் எதுவும் இல்லை என்றும் நோர்வேயின் சமாதான முயற்சிகள் கைவிடப்பட்டதாகவும் அறிவித்தார்கள் விடுதலைப்புலிகளின் இராஜதந்திர ரீதியிலான காய்நகர்த்தல் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான சொரூபத்தை சர்வதேசத்தின் முன்னால் வெளிச்சம்போட்டுக்காட்டியது.
விடுதலைப்புலிகளோடு பேசுவதில்லை என்ற மகிந்த அரசின்முடிவு உள்ளுர் யதார்த்தத்தை புறந்தள்ளியது. நோர்வேயின் சமாதான முயற்சிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற மகிந்த அரசின் முயற்சி சர்வதேச யதார்த்தத்தை ஒதுக்கித்தள்ளியது இலங்கையினுடைய இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஒன்றுதான் ஒரே வழி என மகிந்த அரசு அறைகூவல் விடுத்தது. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியையும் சம்பிக்க ரணவக்க அங்கம்வகிக்கும் பெருமளவு பௌத்தகுருமார்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஜாதிகஹல உறுமய போன்ற பேரினவாத கட்சிகளையும் திருப்திப்படுத்துவதன் மூலம் தனது அரசியல் இருப்பையும் ஆட்சி ஆதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற மகிந்தராஜபக்ச கொம்பனியினது எதிர்பார்க்கைகள் 2008 இறுதிக்காலத்தில் விடுதலைப் புலிகளுடைய தொடர்ச்சியான உறுதியான தற்காப்பு தாக்குதல்கள் மூலம் தவிடு பொடியாகிப் போய்விட்டன.
இதனால் மகிந்த அரசு தமதுஇராணுவத்தை விடுதலைப்புலிகள் தாக்கினால் தாம் விடுதலைப்புலிகளை தடைசெய்துவிடப்போவதாக அறிவித்துள்ளது. இத்தகைய தடைகள் கடந்த காலங்களிலும் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் அரசாலும் பிரமதாசவின் அரசாலும் சந்திரிக்காவின் அரசாலும் போடப்பட்டன அவை எவையுமே விடுதலைப்புலிகளினுடைய இலட்சிய வேட்கையினையோ இலக்குநோக்கிய பயணத்தையும் பாதித்துவிடவில்லை மாறாக தமிழர் தேசிய விடுதலைப்போராட்டம் கூர்மையடைந்து முனைப்படைந்து வீச்சுப்பெற்றது. இதனால் விடுதலைப்புலிகள் இந்தத் தடைபற்றி அறிவிப்பை கிஞ்சித்தேனும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் மகிந்தராஜபக்ச பேரினவாதிகளைச் சந்தித்துவிட்டு 2009 ம் ஆண்டை தரைப்படைகளின் ஆண்டாகப் பிரகடனப் படுத்தியிருக்கின்றார்.
இதுவே அவர் 2008 மார்கழி மாதம் 25ம் திகதி விடுத்த நத்தார் தினச்செய்தியாகும். இந்த நத்தார்தினத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது கடற்படை, விமானப்படை, பொலிஸ் சேவைகள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் தம்மை மகிந்தஅரசு அலட்சியப்படுத்திவிட்டதாக கருதத்தொடங்கிவிட்டார்கள். இதன்விளைவுகள் 2009 ம் ஆண்டில் மேலும் சிக்கலடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை 2009 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் தரைப்படைக்கென எழுபது பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 2008 முப்பத்தாறு பில்லியன் ஒதுக்கப்பட்டது. இப்போது தரைப்படைக்கு இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு 2009ம் ஆண்டை தரைப்படையினரின் வெற்றிவிழா ஆண்டாக மகிந்த பிரகடனப்படுத்தியிருக்கின்றார். இது சாத்தியப்படுமா என்பது இன்று பெரிதாக எழுந்துள்ள ஒரு கேள்விக்குறியாகும். எத்தகைய மாற்றங்களையும் படையினரால் கொண்டுவரமுடியாதென்பது களயதார்த்தமாக உள்ளது இதேவேளையில் விடுதலைப்புலிகள் யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கும் சக்திகளாக பலம்பெற்று நிற்பதே களயதார்த்தமாகும்.
-பொன்பூலோகசிங்கம் -
Comments