தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு - சத்தியமூர்த்தியின் இழப்புக் குறித்து ஈழமுரசு


குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது என ஈழமுரசு இதழ் வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈழமுரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.

சாவிற்குள் வாழ்ந்துகொண்டு தாயக மண்ணில் நடக்கின்ற நிகழ்வுகளை மிகவும் திறமையாக எடுத்துக்கூறியும், எழுதியும் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள் மனங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டவர் சத்தியமூர்த்தி.

புலம் பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட இவர், தொலைக்காட்சிகள், வானொலிகள், நாளேடுகள் மற்றும் இணையத் தளங்களில் இவரது அரசியல் ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் இடம்பெற்று வந்த நிலவரம் அரசியல் ஆய்வு நிகழ்ச்சி மற்றும் அரசியல் ஆய்வுப் பத்திகள், தாயக நிலவரம், வாராந்த அரசியல் கண்ணோட்டம் போன்றவற்றில் இடம்பெற்ற இவரது ஆய்வுகள் தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளத் தக்க வகையிலும், அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிமையாக இருந்த இவரது எழுத்துக்களும், கருத்துக்களும் உலகத் தமிழ் மக்களால் அதிகளவில் இவரது ஆய்வுகள் விருப்புடன் வரவேற்கப்பட்டதற்கு காரணமாக அமைந்திருந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம்.

ஈழமுரசிற்கும் இவருக்கும் இடையிலான தொடர்பு மிகவும் காத்திரமானது. ஈழமுரசுக்கு தனது ஆய்வுகளை மட்டுமல்ல ஆலோசனைகளையும் வழங்கி அதன் வளர்ச்சிக்கு பக்க பலமாக நின்றவர். குறிப்பாக ஈழமுரசில் வருகின்ற மகிந்த சிந்தனைப் படுகொலை என்ற பக்கத்தின் வருகையை இவர் பாராட்டியதுடன், அதன் கனதியும் எதிர்காலத்தில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதையும் தனது ஈழமுரசிற்கான வாழ்த்துரையின் போது எடுத்துக் கூறியிருந்தார்.

மகிந்த சிந்தனைப் படுகொலைகளை ஆவணப்படுத்துவதற்கும் இதனை வேற்று மொழிகளில் மொழிபெயர்த்து உலக நாடுகளின் பார்வைக்கு வைப்பதற்கும் இந்தப் பக்கம் எத்தனை தூரம் அவசியமானது என்பதை தனது வாழத்துரையின்போது மிகவும் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தவர். ஆனால், அதே மகிந்த சிந்தனைப் படுகொலைக்குள் சத்தியமூர்த்தி அவர்களும் உள்ளடக்கப்படுவார் என்று நாம் சற்றும்கூட எதிர்பார்க்கவில்லை.

இளம் வயதிலேயே மிகவும் சிறந்த ஒரு உடகவியலாளராக பரிணமித்து வந்த இவர், நீண்ட காலம் எங்கள் மண்ணில் வாழ்ந்து தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பாரிய பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், சிறிலங்கா அரசின் கொடூர இனப்படுகொலைக்குள் ஏற்கனவே பல ஊடகவியலாளர்களை இழந்திருந்த தமிழினம், இப்போது இன்னொரு சிறந்த ஊடகவியலாளரையும் இழந்திருக்கின்றது.

இவரது இழப்பு இவர் பணியாற்றிய ஊடக இல்லத்திற்கு மட்டுமல்ல, தமிழ் ஊடகத்துறைக்கே பெரும் இழப்பு. இந்த நிலையில், இவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினரின் துயரத்தில் ஈழமுரசும் பங்கெடுத்துக்கொள்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நானாக இருப்பேன் என்று சொன்னவர் இன்று போய் விட...


Comments