வன்னியில் புதன் அதிகாலை சிறிலங்கா கோரத் தாக்குதல்: 49 சிறுவர்கள் உட்பட 108 தமிழர்கள் தூக்கத்திலேயே கொத்துக் குண்டுகளுக்கு பலி; 223 காயம்

வன்னியில் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர்.

"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொரடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.

தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர்.

அப்பகுதியில் இருந்து மக்களின் பெரும் ஓலங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை வேளை இருளில் நடைபெற்ற தாக்குதல் என்பதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து - அவலப்பட்டு - நாலாபக்கமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மேலதிக தகவல் இதுவரை கிடைக்கவில்லை.



Comments