வன்னி மக்களை 3 ஆண்டுகள் முகாமில் வைத்திருக்க மகிந்த அரசு திட்டம்: அனைத்துலக தொண்டர் நிறுவனங்கள் மறுப்பு

வன்னிபெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்றுள்ள மக்களை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தற்காலிக முகாம்களில் தங்கவைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு ஏற்ற வகையில் மக்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் எனவும் அதற்கான நிதி உதவிகள் தேவைப்படுகின்றது என்றும் மகிந்த அரசாங்கம் தங்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நிதி உதவி செய்ய முடியாது என்றும் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே இடம்பெயர்ந்த மக்களை பாராமரிக்க முடியும் எனவும் அரசாங்கத்திடம் கூறியுள்ளதாக தொண்டர் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டும் என அரசாங்கத்திற்கு விளக்கமளித்துள்ளதாகவும் அனைத்துலக தொண்டர் நிறுவனங்கள் கூறுகின்றன.

இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் ஒன்பது முகாம்களிலும் மன்னாரில் ஒரு முகாமிலும் மூன்று ஆண்டுகளுக்கு தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மக்கள் எவரும் வெளியே செல்ல வேண்டிய அவசியம் எதுவும் இன்றி முகாமை சூழவுள்ள பகுதிகளிலேயே அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக வங்கிகள், தபாலகங்கள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட அனைத்தும் முகாமுக்குள்ளேயே அமையக் கூடியவாறு வீட்டுத்திட்டங்களை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் மற்றும் அனைத்துலக பொது நிறுவனங்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

அனைத்துலக உதவிகளுடன் முகாம்கள் அமைக்கப்பட்டாலும் அவற்றை படையினரே நிர்வகிப்பர் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஒரு வார காலமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க, வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம ஆகியோர் அனைத்துலக தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதாக கொழும்பில் உள்ள ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்த கோரிக்கை தொண்டர் நிறுவனங்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, படையினரால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றை அகற்றுவதற்கு மூன்று ஆண்டுகள் செல்லும் எனவும் அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க காரணம் கூறியுள்ளார்.

அதேவேளை, அரசாங்கத்தின் இந்த திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட மாற்று கொள்கை மையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து மக்களை வெளியே செல்லவிடாது மூன்று ஆண்டுகள் குறிப்பட்ட ஒரு முகாமுக்குள் அடைத்து வைத்திருக்க முற்பட்டால் அது தமிழ்த் தேசிய வாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் என கூறியுள்ளார் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Comments