ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா![ராஜபக்சே ]அம்மையார்.


ஈழ தேசம் என்பது இன்று இல்லையாம் அதனால் ஈழத் தமிழர் என்ற இனமும் இல்லையாம். தமிழச்சியே அல்லாத இந்த அழகு சுந்தரிக்கு இப்படி ஒரு அதிசய சிந்தனை எழுவதில் எவருக்கும் வியப்பு ஏற்பட நியாயம் இருக்காது.

வெள்ளிப் பணத்துக்கு வெள்ளித் திரையில் ஆட்டம் போட்ட அம்மணிக்கு பூர்வீகம் தமிழ் நாடு அல்ல. அதனால் அவர் தமிழச்சியும் அல்ல.

அதனால் தமிழர் இனம் பற்றியும் தமிழர் நாடு பற்றியும் அவருக்கு பட்டறிவு கிடையாது. அவரது படிப்பறிவும் நாடுகள், இனம் அல்லது வரலாறு பற்றியதாக இருக்கும் வாய்ப்பே நிச்சயமாக இல்லை.


அதுவல்ல, எமது பிரச்சினை. இங்கு ஈழம், ஈழத் தமிழர் பற்றிய அவரது பொன் மொழிகள் எமது தாய் மண் மற்றும் தமிழ் இனத்தின் விடுதலை பற்றி அவதூறாய் இருப்பதே எமது ஆதங்கமாய் இருக்கிறது.

எதற்கும் முதலில் அவர் பலமுறை ஆட்சி நடத்திய தமிழ் நாடும், தமிழ் மக்களும் 1967 க்கு முன்னர் மதராஸ{ம் மதராஸிகளும் என வழங்கி வந்த வரலாறு தெரியாமல் இருக்கிறதும் ஒருவேளை அவர் படித்த ஆங்கிலக் கான்வென்டுகளில் அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்படாத காரணமாகவும் இருக்கலாம்.

அவருடன் பதவிகள் வகித்த பேர்வழிகளும் அவை பற்றி அவர் மீதுள்ள பயம் காரணமாகச் சொல்லாமலும் விட்டிருக்கலாம். தன் நாட்டு நிலவரமே சரியாகத் தெரியாத நிலையில் அடுத்த நாட்டையும் மக்களையும் பற்றி அவர் பேசியது யாருக்காகவோ யாரேர கொடுத்த பணத்துக்காக அல்லாது அவரது அறிவு சம்பந்தப்பட்டதாக இல்லை என்பதே உண்மை.

இலங்கையில் தமிழர் என்ற இனத்தையே இல்லாமல் செய்வதே 1948 முதல் இன மேலாதிக்க சிங்கள அரசுகளின் செயற்பாடாக இருந்து வந்துள்ளது. தமிழ் இனத்தை இந்தியத் தமிழர் என்றும் இஸ்லாமியர் என்றும் பிரித்து வகைப்படுத்திச் சட்டங்களை இயற்றி இந்தியத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்து இந்தியாவுக்குக் கப்பல் ஏற்றி, தனிச் சிங்களச் சட்டம், நாட்டின் அரச மதம் புத்த மதம் என்பவற்றால் இலங்கை என்பதே இல்லாமல் செய்து ஸ்ரீ லங்கா என நாட்டின் பெயரை மாற்றிக் கொண்ட பின்னர்தான், தமிழினம் தனது பூர்வீக தேசத்தின் பெயரை மாற்றிக் கொண்டது.

ஈழம், ஈழத் தமிழர் பெயரால் 1952 இல் முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி. சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்று தனிக் கட்சி அமைத்துத் தனித் தமிழீழம் அமைக்கப் போராடியதும் அம்மையார் அறியாத விடயங்களே. அம்மையார் எப்போதும் உண்மைகள் பற்றிக் கவலைப்படுபவர் அல்ல. அவருக்கு கிடைக்கும் பணப் பெட்டியைப் பொறுத்தே அவரது அரசியலும் அமைவது உலகறிந்த விடையம்.

இத்தனை வருடங்களாகத் தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் எனப் ஒப்பாரி வைத்துத் தனக்கு அதிசிறப்புக் காவல் படை வேண்டும் எனத் தனது அரசியலைச் செய்து வந்தார். ராஜீவ் காந்தியின் கொலையைத் தொடர்ந்து தனது அரசியல் துருப்புச் சீட்டாக இந்தத் தந்திரத்தைப் பயன்படுத்தி வருகிறார். ஆனால், பாவம் புலிகள் அவரை ஒரு பொருட்டாக எடுக்கவே இல்லை.

ராஜீவ் காந்தியின் கொலையால் பல வழியிலும் நன்மை பெற்றவர் ஜெயலலிதா என்பதை உலகமே அறியும். அக்கொலை மீதான பழியில் அவருக்கும் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் பல ஆய்வாளர்களிடமும் உள்ளது. ஒட்டு மொத்தமாக எதுவித சந்தேகமும் தமது பக்கம் வந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே இவரும் சுப்பிரமணிய சுவாமியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர்.


இலங்கை அரசு தனது தமிழின ஒழிப்புப் போருக்குப் பணத்துக்காக விலை போகும் இவரும் இவர் போன்ற காங்கிரஸ் கட்சியிரையும் பயன்படுத்தி தமிழக தமிழினத்தையும் அவர்களின் உணர்வுகளையும் சிதறிடித்து வருகிறது.

இதில் காங்கிரஸ் கட்சியின் இராமநாதபுர சட்ட சபை உறுப்பினர் அசன் அலிக்கும் இலங்கை அதிபர் மகிந்தருக்கும் இடையே உள்ள உறவு காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு சிங்களத்தின் கைக்கூலிகளாக மாறி விட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.

இவர் போன்றே இந்துப் பத்திரிகை அதிபர் ராம் பலமுறை இலங்கை அரசின் விருதுகளையும் விருந்துகளையும் அனுபவித்து வருவது அவரது பத்திரிகையின் நடுநிலைமை எத்தகையது எனக் காட்டுகிறது. மேலும் சென்னையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் தினம் இந்தியப் பத்திரிகையாளர்கள், அரசியல் மற்றும் தமிழ்ப் பிரமுகர்கள் எனப் பலருக்கும் விருந்து கொடுத்து மகிழ்வித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் ஈழத் தமிழ் இனத்துக்கும் தமிழ் ஈழக் கோரிக்கைக்கும் எதிரான பிரச்சாரங்கள் எவ்வாறு செயற்படுத்தப் படுகின்றன என்பது தெளிவாகிறது.

இலங்கையில் இராணுவத்தைக் கொண்டு தமிழினத்தை அழிக்கும் இலங்கை அரசு, இந்தியாவில் இத்தகைய கூலிகளைக் கொண்டே தமிழின உணர்வைத் தமிழகத்தில் மழுங்கடித்து வருகிறது. சென்ற வாரம் வரை ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்ளாதவர் திருமங்கலம் தொகுதியில் வாங்கிய அடியால் இப்பொழுது ஈழத் தமிழர் என்பது கிடையாது இலங்கைத் தமிழர் என்பதுதான் சரி எனப் புது விளக்கம் தருகிறார். எத்தனை விளக்கம் அவர் கொடுத்தாலும் இலங்கைத் தமிழர் சார்பாக தி.மு.க. நடந்து கொண்டது எனக் கூறிக் கலைஞரின் ஆட்சியைக் கலைக்கச் செய்தவரும் இவரே. எனவே இலங்கைத் தமிழரைப் பற்றிய கவலை இவருக்குச் சுட்டுப் போட்டாலும் வராது என்பதுதான் உண்மை.

வை.கோ., பழ. நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் போன்ற தமிழகத் தமிழ் உணர்வாளர்களை வருடக்கணக்கில் பொடாச் சட்டத்தின் கீழ் சிறையில் வாட்டி வதைத்த பெருமாட்டி இவர். அண்மையில் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய திரைப்பட இயக்குநர் சீமான், அமீர் போன்றவர்களை சிறையில் போடுமாறு கலைஞரை நிர்பந்தித்தவரும் இவரே. இன்றும் சீமானை மீண்டும் சிறைக்குள் போட வைத்ததில் இவருக்கும் பங்கு உள்ளது. இத்தனை பெருமை பெற்ற அம்மணிக்கு ஈழம் பற்றியும் ஈழத் தமிழர் பற்றியும் பேச என்ன யோக்கியதை இருக்கிறது.

1960 களில் இலங்கை அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய தி.மு.க.வையும் கலைஞரையும் மிரட்டி மிரட்டிப் பாவப் பொதி சுமக்கும் கழுதையின் நிலைக்கு மாற்றியமைக்கு சிங்களத்தின் பணம் பட்டம் வாங்கிக் கூலிக்கு மாரடிக்கும் இவரும் இவரைப் போன்ற தமிழ்த் துரோகிகளுமே காரணம். தெற்கிலே மட்டும் அல்ல வடக்கிலும் இலங்கை அரசின் தமிழினத்துக்கு எதிராகக் கொள்கை வகுப்பு மற்றும் உளவுப் பிரிவும் மிகக் கடுமையாக நடந்து கொள்வதற்கு இத்தகைய இலங்கை அரசின் இலஞ்சப் பணமும் பிரச்சாரங்களுமே காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.

தமிழக அரசியலில் ஒரு விபத்துப் போல வந்தவர்தான் ஜெயலலிதா. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்ததும் அடாவடித்தனம் செய்தும் அனுதாப அலையிலும் ஆட்சியைப் பிடித்த போதெல்லாம் தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட கனவாகவே அவர் காட்சி அளித்து வந்தார். அவரது அரசியல் அணுகுமுறை அவரோடு தேர்தல் கூட்டு வைக்கும் எவருக்கும் மதிப்போ மரியாதையோ கொடுக்கும் அளவுக்கு நாகரிகம் உள்ளதும் அல்ல. இன்று உள்ள நிலையில் ம.தி.மு.க. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த அளவுக்குத் தமிழகத் தமிழ் மக்களின் வாக்குகளைக் குவிக்கும் எனச் சொல்ல முடியாது.

ஈழத் தமிழர் பற்றிய உணர்வு அலைகள் உச்ச கதியில் உள்ள இக்காலத்தில் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருந்தும் ஜெயலலிதாவின் கட்சி திருமங்கலம் தொகுதியில் தோல்வி கண்டதில் இருந்து அவரின் எதிர்கால அரசியல் எப்படி அமையும் என்பதை ஊகிக்க முடியும். ம.தி.மு.க.வும் இந்தத் தேர்தலில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தனது கூட்டு பற்றி மீளாய்வு செய்யவும் கூடும். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு மட்டும்தான் கைவசம் எட்டும் நிலையில் உள்ளது.

ஜெயலலிதாவின் இன்றைய கூற்று அவரது நிலையில் தெளிவோ மாற்றமோ இருக்காது, இருக்கப் போவதும் கிடையாது என்பதையே காட்டுகிறது. இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழர் உணர்வலைகள் அடுத்த தேர்தலிலும் பிரதிபலிக்குமா? அப்போது இன்று இந்த அலையில் பசியாறும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜெயலலிதாவோடு கூட்டு வைத்திருக்கும் நிலையில் எத்தகைய வாக்குப் பலம் பெறும் என்பன கேள்விகளுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.

இந்த நிலையில் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் அனுதாப அலைகள் மேலும் ஏறாத படிக்கு அம்மணியின் செயற்பாடு ஆப்பு வைப்பதாகவே உள்ளது. இதில் ம.தி.மு.க. பலியாகும் நிலையும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த ஈழத் தமிழர் பிரச்சினையும் மக்கள் ஆதரவு அற்றுத் தேர்தலில் தி.மு.க. வெற்றியாக மாறும் நிலையும் வரலாம்.

இதற்கு மாற்றீடாக பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடக் கழகம் ம.தி.மு.க. கம்மியூனிஸ்ட் கட்சிகள் பா.ஜ.க. ஆதரவுடன் ஈழத் தமிழருக்கு ஆதரவான மத்திய ஆட்சியை அமைக்கும் நிலை வந்தால் மட்டுமே ஈழத் தமிழருக்கு ஒரு விமோசனம் ஏற்படும். இந்திய ஆதரவுடன் அமைதிகாணும் நிலை ஈழத் தமிழனத்துக்கு இனியும் வருமா என்பதை அடுத்த இந்திய பொதுத் தேர்தல்களின் முடிவுதான் வெளிப்படுத்தும். இப்போதைக்கு இந்திய ஆதரவு இல்லாத நிலையில் ஈழத் தமிழினம் தனது போராட்டத்தில் வெற்றி காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனை எமது இனம் புரிந்து கொண்டு, தொடர்ந்தும் தனித்து நின்றே போராட முற்படுமா?.

-த.எதிர்மனசிங்கம்-


Comments