வன்னி "மக்கள் காப்பு வலயம்" மீது ஞாயிறு இரவு வான் எரி குண்டுத் தாக்குதல்: 18 தமிழர்கள் படுகொலை; 71 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் காப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர்.

மூங்கிலாற்றில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணியளவில் "பரசூட்" மூலம் எரிகுண்டுகளை வீசி தாக்கியுள்ளது.

இதில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


சேதமடைந்த மருத்துவமனையின் பகுதி


எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்

இதேவேளையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை நோக்கி நேற்று இரவு 11:00 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மருத்துவமனையின் பெண் நோயாளர் பகுதியில் பெருமளவிலான எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த மருத்துவமனை வளாகப் பகுதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியகங்களும் இருக்கின்றன.

மருத்துவமனை மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.


கொல்லப்பட்ட நிலையில் வயோதிப பெண்


எறிகணைத் தாக்குதல் அச்சத்தினால் பாதுகாப்பு தேடும் சிறுவர்கள்



Comments