கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்"; வன்னி மக்களைச் சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்: 60 வரையானோர் பலி

300 தமிழர் பலி; பலநூறு பேர் படுகாயம்; கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்": வன்னி மக்களை சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்


முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 60 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு - நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு லட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 நிமிடம் முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் 60-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் "கியூடெக்" நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் வரை கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலனோர் குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என "புதினம்" செய்தியாளர் சம்பவ இடத்தில் இருந்து தெரிவிக்கின்றார்.

இதேநேரம், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்தக் கண்மூடித்தனமான இனக்கொலைத் தாக்குதலில் 100 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என "தமிழ்நெட்" இணையத்தளம் வன்னியில் இருக்கும் தனது செய்தியாளரை மேற்கோள் காட்டி அச்சம் தெரிவித்திருக்கின்றது.

ஆனாலும் - சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் - மிகக் கொடுரமாக பொதுமக்களை நேக்கி அதிகித்து வருவதால் - இந்த எண்ணிக்கையை தன்னால் சரியான முறையில் உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், கொல்லப்பட்டவர்களினது எண்ணிக்கை 60-க்கும் அதிகம் எனவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 200-ற்கும் அதிகம் என்பதையும் அவர் உறுதிப்படுத்துகின்றார்.

பாதுகாப்பு (கொலை) வலயம் பகுதி




Comments