விசுவமடுப் பகுதி மீது மூன்றாவது நாளாக தீவிரமான எறிகணைத் தாக்குதல் - ஏழு பேர் படுகாயம்

விசுவமடுவையும் அதனையண்டிய கிராமங்களையும் குறிவைத்து சிறிலங்காப் படையினர் இன்று காலை முதல் தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

எறிகணைகள் சுண்டிக்குளம் சந்தி, அதிசயவிநாயகர் கோவிலடி, உழவனூர், பிரமந்தனாறு, கல்லாறு, தொட்டியடிப் பகுதிகளில் அடுத்தடுத்து வீழ்ந்து வெடிக்கின்றன. இத் தாக்குதல்களில் காயமடைந்த ஏழுபேர் விசுவமடுவில் இயங்கும் கிளிநொச்சி பொதுமருத்துவமனைக்கு நண்பகல்வரை எடுத்துவரப்பட்டுள்ளனர்.

இரத்தினம் பாக்கியம் (37) சுண்டிக்குளம் சந்தி, கிருஸ்ணமூர்த்தி நிதர்சன் (19) அதிசயவிநாயகர் கோவிலடி, இராமசாமி குருசாமி (75) உழவனூர் ஆகியோரின் பெயர்விபரங்கள் கிடைத்துள்ளன.

இவர்களைவிட 35 வயது மதிக்கத்தக்க தாயும் அவரது 8வயது மதிக்கத்தக்க பெண் மகளும் மேலும் ஒரு சிறுமியும் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 18வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார். மக்கள் நிரந்தரமாகவும் இடம்பெயர்ந்தும் பெருமளவில் வசிக்கும் இப்பகுதிகளில் எறிகணைகள் வீழ்வதால் மக்கள் மிகுந்த பதற்றத்திற்கும் பீதிக்கும் ஆளாகி கையிலகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


Comments