அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ளதாக தெரிவிப்பது கேலிக்கூத்து - மனோ கணேசன் எம்.பி

தமிழ் மக்கள் மீது இந்திய மத்திய அரசாங்கம், தமிழக ஆட்சியாளர்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் பூரண திருப்தியில்லையென்ற போதும் எம் மக்களுக்காக தமிழக மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்கள் உணர்ச்சிவசப்படச் செய்வதோடு தலைவணங்கச் சொல்கிறது.

எனவே சிறீலங்காவில் சிங்கள பௌத்த பேரினவாத ராஜ்ஜியத்தை உருவாக்க முயலும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதாகத் தெரிவித்திருப்பது கேலிக்கூத்தாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தமிழ் மக்கள் மீது அதிக அக்கறையை அரசாங்கம் கொண்டுள்ளதென கூறியிருப்பது தொடர்பாக பதிலளிக்கும்போதே மனோ கணேசன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியை விட தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை செலுத்துவதாக தெரிவித்துள்ளமை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

மேற்கண்டவர்களின் தமிழ்மக்கள் மீதான அக்கறை தொடர்பில் எமக்கு பூரணமான திருப்தியில்லை. ஆனால் தமிழக மக்களின் போராட்டங்கள் எம்மக்களுக்காக உயிரையே துச்சமென மதித்து தீக்குளிக்கின்றமை போன்றவை எம்மை உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமா எமது உடன் பிறப்புக்கள் வாழும் மலேஷியா உட்பட அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஆனால் எம் மக்களுக்காக எமது மண்ணில் போராட்டங்களை நடத்த முடியாது எங்களைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள்மீது எந்தவிதமான அக்கறையையும் அரசாங்கம் காட்டுவதாகத் தெரியவில்லை. மாறாக அம்மக்கள் மீதான நெருக்கடிகளே தொடர்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments