"மக்கள் காப்பு வலயம்" மீண்டும் கொலைக்களமானது: அடைக்கலம் புகுந்தோரில் 26 தமிழர்களை இன்று எரிகுண்டுகளால் தாக்கிக் கொன்றது சிறிலங்கா

52 பேருக்கு எரிகாயம்!முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம் மற்றும் தேராவில் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் 26 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்றைய தாக்குதல்களில் - எரிகாயங்களை ஏற்படுத்தும் குண்டுகளை சிறிலங்கா படையினர் பொதுமக்களை நோக்கி பிரயோகித்து இருக்கின்றனர் என சம்பவ இடத்தை நேரில் அவதானித்த "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்றைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தோர் எல்லோருமே கடுமையான எரிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் -

13 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அதே போல, முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடாத்திய தாக்குதலில் -

6 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதலில் -

7 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு - முல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினரின் இந்த தாக்குதல்களினால் மக்களின் பெருமளவிலான வீடுகள், வாகனங்கள், வணிக நிறுவனங்கள் என்பன முற்றாக அழிந்தும், சேதமடைந்த வண்ணமும் உள்ளன எனவும் -

சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்குத் தப்புவதற்காக மக்கள் பெரும் அவலப்பட்டு - பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்து ஓடுகின்ற சூழ்நிலையிலேயே, அவர்கள் மீது இவ்வாறான படுகொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


Comments