ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பில் இலங்கை கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும்

ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கேட்டுள்ளது. சத்தியமூர்த்தி கடந்த 12 ஆம் திகதி இலங்கைப் படையினரின் எறிகணை வீச்சுச் தாக்குதல்களில் படுகாயமடைந்துள்ளார்.

சத்தியமூர்த்தி நீண்டகாலமாக பல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தியளிக்கை மற்றும் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை மற்றும் கவிதைகளை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண நகரத்தில் வசித்து வந்த அவர், தமிழீழம் அல்லது சுதந்திரமான தமிழ் தாய்நாடு தொடர்பில் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

அவர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தனது ஊடக பங்களிப்பை செய்து வந்தார். எனினும் சத்தியமூர்த்தி கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் எந்தத் தரப்புக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டதில்லை என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1738வது தீர்மானத்தின் அடிப்படையில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களை அங்கீகரித்து, பொதுமக்கள் மற்றும் ஆயுதம் தரிக்காதவர்களைப் பாதுகாக்குமாறு தாம் மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பி;ட்டுள்ளது.

ஆயுத மோதல்களின் போது, ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைய வன்முறையாகும்.

சத்தியமூர்த்தியின் அரசியல் பார்வை எதுவாக இருந்த போதிலும், அவர் இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான போர்க்களப் பகுதியில் ஆபத்தான ஊடகப் பணியை மேற்கொண்டிருந்தாக சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஹெய்டன் வைய்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் மரணம் குறித்து விசாரணைகளை நடத்தி, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பகுதியில் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்;டுள்ளார்.

அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவிபுரம் பகுதியின் மீது இலங்கைப் படையினர் மேற்கொண்ட தாக்குதலிலேயே சத்தியமூர்த்தி கொல்லப்பட்டதாக தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையில் உள்ள உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடக அமைப்புகளை அச்சுறுத்தும் வகையிலான முனைப்புகளை மேற்கொண்டு போர் தொடர்பான சுயாதீன தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வழிகளை அடைத்;துள்ள நிலையிலேயே சத்தியமூர்த்தியின் மரணம் சம்பவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 12க்கும் மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். மிக நீண்டகால சிவில் யுத்தத்தில் அரசாங்கம் அதிகளவான வெற்றிகளை பெற்றும் வரும் வேளையில் இலங்கையின் ஊடக சுதந்திர சூழல் படிபடியாக சீர்குலைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.


Comments